Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்தியா-கென்யா வர்த்தக கூட்டமைப்புக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் உரை

இந்தியா-கென்யா வர்த்தக கூட்டமைப்புக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் உரை


மேதகு கென்ய அதிபர் உகுரு கென்யாட்டா அவர்களே,

அமைச்சரவைச் செயலாளர்களே,

வர்த்தகம் மற்றும் தொழில் துறை சங்கங்கள் மற்றும் கூட்டமைப்புகளின் தலைவர்களே,
கென்யா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த வர்த்தக நண்பர்களே,

மகளிரே, ஆடவரே!

பிரதமராக கென்யாவுக்கு நான் மேற்கொண்ட முதல் பயணத்தில் உங்களுடன் இருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இந்தியர்கள், குறிப்பாக குஜராத்தியர்களுக்கு, இரண்டாவது வீடாக கென்யா உள்ளது. இதன் அடிப்படையில், இந்த மாபெரும் நாட்டுக்கு நான் தாமதமாகவே பயணம் மேற்கொண்டுள்ளேன். இந்திய பிரதமர் இங்கு வருவதற்கு நீண்ட இடைவெளி, அதாவது சுமார் 35 ஆண்டுகள் ஏற்பட்டுள்ளது. எனினும், தனிப்பட்ட முறையில்,

கென்யாவுடன் எனக்கு தொடர்பு நீடித்து வருகிறது. குஜராத் முதலமைச்சர் என்ற முறையில், கென்யாவுக்கு 2008-ம் ஆண்டில் நான் வந்தேன். கென்யாவைச் சேர்ந்த அரசு குழுவினரும் குஜராத்துக்கு வந்தனர்.

சுதந்திரமடைந்தது முதலே, நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காகவும்,

நிலைத்தன்மைக்காகவும் பாடுபட்ட கென்ய மக்களுக்கும், தலைமைக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டின் பொருளாதாரமும், அதன் கட்டமைப்பும், இந்தப் பிராந்தியத்தில் கென்யாவை முக்கியத்துவம் பெற்ற நாடாக மாற்றியுள்ளது. ஐ.நா. அமைப்பின் தலைமையகத்தைக் கொண்ட ஒரே வளரும் நாடாக நீங்கள் திகழ்கிறீர்கள்.

நண்பர்களே!

இந்தியாவுக்கும், கென்யாவுக்கும் மிகவும் சிறப்பான உறவு உள்ளது.

• 19-வது மற்றும் 20-ம் நூற்றாண்டுகளில் ரயில்வே கட்டுமானப் பணிகளுக்காக ஆயிரக்கணக்கான இந்தியர்கள் இங்கு அழைத்துவரப்பட்டனர்.

• காலனி ஆதிக்கத்துக்கு எதிரான போராட்டத்துக்கு இரு நாடுகளுக்கும் உந்துசக்தியாக மகாத்மா காந்தி திகழ்ந்தார்.

• கென்யாவில் 1953-ம் ஆண்டுமுதலே இந்திய வங்கிகள் செயல்பட்டு வருகின்றன.
• மிகவும் பிரபலமான தேயிலையான கெரிச்சோ-வின் (Kericho) முதல் செடி, நமது அசாம் மாநிலத்திலிருந்து இங்கு கொண்டுவரப்பட்டது.

• இங்கு குடிமக்களாக இருப்பதுடன், கென்யாவுக்கு அதிக அளவில் வரும் சுற்றுலாப் பயணிகளில் இந்தியர்கள் 3-ம் இடம் பிடித்துள்ளனர்.

• வாழ்வதற்கும், கற்றுக் கொள்வதற்கும், பணியாற்றுவதற்கும் மிகவும் சிறப்பான இடமாக இந்தியாவை உங்களது கல்வியாளர்களும், மாணவர்களும் கருதுகின்றனர்.

• ஸ்வாகிலி (Swahili) மொழியில் பயன்படுத்தப்படும் பெரும்பாலான வார்த்தைகள், இந்திய மொழிகளை அடிப்படையாகக் கொண்டே வந்தவை.

• இரு நாடுகளுமே இந்தியப் பெருங்கடல் மூலம், மிகவும் பழமையான கடல்சார் தொடர்பைக் கொண்டுள்ளன.

• பெரும்பாலான இந்திய நிறுவனங்கள், ஒட்டுமொத்த கிழக்கு ஆப்பிரிக்காவில் செயல்படுவதற்கு, தங்களது தளமாக கென்யாவையே கொண்டுள்ளன.

மேதகு அதிபர் அவர்களே, தினசரி வாழ்க்கையில் சூரிய மின்சக்தியை பயன்படுத்துவதற்கு உங்களது அரசு அதிக முக்கியத்துவம் அளித்துவருவதை அறிவேன். நாங்களும் முக்கியத்துவம் வாய்ந்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். இந்தியாவுக்கும், கென்யாவுக்கும் போதிய அளவில் சூரியக் கதிர்வீச்சுகள் கிடைக்கின்றன. புவி வெப்பமயமாதலுக்கு உண்மையான தீர்வாக சூரிய மின்சக்தி உள்ளது. தொலைதூர கிராமங்கள் மற்றும் குடியிருப்புகளுக்கு மின்சார விநியோகம் வழங்குவதற்கு இதுவே சிறந்த உத்தியாக உள்ளது. இந்த விவகாரத்தில், சர்வதேச சூரிய மின்சக்தி கூட்டமைப்பின் கீழ், நாம் இணைந்து பணியாற்றுவதை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளோம்.

இதேபோல, இருதரப்பும் இணைந்து செயல்படுவதற்கு முக்கிய துறையாக சுகாதாரத் துறை விளங்குகிறது. கென்யாவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான நோயாளிகள், இந்தியாவில் வெற்றிகரமாக சிகிச்சை பெற்று தாயகம் திரும்பியதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். மருத்துவத் துறையில் இந்தியாவின் அனுபவங்களை பயன்படுத்தவும், இந்தப் பிராந்தியத்தின் மருத்துவ முனையமாக மாறவும் கென்யா விரும்புவதை நான் புரிந்துகொண்டுள்ளேன். இந்த முயற்சியில் உங்களுக்கு ஆதரவு தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.

நமது நல்லுறவின் ஆழத்தை வெளிப்படுத்தவும், ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளாகவும் சில காரணிகள் உள்ளன.

நண்பர்களே!

• கடந்த காலங்களில் நாம் எதிர்கொண்ட கடுமையான சூழல்கள் ஒரே மாதிரியானவை.

• தற்போது நமது பிரச்சினைகள் அனைத்தும் ஒரே மாதிரியானவை.

• நமக்கு எதிரிகள் பொதுவானவர்கள்.

• தொடக்கத்தில் காலனி ஆதிக்கத்தின் கீழேயே இருந்தோம்.

• தற்போது வறுமையை எதிர்கொண்டு வருகிறோம்.

எனவே, கடந்த காலங்களில் ஒன்றாக இணைந்து பணியாற்றினோம். தற்போதும்கூட, இணைந்து பணியாற்ற வேண்டும். கென்யாவைப் போலவே, இந்தியாவும் இளம் நாடு. உங்களது பணியாளர்கள், ஆப்பிரிக்க நாடுகளுக்கு தேவைப்படுகிறார்கள். இதேபோல, இந்தியாவில் உள்ள பணியாளர்கள், ஒட்டுமொத்த உலகுக்கும் தேவைப்படுகிறார்கள். நாம் இருவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, இந்த மனிதவளத்தை ஊக்குவித்து, பயிற்சி அளிப்பதன் மூலம், ஒட்டுமொத்த உலகுக்கும் வழங்க முடியும்.

இன்று, உலகில் அதிவேகமாக வளர்ந்து வரும் மிகப்பெரும் பொருளாதாரமாக இந்தியா திகழ்கிறது. பொருளாதாரத்தில் அதிக வளர்ச்சியைப் பெற்றிருப்பதோடு மட்டுமல்லாமல், சர்வதேச அளவில் பல்வேறு விவகாரங்களிலும் முன்னேற்றம் கண்டுள்ளோம்.
• எளிதாக தொழில் செய்வதற்கு வாய்ப்புள்ள நாடுகள் குறித்து உலக வங்கி வெளியிட்ட சர்வதேச தரவரிசைப் பட்டியலில் 12 இடங்கள் முன்னேறியுள்ளோம்.

• உலக அளவில் போட்டியிடும் திறன் பெற்ற நாடுகள் குறித்து உலக பொருளாதார கூட்டமைப்பு (World Economic Forum’s global competitive index) வெளியிட்ட பட்டியலில் இந்தியா 16 இடங்கள் முன்னேறியுள்ளது.

நண்பர்களே!

இந்தியாவில் கடந்த 2 ஆண்டுகளில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. தற்போது, அந்நிய நேரடி முதலீட்டுக்கு மிகவும் விரும்பத்தக்க நாடாக இந்தியா திகழ்கிறது. 2015-ம் ஆண்டில், இதுவரை இல்லாத அளவுக்கு அந்நிய நேரடி முதலீட்டைப் பெற்றுள்ளோம். உங்களுக்கான மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால், கென்யாவின் மிகப்பெரும் வர்த்தக கூட்டாளியாக இந்தியா உள்ளது. இங்கு இரண்டாவது பெரும் முதலீட்டாளராக இந்தியா உள்ளது. நமக்கு இடையேயான வர்த்தக சமநிலையற்ற தன்மையை நீக்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைவோம். கென்யாவில் முதலீட்டு அளவை அதிகரிக்கவும் விரும்புகிறோம்.
உங்களுடனேயே இந்தியா உள்ளது என்பதை கென்ய அரசுக்கும், மக்களுக்கும் நான் இங்கு உறுதியளிக்கிறேன். நமது நட்புறவு என்பது, இருதரப்புக்கும் வெற்றி அளிக்கும் போட்டியாக மட்டுமே இருக்கும். இந்தியாவில் இருக்கும் கென்ய மாணவர்கள், கென்யாவில் இருக்கும் இந்திய நிபுணர்கள் என இருதரப்புமே வெற்றியடைய வேண்டும். சுரங்கங்கள், தாதுக்கள் அல்லது இயந்திரங்கள் என எதுவாக இருந்தாலும், அனைத்துமே பலனளிக்கும் பகுதிகள் தான். நாம் இணைந்து வாய்ப்புகளைக் கண்டறிய வேண்டும். இதனை நோக்கமாகக் கொண்டே, எனது பயணத்தில் இந்தக் கூட்டம் உள்ளிட்ட பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண்டுவருகிறேன்.

நண்பர்களே!

உங்களது நடவடிக்கைகளை வலுப்படுத்தவும், வளங்களை மேம்படுத்தவும் இந்தியா தொடர்ந்து பணியாற்றும் என்று கென்யாவுக்கு நான் உறுதியளிக்கிறேன்.

• இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தை நாங்கள் தொடங்கியிருப்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

• உலகின் உற்பத்தி மையமாக இந்தியாவை மாற்ற இதனை தொடங்கியுள்ளோம்.

• இதேபோல, நீங்களும் கென்யாவில் தயாரிப்போம் திட்டத்தை தொடங்கியுள்ளீர்கள்.

• தொழிலை ஊக்குவிக்கவும், வாய்ப்புகளை ஏற்படுத்தவும் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளீர்கள்.

• உண்மையில், இரண்டுமே ஒன்றுக்கு ஒன்று ஆதரவானவை.

• நமது உறுதி என்பது,

• மக்களுக்கான எதிர்காலத்தை உருவாக்குவது

• இருதரப்பிலும் மக்கள் ஒரே மாதிரியானவர்கள்.

• இந்த நாட்டின் அடித்தளத்தை இந்தியர்கள் அமைத்துள்ளார்கள்.

• சுதந்திரமான இறகுகளில் இந்தியர்களின் ரத்தம் கலந்துள்ளது.

• நம்மைப் பொருத்தவரை, நாம் கென்யாவில் தயாரிப்போம் திட்டத்தில் உள்ளோமா,

அல்லது இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தில் உள்ளோமா என்பதைப் பற்றி கவலையில்லை.

மேலும் நண்பர்களே!

கென்யாவில் தயாரிப்போம் திட்டத்துக்கு எங்களது ஆதரவை வெளிப்படுத்தும் வகையில்,

கென்யாவில் தொழில் செய்வதற்கான வழிகாட்டி புத்தகத்தை நாங்கள் அச்சடித்துள்ளோம்.

இது இந்திய முதலீட்டாளர்களுக்கு இங்கு முதலீடு செய்வதற்கு வழிகாட்டியாக இருக்கும்.

இந்தப் புத்தகத்தை மேதகு கென்ய அதிபருக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

நன்றி!