Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்தியா – துருக்கி வணிக உச்சி மாநாட்டில் பிரதமர் ஆற்றிய உரை (மே 01, 2017)

இந்தியா – துருக்கி வணிக உச்சி மாநாட்டில் பிரதமர் ஆற்றிய உரை (மே 01, 2017)

இந்தியா – துருக்கி வணிக உச்சி மாநாட்டில் பிரதமர் ஆற்றிய உரை (மே 01, 2017)


துருக்கி குடியரசின் அதிபர் மேன்மைக்குரிய அதிபர் ரிசப் டயிப் எர்டோகன் அவர்களே,
மதிப்புக்குரிய அமைச்சர்களே,

துருக்கி குழுவின் உறுப்பினர்களே,

இந்திய வணிகத் துறையைச் சேர்ந்த நண்பர்களே,

அன்புக்குரியவர்களே!

இன்றைய அமர்வில் முன்னணி வணிகத் துறையினருடன் கலந்துரையாடும் இந்த வாய்ப்பு கிடைத்தமைக்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன். அதிபர் எர்டோகன் அவர்களுக்கும், இங்கு வந்துள்ள துருக்கி நண்பர்களுக்கு அன்பான வரவேற்பை தெரிவித்துக் கொள்கிறேன். அதிபர் எர்டோகன் அவர்களுடன் அதிக அளவில் வணிகப் பிரதிநிதிகள் வந்திருப்பதைக் காண்பது மகிழ்ச்சியாக உள்ளது. இந்திய வணிகத் துறை முன்னோடிகள் பலர் பங்கேற்றிருப்பதைக் காண்பதிலும் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

நண்பர்களே, இந்தியாவும் துருக்கியும் மகத்தான வரலாற்று மற்றும் கலாச்சார தொடர்பு கொண்டிருக்கின்றன. உலகில் இப்போதைய பொருளாதார நிலையிலும் நாம் பொதுவான நோக்கம் கொண்டிருக்கிறோம்.

இப்போது, ஒவ்வொரு இருதரப்பு உறவிலும் பொருளாதார ஒத்துழைப்பு முக்கியமான அம்சமாக உள்ளது. இந்தியாவும் துருக்கியும் நல்ல பொருளாதார உறவை செயல்படுத்தி வருகின்றன. கடந்த பல ஆண்டுகளில் நமது இருதரப்பு வர்த்தக வளர்ச்சி தடம் பதிப்பவையாக உள்ளன. அதிபர் எர்டோகன் கடைசியாக இந்தியாவுக்கு வந்ததற்குப் பிறகு இருதரப்பு வர்த்தகம் கணிசமாக அதிகரித்துள்ளதாக நான் அறிகிறேன். 2008-ல் 2.8 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்த வர்த்தகம், 2016-ல் 6.4 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்துள்ளது. இது ஊக்கம் தருவதாக இருக்கும் நிலையில், உண்மையான வாய்ப்புடன் ஒப்பிடும்போது, இப்போதைய பொருளாதார மற்றும் வணிக உறவுகள் போதுமானதாக இல்லை.

நண்பர்களே ! உலகில் பெரிய இருபது பொருளாதார நாடுகளில் இந்தியாவும், துருக்கியும் இடம் பெற்றுள்ளன. மிக முக்கியமாக உலகளாவிய பொருளாதார நிலைகள் மிகுந்த தடுமாற்றத்தில் இருந்த காலத்திலும் இரு பொருளாதாரங்களும் குறிப்பிடத்தக்க ஸ்திரத்தன்மையுடன் இருந்தன. நமது பொருளாதாரங்கள் வலுவான அடிப்படைகளின் மீது உருவானவை. இந்தக் காரணத்தால்தான் நமது பொருளாதார எதிர்காலம் பற்றி நாம் பரந்த மனதுடன் இருக்கிறோம்.

இரண்டு நாட்டு மக்களுக்கு இடையிலும், இருதரப்பிலும் ஆழ்ந்த நல்லெண்ணம் இருக்கிறது. வலுவான பொருளாதார உறவுகளை உருவாக்குவதற்கு நாம் முயற்சிக்கும் வேளையில், பொருளாதார உறவுகளையும் ஆழமானதாக ஆக்கிட அதிக தீவிரமான முயற்சிகள் எடுக்க வேண்டிய காலமும் வந்துவிட்டது. பரஸ்பரம் வணிகம் செய்வதில் நமக்கு நீண்ட வரலாறு இருக்கிறது. இந்த வளமான பாரம்பரியத்தின் மீது நாம் கட்டமைத்திட வேண்டும்.

இரு தரப்பு பங்கேற்புகளை மேம்படுத்துவதற்கு பெரிய அளவில் வாய்ப்புகளும் திறனும் உள்ளன. வர்த்தகம், அந்நிய நேரடி முதலீடு, தொழில்நுட்ப உறவு மற்றும் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு மூலம் இது சாத்தியமாகும். இந்த விஷயத்தைப் பொருத்தவரை, இந்தியாவில் துருக்கிய கம்பெனிகளின் பங்கேற்பு சிறிது அதிகரித்திருப்பதை நாம் பார்க்கிறோம். உயர்தர பொருட்களை உற்பத்தி செய்யும் இந்திய நிறுவனங்களில் முதலீடு செய்வதன் மூலமாகவும், அந்நிய நேரடி முதலீட்டின் மூலமாகவும் இது வந்துள்ளது. இருந்தபோதிலும், இதுபோன்ற ஒத்துழைப்பு சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் வரை செல்லும். இன்றைய அறிவுசார்ந்த உலகப் பொருளாதாரம் தொடர்ச்சியாக புதிய வாய்ப்புகளை திறந்து கொண்டே இருக்கிறது. நமது பொருளாதார மற்றும் வணிக கருத்துப் பரிமாற்றங்களில் இதை நாம் கவனித்திட வேண்டும்.

வணிக ரீதியில் நட்பான சூழ்நிலையை அளிப்பதில் இருதரப்பு அரசுகளும் உறுதியாக உள்ளதை நீங்கள் காணலாம். இருந்தபோதிலும், உங்களைப் போன்ற வணிக முன்னோடிகள்தான், நாட்டின் லட்சியத்தை இருதரப்பு நாடுகளுக்கும் பரஸ்பரம் பயனுள்ள வகையில் செயல்படுத்திட வேண்டும்.

நண்பர்களே !

துடிப்பான, திறந்த செயல்பாடுள்ள, பங்கேற்புடன் கூடிய மக்களாட்சி முறையிலானது என்பதற்கு இந்திய அரசியல் அமைப்பு முறை பெயர் பெற்றுள்ளது. அரசியல் மற்றும் நிர்வாக நடைமுறைகளில் ஸ்திரத்தன்மையும், சட்டத்தின் ஆட்சி என்பதும் நமது அமைப்பு முறையின் முத்திரையாக உள்ளன. எந்த தீவிரமான நீண்டகால பொருளாதார பங்கேற்புக்கும் முக்கியமாக கவனிக்க வேண்டிய அம்சங்களாக இவை உள்ளன.

எனது அரசு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இதே மாதத்தில் பதவிக்கு வந்தது. அப்போதிருந்து பொருளாதார மற்றும் நிர்வாக செயல்பாடுகளை சீர்திருத்தம் செய்ய ஏராளமான நடவடிக்கைகளை நாம் தொடங்கியுள்ளோம். இந்தியாவில் தயாரியுங்கள், ஸ்டார்ட் அப் இந்தியா, டிஜிட்டல் இந்தியா போன்ற முன்னோடித் திட்டங்களை நாங்கள் தொடங்கியுள்ளோம். இந்தியப் பொருளாதாரத்தை மீட்பதில் இவற்றின் பங்கு ஏற்கெனவே தெரியத் தொடங்கிவிட்டது. இப்போது உலகில் வேகமாக வளரும் பெரிய பொருளாதார நாடாக இந்தியப் பொருளாதாரம் உள்ளது. இந்த வேகத்தை பராமரிப்பதுடன், செயல்முறையில் உள்ள செயல்திறனற்ற விஷயங்களை அகற்றுவதிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும். புதிய இந்தியாவை உருவாக்கும் செயல்பாட்டில் நாங்கள் இருக்கிறோம். எனவே, வேலை செய்வதை எளிதாக்குவதில்; குறிப்பாக வணிகம் செய்வதை எளிதாக்குவதில் நமது கவனம் உள்ளது. கொள்கைகள், செயல்பாடுகள் மற்றும் நடைமுறைகளில் சீர்திருத்தம் செய்வது இதில் அடங்கும். உரிய சூழ்நிலைகளை உருவாக்கி, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டை ஊக்குவிப்பதும் இதில் அடங்கும்.

இந்த விஷயத்தில் நாங்கள் நிறைய வெற்றிகளைப் பெற்று, அங்கீகாரம் பெற்றுள்ளோம். பல குறியீடுகளில் எங்களின் உலகளாவிய தரநிலை உயர்ந்திருக்கிறது. இருந்தபோதிலும், இது தொடர்ச்சியாக நடைபெறும் முயற்சியாகும். எனவே, இது தொடர்ந்திட வேண்டும். அடிப்படையில் எண்ணம் மற்றும் அணுகுமுறையில் மாற்றமாக இது உள்ளது. மக்கள் தங்களின் திறனை உணரச் செய்து, இந்தியா நல்ல இடம் என்பதை உணரச் செய்திட வேண்டும் என்பதுதான் நோக்கம். எங்கள் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் சுய வேலை வாய்ப்பு அளிப்பதற்கு இது தேவைப்படுகிறது. சமீபத்தில் ஜி.எஸ்.டி. சட்டம் நிறைவேற்றப்பட்டிருப்பது எமது அரசின் இதுபோன்ற மற்றொரு முயற்சியாகும். நாட்டில் ஒரே மாதிரியான செயல்திறன் மிக்க வணிக சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாகவே உள்ளது.

மற்ற நாடுகளில் கட்டுமானம் மற்றும் கட்டமைப்புத் திட்டங்கள் பலவற்றை துருக்கிய கட்டுமான நிறுவனங்கள் வெற்றிகரமாக நடத்தி வருகின்றன என்பது எனக்குத் தெரியும். எங்களின் கட்டமைப்புத் தேவைகள் அபரிமிதமாக உள்ளன. அடிப்படை துறைகளில் மட்டுமின்றி, சமூக மற்றும் தொழில்துறை கட்டமைப்பிலும் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. வலுவானதாக அதை உருவாக்கவும், வேகமாக உருவாக்கவும் நாங்கள் ஆர்வமாக உள்ளோம். இந்தப் பணியில் துருக்கிய நிறுவனங்கள் எளிதாகப் பங்கேற்கலாம். உங்களுக்கு உதாரணங்களாக சொல்வதென்றால் :

2022 ஆம் ஆண்டுக்குள் 50 மில்லியன் வீடுகள் கட்டுவதற்கு நாங்கள் திட்டமிட்டுள்ளோம். இதற்காக கட்டுமானத் துறையில் நேரடி அந்நிய முதலீட்டுக்கான கொள்கையை நாங்கள் பல முறை திருத்தியுள்ளோம்;

ஐம்பது நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கும், பல்வேறு தேசிய வழித்தடங்களில் அதிவேக ரயில்களுக்கும் நாங்கள் திட்டமிட்டு வருகிறோம்;
அடுத்த ஐந்து ஆண்டுகளில் 175 கிகா வாட் அளவுக்கு புதுப்பிக்கத்தக்க சக்தி அடிப்படையில் மின்சாரம் தயாரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம்;

மின்சார உற்பத்தியுடன், மின்சாரத்தைக் கொண்டு செல்வது, சேமித்தல் மற்றும் பகிர்மானமும் எங்களுக்கு சம அளவுக்கு முக்கியமானவையாக உள்ளன;

எங்கள் ரயில்வேக்களை நாங்கள் நவீனப்படுத்தி வருகிறோம். நெடுஞ்சாலைகளை மேம்படுத்தி வருகிறோம். கடந்த மூன்று ஆண்டுகளில், இந்த இரு துறைகளுக்கும் நாங்கள் அதிகபட்ச ஒதுக்கீடு செய்திருக்கிறோம்;

சாகர்மாலா என்ற மிகுந்த விருப்பமான திட்டத்தின் மூலமாக புதிய துறைமுகங்களை உருவாக்கியும், பழையனவற்றை நவீனப்படுத்தியும் வருகிறோம்;

தற்போதுள்ள விமான நிலையங்களை மேம்படுத்துவதிலும், பொருளாதார மற்றும் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்ப இடங்களுக்கு போக்குவரத்து தொடர்பை மேம்படுத்துவதற்கு பிராந்திய விமான நிலையங்கள் அமைப்பதிலும் இதேபோன்ற கவனத்தை செலுத்தி வருகிறோம்.

துருக்கிய சுற்றுலாத் துறை உலகளவில் பிரசித்தி பெற்றது. கடந்த சில ஆண்டுகளில் துருக்கி நாட்டுக்குச் செல்லும் இந்திய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சித் துறையினர் படப்பிடிப்பு நடத்துவதற்கு பிரபலமான இடமாகவும் துருக்கி மாறிக் கொண்டிருக்கிறது. இரு-வழி சுற்றுலாவை நாம் நிச்சயமாக ஊக்கப்படுத்த வேண்டும். இந்தத் துறையில் பரந்த வாய்ப்புகளையும் கண்டறிந்திட வேண்டும். உதாரணமாக, துடிப்புடன் செயல்படும் பிராந்திய திரைப்படத் துறையினரை ஈர்க்க வேண்டும்.

இந்தியாவும் துருக்கியும் எரிசக்தி பற்றாக்குறை உள்ள நாடு என்பதை நாம் அறிந்திருக்கிறோம். நமது எரிசக்தி தேவை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது என்பதையும் அறிவோம். எனவே இரு நாடுகளுக்கும் ஹைட்ரோகார்பன் துறை பொதுவான கவனத்துக்குரிய துறையாக உள்ளது. இதேபோல சூரியசக்தி மற்றும் காற்றாலை மின்சாரமும் பொதுவான கவனத்துக்குரியவை.

எனவே நமது இருதரப்பு உறவுகளில் எரிசக்தித் துறை முக்கியமான விஷயமாக மாறிவருகிறது. சுரங்கத் துறை மற்றும் உணவுப் பதப்படுத்துதல் துறைகளும் அதிக வாய்ப்புள்ளவையாக இருக்கின்றன. ஜவுளி மற்றும் ஆட்டோ துறைகளில் நமது பலங்களை நாம் ஒன்று சேர்த்திட வேண்டும். துருக்கி பலமான உற்பத்தித் துறையைக் கொண்டிருக்கிறது. குறைந்த செலவில் உற்பத்தி செய்யும் மையமாக இந்தியா இருக்கிறது. செலவு குறித்த அம்சம் தவிர, நம்மிடம் தொழில்திறன் மிக்க மற்றும் ஓரளவு-தொழில் திறன் மிக்க தொழிலாளர்களும், வலுவான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திறன்களும் நம்மிடம் பெருமளவுக்கு உள்ளன.

பொருளாதார & தொழில்நுட்ப ஒத்துழைப்பு குறித்த இந்திய – துருக்கி கூட்டுக் கமிட்டி என்ற நடைமுறை நன்கு செயல்பட்டு வருவது குறித்து மகிழ்த்தி தெரிவித்துக் கொள்கிறேன்.இரு தரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுப்பது பற்றி இந்தக் கமிட்டியின் அடுத்த கூட்டத்தில் ஆய்வு செய்திட வேண்டும்.

அதேபோல, இரு தரப்பு தொழில் வர்த்தக சபைகளும் பரஸ்பரம் ஆக்கபூர்வமாக இணைந்து செயல்பட வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன். அரசு அளவிலும் B-2-B அளவிலும் நமது செயல்பாடுகள் நெருக்கமாக பணியாற்றிட வேண்டும்.
அதிபர் எர்டோகன் அவர்களுக்கும், குழுவின் உறுப்பினர்களுக்கும், இந்திய – துருக்கிய வணிக சபைகளின் உறுப்பினர்களுக்கும், இன்றைய அமர்வில் பங்கேற்றமைக்காக நன்றி தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

இந்திய மற்றும் துருக்கிய வணிக சமுதாயத்தினரை ஒன்று சேர்ப்பதற்கு உண்மையில் இது ஓர் அருமையான வாய்ப்பாகும்.

நண்பர்களே!

நமது மக்களின் நன்மைக்காக, நமது பொருளாதார செயல்பாடுகளின் நிலையை மேம்படுத்த நாம் ஒன்றுபட்டு உழைத்திடுவோம். இந்தியாவின் தரப்பில், இருந்து இருகரங்கள் நீட்டி உங்களை நான் வரவேற்கிறேன்.

இன்றைக்கு உள்ளதைப் போல இந்தியா நம்பிக்கைக்குரிய சேரிடமாக ஒருபோதும் இருந்தது இல்லை என்பதை நம்பிக்கையுடன் என்னால் கூறிட முடியும்.

இதை இன்னும் சிறந்ததாக ஆக்கிட, எனது தனிப்பட்ட கவனம் மற்றும் ஒத்துழைப்பு கிடைக்கும் என உங்களுக்கு உறுதி அளிக்கிறேன்.

நன்றி!