Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்தியா- கொரியா வர்த்தக உச்சி மாநாடு – 2018-ல் பிரதமர் ஆற்றிய உரை

இந்தியா- கொரியா வர்த்தக உச்சி மாநாடு – 2018-ல் 
பிரதமர் ஆற்றிய உரை

இந்தியா- கொரியா வர்த்தக உச்சி மாநாடு – 2018-ல் 
பிரதமர் ஆற்றிய உரை

இந்தியா- கொரியா வர்த்தக உச்சி மாநாடு – 2018-ல் 
பிரதமர் ஆற்றிய உரை


கொரியக் குடியரசின் வர்த்தக, தொழில், மின்சாரத்துறை அமைச்சர் அவர்களே,

இந்திய அரசின் வர்த்தக, தொழில்துறை அமைச்சர் அவர்களே,

சோசுன்-இல்போ குழுமத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாகி அவர்களே,

கொரியா மற்றும் இந்தியாவின் வர்த்தகத் தலைவர்களே,

சீமாட்டிகளே, கனவான்களே,

உங்களிடையே இக்கூட்டத்தில் கலந்துகொள்வது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியாவில் இவ்வளவு பெரிய கொரிய நிறுவனங்களின் கூட்டம் என்பது ஒரு பெரிய உலகளாவிய வரலாறு எனலாம். உங்கள் அனைவரையும் இந்தியாவுக்கு வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இந்தியாவுக்கும், கொரியாவுக்கும் இடையிலான உறவுகள் பல நூற்றாண்டுகள் பழைமையானவை. இந்திய இளவரசி ஒருவர் கொரியாவுக்குப் பயணமாகச் சென்று, பின்னர்  கொரிய நாட்டின் ஒரு மகாராணி ஆனார். நமது இரு நாடுகளும் புத்தப் பாரம்பரியத்தால் பிணைக்கப்பட்டுள்ளன. 1929-ஆம் ஆண்டு கொரியாவின் பிரகாசமான பண்டைய காலம், அதன் ஒளிமிக்க எதிர்காலம் ஆகியவை குறித்து லாம்ப் ஆஃப் த ஈஸ்ட் – என்ற தலைப்பில் நோபல் விருது வென்ற கவி ரவீந்திரநாத் தாகூர் ஒரு கவிதை இயற்றியுள்ளார். கொரியாவில் பாலிவுட் திரைப்படங்கள் மிகவும் பிரபலமானவை. சில மாதங்களுக்கு முன் இந்தியாவில் நடைபெற்ற புரோ- கபாடி போட்டிகளின் போது, கொரிய நாட்டு கபடி விளையாட்டு வீரர் ஒருவர் ரசிகர்களின் மிக உற்சாகமான பாராட்டுகளைப் பெற்றார். இந்தியாவும், தென்கொரியாவும் ஆகஸ்ட், 5-ஆம் தேதி தங்களது விடுதலை தினத்தைக் கொண்டாடுவது ஒரு சிறப்பு அம்சமாகும். இளவரசி முதல் கவிதை வரை, புத்தர் முதல் பாலிவுட் வரை நம்மிடையே பொதுவான பல அம்சங்கள் உள்ளன.

நான் முன்னமேயே குறிப்பிட்டபடி, கொரியா குறித்து நான் எப்போதும் மனம் லயித்துப் போயிருக்கிறேன்.  நான் குஜராத் முதலமைச்சராக இருந்தபோது கொரியாவுக்குப் பயணம் மேற்கொண்டேன். குஜராத் மாநிலத்தின் அளவே உள்ள ஒருநாடு எவ்வாறு இவ்வளவு சிறப்பான பொருளாதார முன்னேற்றம் அடைய முடியும் என நான் ஆச்சரியப்பட்டுள்ளேன். கொரிய மக்களின் தொழில்முனைவு ஆர்வத்தை நான் பாராட்டுகிறேன்.  கொரியா உலகளாவிய வர்த்தகப் பெயர்களை உருவாக்கி நிலை நிறுத்தியிருப்பது குறித்து நான் வியப்படைந்திருக்கிறேன். தகவல் தொழில்நுட்பம், மின்னணுவியல் முதல் மோட்டார் வாகனம் மற்றும் எஃகு வரை கொரியா மிகவும் உதாரணமான உற்பத்தி பொருட்களை உலகிற்கு அளித்துள்ளது. கொரியா நிறுவனங்கள் அவற்றின் புதுமைப்படைப்பு, வலுவான தயாரிப்புத்திறன் ஆகியவற்றுக்காகப் பாராட்டு பெறுகின்றன.

நண்பர்களே!

கடந்த ஆறு ஆண்டுகளில் முதல் முறையாகச் சென்ற ஆண்டு நமது இருதரப்பு வர்த்தகம் 2000 கோடி டாலர் அளவைத் தாண்டி உள்ளது என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. 2015-இல் நான் மேற்கொண்ட பயணம் இந்தியா மீது நல்ல கவனத்தைப் பெற்றுத்தந்தது. உங்கள் நாட்டுத் திறந்தசந்தைக் கொள்கைகள் இந்தியப் பொருளாதார தாராளமயமாக்கல் மற்றும் கிழக்கு நோக்கிய கொள்கை ஆகியவற்றில் எதிரொலிக்கின்றன. 500க்கும் மேற்பட்ட கொரிய நிறுவனங்கள் இந்தியாவில் செயல்பட்டுவருகின்றன. உண்மையில் பார்க்கப்போனால் உங்கள் நாட்டு உற்பத்திப் பொருட்கள் பல, இந்தியாவில் வீட்டு உபயோகப் பொருட்களின் பெயராக விளங்குகிறது. எனினும் இந்தியாவுக்கான அந்நிய நேரடி முதலீட்டு வரத்தைப் பொறுத்தவரை இந்தியா 16-ஆவது இடத்தில்தான் உள்ளது. கொரியா முதலீட்டாளர்களுக்கு இந்தியாவில் உள்ள பெரிய சந்தை மற்றும் வசதியான கொள்கைச் சூழல் ஆகியன நல்ல வாய்ப்புகளை வழங்குவதாக அமைந்துள்ளன.

உங்களில் மிகப்பலர் இந்தியாவில் ஏற்கெனவே இடம் பெற்றிருப்பதால் இங்குள்ள உண்மைநிலவரங்கள் உங்களுக்கு ஏற்கெனவே தெரிந்திருக்கும். தற்போது நீங்கள் இந்திய நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகளுடன் மேற்கொண்ட கலந்துரையாடலில் இருந்து இந்தியா எந்தத் திசை நோக்கிப் போகிறது என்பதைத் தெரிந்திருப்பீர்கள். எனினும், மேலும் சில நிமிடங்களை எடுத்துக்கொண்டு இந்தியாவில் இடம்பெறாதவர்களை இந்தியாவுக்குத் தனிப்பட்ட முறையில் அழைக்க இந்தத் தருணத்தைப் பயன்படுத்திக்கொள்கிறேன். உலகைச் சுற்றி நீங்கள் நோக்கினால்,  மிகச்சில இடங்களில்தான் பொருளாதார முக்கியக் காரணிகளில் மூன்று, ஒரு சேர அமைந்திருப்பதைக் காணமுடியும். அந்த காரணிகளாவன : ஜனநாயகம், மக்கள்தொகை, தேவைகள். இந்தியாவில் இந்த மூன்றும் ஒருங்கிணைந்து உள்ளன. ஜனநாயகம் என்று சொல்லும்போது, அனைவருக்கும் சுயேச்சையான நியாயமான வாய்ப்புகளை உறுதி செய்யும் தாராளநெறிகளுடன் கூடிய அமைப்பு என்றே நான் பொருள் கொள்கிறேன். மக்கள்தொகை என்று சொல்லும்போது மிகப்பெரிய திறன் மிக்க இளமையான ஆற்றலுடன் கூடிய தொழிலாளர்களை நான் பொருள் கொள்கிறேன். சேவை என்று சொல்லும்போது பொருட்கள் மற்றும் சேவைகளுக்காக வளர்ந்துவரும் பெரிய சந்தை என்று நான் பொருள் கொள்கிறேன். உள்ளூர் சந்தைகளில் உயர்ந்துவரும் நடுத்தர வகுப்பினர் புதிய வளர்ச்சியை ஏற்படுத்திவருகின்றனர். நிலையான வர்த்தகச்சூழல், சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்தல், முடிவு எடுத்தல் முறைகளில் தான்தோன்றித்தனத்தை அகற்றுதல் போன்றவை நோக்கி நாம் பாடுபட்டுள்ளோம். அன்றாடப் பரிவர்த்தனைகளில் நாம் நேர்முகத்தன்மையை நாடுகிறோம். சந்தேகத்திற்கு உரியவற்றை ஆராய்வதற்குப் பதிலாக நம்பிக்கைக்கு உரிய பகுதிகளை விரிவாக்கிவருகிறோம். இந்த நடைமுறை முற்றிலும் மாறுபட்ட அரசின் மனப்பான்மையைக் காட்டுகிறது. வர்த்தகக் கூட்டாளிக்கு ஆணைகள் வழங்குவது என்பதிலிருந்து குறைந்தபட்ச ஆட்சி, அதிகப்பட்ச ஆளுகை என்ற நிலையை அடைந்துள்ளோம். இது நடைபெற்றுள்ள நிலையில் விதிகள்  மற்றும் நடைமுறைகள் எளிமையாக்கப்படுவதும் தானாகவே தொடங்கிவிடுகிறது.

வர்த்தகம் புரிதலில் எளிமை என்பது கோருவதும் இதுதான். இத்தகைய நடவடிக்கைகள் மூலம் தற்போது நாம் வாழுதலில் எளிமை என்பதை நோக்கி பணியாற்றிவருகிறோம். தற்போது நாம் கட்டுப்பாடுகளை அகற்றுதல், உரிமத்தை அகற்றுதல் ஆகியவற்றை விரைந்து மேற்கொண்டுவருகிறோம். தொழிலியல் உரிமங்களின் தகுதிக் காலம் மூன்றாண்டுகளில் இருந்து 15 அல்லது அதற்கும் மேற்பட்ட ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளன. பாதுகாப்பு உற்பத்தித் துறையில் தொழிலியல் உரிமம் வழங்கும் நடைமுறை பெரிதும் தாராளமயமாக்கப்பட்டுள்ளது. முன்னதாக, உரிம முறையின் கீழ் வரும் பொருட்களில் 65 முதல் 70 சதவீதம் வரையிலானவை தற்போது உரிமங்கள் ஏதுமின்றி உற்பத்தி செய்யப்படலாம். தற்போது தொழிற்சாலை ஆய்வு என்பது தேவை அடிப்படையில் அல்லது உயர் அதிகாரிகள் அனுமதி அளித்தால் மட்டுமே என்ற நிலையில் நடைபெறுகிறது. அந்நிய நேரடி முதலீட்டைப் பொறுத்தவரை தற்போது இந்தியா மிகவும் திறந்த நிலை நாடுகளில் ஒன்றாகியுள்ளது. எமது பொருளாதாரத்தின் பல துறைகள் தற்போது அந்நிய நேரடி முதலீட்டுக்குத் திறந்ததாகவே உள்ளன. 90 சதவீதத்திற்கும் கூடுதலான அனுமதிகள் தற்போது தானியங்கி வழிமுறையில் அமைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்புத்துறை தவிர இதர உற்பத்தித் துறைகளில் முதலீட்டுக்கு அரசின் அனுமதி தேவையில்லை என்ற நிலையே நிலவுகிறது. நிறுவனம் ஒன்றை அதற்குச் சட்டப்படியான எண்கள் வழங்குவது உள்ளிட்ட பதிவு நடைமுறை தற்போது ஒரே நாளில் முடிவடைந்துவருகிறது. வர்த்தகம், முதலீடு, ஆளுகை, எல்லை கடந்த வர்த்தகம் ஆகியவற்றில் ஆயிரக்கணக்கான சீர்திருத்தங்களை நாம் மேற்கொண்டுள்ளோம்.

ஜிஎஸ்டி போன்ற சில நடவடிக்கைகள் வரலாற்றுச் சிறப்பு மிக்கவை. ஜிஎஸ்டி நடைமுறை காரணமாக செயல்பாடுகள் எளிமையாகியிருப்பதை உங்களில் பலர் அனுபவித்து இருப்பீர்கள். ஆளுகையைக் குழப்பமானதாக செய்துவந்த 1,400-க்கும் மேற்பட்ட பழைய விதிகள் மற்றும் சட்டங்களை முற்றிலுமாக அகற்றி உள்ளோம். இத்தகைய நடவடிக்கைகள் எமது பொருளாதாரத்தை உயர் வளர்ச்சிப் பாதையில் கொண்டுசென்றுள்ளன. கடந்த மூன்று ஆண்டுகளில், அந்நிய நேரடி முதலீட்டு வரத்து மிக அதிக அளவு வளர்ச்சியடைந்துள்ளது. உள்நாட்டுத் தொழில்கள் புதிய சக்தியும். பிடிப்புத்தன்மையும் சேர்ந்துள்ளது. புதிய தொழில்கள் தொடங்குவதற்கு உகந்த சூழல் நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளன. தனிநபர் அடையாளம் மற்றும் கைபேசியில் விரைந்த முன்னேற்றம் ஆகியவற்றுடன் டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி நாங்கள் வேகமாக முன்னேறிவருகிறோம். சமீப ஆண்டுகளில் ஆன்லைனுக்கு மாறியுள்ள லட்சக்கணக்கான இந்திய மக்கள் என்ற பலத்தின் அடிப்படையில் செயல்படுவதே எங்கள் அணுகுமுறை. இவ்வாறாக, நவீனமயமாக்கப்பட்ட, போட்டியிடும் அதே சமயம் அன்புடன் கவனம் செலுத்தக்கூடிய புதிய இந்தியா உருவாகி வருகிறது. உலக மேடையைப் பொறுத்தவரை, கடந்த மூன்று ஆண்டுகளில் வர்த்தகம் புரிதலில் எளிமை, குறியீட்டெண்ணில் உலக அளவில் இந்தியா 42 இடங்கள் முன்னேறியுள்ளது, 2016 உலக வங்கியின் பொருள் போக்குவரத்து செயல்திறன் குறியீட்டில் 19 இடங்கள் முன்னேறியுள்ளது. உலகப்பொருளாதார மன்றத்தின் உலக  போட்டியிடும் தன்மைக் குறியீட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 31 இடங்கள் முன்னேறியுள்ளோம். உலகப் புதுமைப்படைப்பு மேம்பாட்டு அமைப்பின், உலகப் புதுமைப்படைப்பு குறியீட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 21 இடங்கள் முன்னேறியுள்ளோம். ஐ.நா.வின் வர்த்தக மேம்பாட்டு மாநாட்டு அமைப்பு – அங்டாட், நிறுவனத்தின் அந்நிய நேரடி முதலீட்டு இலக்குகள் பட்டியலின்படி இந்தியா முதல் பத்து நாடுகளில் இடம்பெற்றுள்ளது. இந்தியாவில் நிலவுவது உலக அளவில் தயாரிப்புச்செலவில் போட்டியிடும் திறன் உள்ள உற்பத்திக்கான அமைப்பாகும். இந்தியாவில் மிகப்பெரிய அளவில் திறன்படைத்த அறிவுசார்ந்த ஆற்றல் மிக்க தொழிலாளர்கள் உள்ளனர். தற்போது உலகத்தரம் வாய்ந்த பொறியியல் கல்வி அடித்தளத்தையும், வலுவான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு வசதிகளையும் இந்தியா பெற்றுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் நிறுவனங்கள் மீதான குறைந்த வரிஅமைப்பைச் செயல்படுத்தி வருகிறோம். இதன்படி புதிய முதலீடுகளுக்கும் சிறிய முயற்சிகளுக்கும் வரிகள் 30 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளன. இந்தியாவைப் பழைய நாகரிகம் என்ற நிலையிலிருந்து நவீனச் சமுதாயம் என்ற நிலைக்கு மாற்றி அமைக்கும் இயக்கத்தோடு இணைந்து பணியாற்றிவருகிறோம். துறைசாராத பொருளாதாரத்தை முறையான பொருளாதாரமாக மாற்றுவதில் எவ்வளவு விரிவான, பலதரப்பட்ட பணிகள் சம்பந்தப்பட்டுள்ளன என்பதை நீங்கள் அறிவீர்கள். வாங்கும் சக்தியைப் பொறுத்தவரை நாங்கள் ஏற்கெனவே உலகில் மூன்றாவது பொருளாதாரமாக உள்ளோம். மொத்த உள்நாட்டு உற்பத்தியைப் பொறுத்தவரை உலகின் ஐந்தாவது மிகப்பெரிய பொருளாதாரமாக விரைவில் மாறப்போகிறோம். இன்றைய உலகின் மிக விரைவாக வளர்ந்துவரும் பெரிய பொருளாதாரம் எங்களுடையதே. மேலும், உலகின் மிகச்சிறிய தொழில் தொடங்கும் சூழல் உள்ள நாடும் இந்தியாவாகும்.

திறன், வேகம் மற்றும் அளவு அடிப்படையில் உலக அளவில் போட்டியிடக்கூடிய தொழில் மற்றும் சேவைகள் துறை அடித்தளத்தை அமைப்பதே எமது நெடுநோக்கு. எனவே, எமது முதலீட்டுச்சூழலை மேம்படுத்துவதில் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். எமது இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதற்காக உற்பத்தித்துறையைப் பெரிய அளவில் மேம்படுத்த விரும்புகிறோம். இதற்காக, இந்தியாவில் தயாரிப்போம் என்ற இயக்கத்தைத் தொடங்கி உள்ளோம். இதில் எமது தொழிலியல் அடிப்படை வசதி, கொள்கை, நடைமுறைகள் ஆகியவற்றை உலகின் சிறந்த தரத்துக்கு இணையாகக் கொண்டுவருதல், இந்தியாவை உலக உற்பத்தி மையமாக மாற்றுதல் ஆகியன அடங்கும். இந்த முயற்சிக்கு உறுதுணையாக டிஜிட்டல் இந்தியா, திறன் இந்தியா போன்ற திட்டங்களைச் செயல்படுத்திவருகிறோம். தூய்மையான, பசுமையான மேம்பாடு, பூஜ்ய நிலைக் குறைபாடுகள், தவறற்ற உற்பத்தி போன்றவையும் நாங்கள் மேற்கொண்டுள்ள உறுதிப்பாடுகளாகும்.

நாங்கள் உலகின் நன்மைக்காக உழைப்பது என்ற உறுதியுடன் உள்ளோம், அந்த வகையில், மேலும் சிறந்த சுற்றுச்சூழலுக்கு உகந்த தொழில்நுட்பங்களைத் தொடர்ந்து கடைப்பிடித்துவருகிறோம். இந்தியாவின் மென்பொருள் தொழிலுக்கும், கொரியாவின் தகவல்தொழில்நுட்பத்தொழிலுக்கும் இடையே அதிகமான ஒத்துழைப்புக்கு வாய்ப்புகள் உள்ளன என்று ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளேன். உங்களது மோட்டார் வாகன உற்பத்தியும், எங்களது வடிவமைப்புத்திறனும் இணைய முடியும். நாங்கள் எஃகு உற்பத்தியில் உலகின் மூன்றாவது நிலையில் உள்ள நாடு என்றபோதிலும், அதற்கு மதிப்புஉயர்வைக் கொண்டுவர வேண்டியது எங்களுக்கு அவசியமாகிறது. உங்களது எஃகு உற்பத்தித் திறனும், எங்களது இரும்புத்தாது வளமும் மேலும் சிறந்த உற்பத்திப் பொருட்களை உருவாக்குவதில் இணைய முடியும்.

அதேபோல, உங்களது கப்பல் கட்டும் திறனும், துறைமுகங்களை மேம்படுத்தி அவற்றின் வழியான மேம்பாடு என்ற எங்களது செயல்திட்டமும் நமது ஒத்துழைப்புக்கு ஊக்கம் அளிக்க முடியும். எனது நாட்டில் வீட்டு வசதி, அதி நவீன நகரங்கள், ரயில்வே இணையங்கள், நீர்வழிப்போக்குவரத்து. ரயில்வே, துறைமுகங்கள், புதுப்பிக்கக்கூடியவை உள்ளிட்ட எரிசக்தி, தகவல் தொழில்நுட்ப அடிப்படை வசதி மற்றும் சேவைகள், மின்னணுவியல் ஆகியன மிகவும் வளர்ச்சிவாய்ப்பு மிக்க துறைகளாகும். இந்தியாவும், கொரியாவும் இந்த மண்டலத்தின் பெரிய பொருளாதாரங்கள் ஆகும். நம்மிடையே ஒத்துழைப்பு ஆசியாவின் மண்டல வளர்ச்சி, மேம்பாடு, நிலைப்புத்தன்மை மற்றும் வளத்துக்குப் பெரிய அடிப்படையாக அமையும். மிகப்பெரிய பொருளாதார ஒத்துழைப்புக்கு இந்தியா கிழக்கு நாடுகளை எதிர்நோக்கியுள்ளது. அதே போல, தென்கொரியா  தனது வெளிநாட்டுச் சந்தைகளைப் பன்முகப்படுத்த முயற்சி மேற்கொண்டுள்ளது.

இருதரப்பு ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதன் மூலம் இரண்டு நாடுகளும் பலன் அடைய முடியும். மிகப்பெரிய வளர்ந்துவரும் சந்தையாக உள்ள இந்தியா, கொரியாவின் வர்த்தகம் மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க சந்தைகளை அடையும் பாலமாகவும் விளங்க முடியும். நான் கொரியாவில் மேற்கொண்டபோது, நெறிப்படுத்தி அழைத்துச்செல்லும் முகமை ஒன்றின் அவசியம் தேவை எனத் தெரிவிக்கப்பட்டதை நினைவுகூர்கிறேன். அதன்படி இந்தியாவில் கொரியா முதலீடுகளை நெறிப்படுத்தி ஏற்படுத்தித் தர தனியாக குழு ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கான கொரியா பிளஸ் என்ற அமைப்பு 2016 ஜூன் மாதம் உருவாக்கப்பட்டது. கொரியா பிளஸ் அமைப்பின் நோக்கம் இந்தியாவில் கொரிய முதலீட்டுக்கு வசதி செய்து மேம்படுத்தித் தக்க வைத்துக்கொள்வது ஆகும். இந்தியாவில் கொரியா முதலீட்டாளர்களுக்கு முதலாவது தகவல் அளிக்கும் நோக்கத்தை இந்த அமைப்பு கொண்டது. இது அமைக்கப்பட்ட இரண்டாண்டுகள் என்ற குறுகிய காலத்திற்குள்ளாகவே அது நூற்றுக்கும் மேற்பட்ட கொரியா முதலீட்டாளர்களுக்கு வசதிகளை செய்து கொடுக்கிறது. கொரிய நிறுவனங்களில்  முதலீட்டுச் சுழற்சி முழுவதிலும் இந்த அமைப்பு கூட்டாளியாகச் செயல்படுகிறது. இதிலிருந்து கொரிய மக்கள், கொரிய நிறுவனங்கள், அந்நாட்டு கருத்துகள் மற்றும் முதலீடுகள் வரவேற்கப்படுகின்றன என்பதில் உள்ள உறுதிப்பாடு தெரியவருகிறது.

நண்பர்களே!

இந்தியா தற்போது வர்த்தகத்திற்குத் தயாராக உள்ளது என்பதைக் கூறி நிறைவு செய்ய விரும்புகிறேன். தொழில் முனைவுக்கு இந்தியா தற்போது சுதந்திரமான இலக்கு. உலகின் எந்த ஒரு பகுதியிலும் இத்தகைய சுதந்திரமான வளரும் சந்தையை நீங்கள் காணவே முடியாது. உங்கள் முதலீடுகளை மேம்படுத்தி பாதுகாக்க என்னவெல்லாம் தேவையோ அவை அனைத்தும் செய்துதரப்படும் என நான் உறுதி அளிக்கிறேன். ஏனெனில், எமது பொருளாதாரத்தில் உங்களது ஈடுபாட்டையும், பங்களிப்பையும் நாங்கள் பெரிதும் மதிக்கிறோம். தனிப்பட்ட நிலையில், உங்களது தேவைகளுக்கு எனது முழு ஆதரவு உண்டு என்று உறுதியளிக்க நான் விரும்புகிறேன்.

உங்கள் அனைவருக்கும் நன்றி.