பி.எம்.இந்தியா

முதலாவதாக இந்த பிரம்மாண்டமான, நவீன கட்டிடத்திற்காக உங்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள். இந்த நிறுவனம் 150 ஆண்டுகள் பழமையானது. இந்த நிறுவனமே தொல்லியல் ஆய்வின் ஒரு பொருளாக விளங்குகிறது. கடந்த 150 ஆண்டுகளில் இது வளர்ச்சியடைந்து தனக்கு சொந்தமான தனித்துவ வழியில் விரிவடைந்திருக்க வேண்டும். இது பெரிய பாராட்டுக்களை பெற்றிருக்க வேண்டும். இந்த 150 ஆண்டு காலம் இத்தகைய நிறுவனத்தை பொறுத்த வரை மிகவும் நீண்ட காலமாகும்.
இந்திய தொல்லியல் ஆய்வு நிறுவனம் 150 ஆண்டு கால வரலாற்று ஆவணம் கொண்டதோ இல்லையோ எனக்கு தெரியாது. ஒருவேளை இத்தகைய ஆவணம் இல்லையென்றால் அது போன்ற ஒன்றை பதிவு செய்து பெறுவது ஒரு நல்ல யோசனை ஆகும். கடந்த ஆண்டுகளில் பல்வேறு மக்கள் இங்கே பணியாற்றி இருப்பார்கள். இந்த நிறுவனம் உருவாக்கப்பட்டதற்கு ஒரு கருத்துரு காரணமாக இருந்திருக்க வேண்டும்., அதன் விரிவாக்க நடைமுறை, பயன்படுத்தப்பட்ட நடைமுறை மற்றும் தொழில்நுட்ப மாற்றங்கள், சமுதாயத்தின் மீது அதன் தற்போதைய தாக்கம் உலகெங்கும் இத்துறையில் உள்ள மக்களை அது கவர்ந்திருப்பது உள்ளிட்ட இதர பல அம்சங்கள் இதற்கு உண்டு. இன்றும் கூட நமது நாட்டின் தொல்பொருள் கலைப் பொருட்கள் உலகின் பண்டைய உண்மைகளை மீண்டும் அமைப்பதில் பெரிதும் உதவியுள்ளன. அறிவியல் மற்றும் விண்வெளி தொழில்நுட்ப மேம்பாட்டை அடுத்து மனித வாழ்க்கையில் முன்பு இருந்த இரட்டை நிலை தொடர்பான குழப்பமான போராட்டம் தற்போது தவிர்க்கப்பட்டு விட்டது. சரஸ்வதி ஆறு எப்போதும் இருந்ததில்லை என்ற நம்பிக்கை இத்தகைய ஒரு கருத்தாகும். ஆனால் இந்த கருத்து தவறானது என்று விண்வெளி தொழில்நுட்பம் உறுதி செய்துள்ளது. இந்த சரஸ்வதி ஆறு இதிகாசபூர்வமானது அல்ல. ஆரிய இனத்தவர் தோற்றம் குறித்து மற்றொரு விவாதம் உள்ளது. இதில் சிலர் தங்களது விருப்பமான கருத்துக்களை விடாது பிடித்துக் கொண்டுள்ளனர். இதுவும் ஒரு பெரிய துறைதான். தொல்லியல் துறைக்கு தொழில்நுட்பம் மிகப் பெரிய பங்கினை ஆற்றி வருகிறது. இதன் காரணமாக புதிய விவாதங்களும், வாக்குவாதங்களும் ஏற்பட்டுள்ளன.
தொன்மையான பாறை எழுத்துக்கள், பழமையான கலைப் பொருட்கள் மற்றும் கற்கள் வெறும் ஜடப் பொருட்கள் அல்ல என்றே நான் நம்புகிறேன். இந்த உலகின் ஒவ்வொரு கல்லும் ஏதோ ஒன்றை சொல்ல விழைகிறது. தொல்லியல் சார்ந்த கட்டுரைகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு சொந்த பின்னணி உண்டு. தொல்லியலில் உள்ள ஒவ்வொரு பொருளும் மனிதனின் கடுமையான பணியையும், கனவுகளையும் சித்தரிக்கின்றன. எனவேதான் தொல்லியல் சம்பந்தப்பட்ட பணியாளர்கள் உலகில் மிகப் பல ஆண்டுகளாக எவ்வித கவனமும் பெறாத பாலையாகிப் போன இடங்களில் தங்கள் பணிகளை தொடங்குகிறார்கள். எதிர்காலம் சம்பந்தப்பட்ட ஆராய்ச்சிப் பணியில் தனது சோதனைக் கூடத்தில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானி எவ்வாறு தமது ஆராய்ச்சிப் பணியில் முற்றிலுமாக மூழ்கிப் போவார்களோ அதே போல தொல்லியல் ஆய்வாளர் உலகின் இதர பகுதிகளை மறந்து விட்டு பாலைப்பகுதிகளிலும், குன்றுப் பகுதிகளிலும் தமது ஆராய்ச்சிப் பணியை மேற்கொள்கிறார். இந்த ஆராய்ச்சியின் போதே 10,20 ஆண்டுகள் கடந்து விடுகின்றன என்பதைக் கூட அவர்கள் உணர்வதில்லை. பிறகு ஒரு நாள் உலகின் கவனத்தையே தன் பால் இழுக்கும் புதிய தலைப்புப் பற்றிய கருத்துருவை அவர்கள் அளிக்கிறார்கள். சண்டிகர் அருகே ஒரு சிறு குன்று உள்ளது. பிரான்ஸ் நாட்டு மக்கள் சிலர், உயிரி அறிவியல் நிபுணர்கள் சிலர், உள்நாட்டு, வெளிநாட்டு தொல்லியல் ஆய்வாளர்கள் இந்தக் குன்றில் தங்கள் ஆராய்ச்சிப் பணிகளை தொடங்கினார்கள். பின்னர் இந்தக் குன்றில் உலகின் மிகத் தொன்மையான உயிரினத்தின் எஞ்சிய பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த உயிரினம் பல லட்சம் ஆண்டுகள் பழமையானது. பிரான்ஸ் நாட்டு அதிபர் இந்த இடத்திற்கு வந்து பார்க்க விரும்பினால் நான் அவரை அந்த இடத்திற்கு அழைத்துச் செல்வேன். சுருக்கமாக சொன்னால் இத்தகைய விஷயங்கள் சில சமயம் நம்ப இயலாதவையாக உள்ளன. புதிய சிந்தனை வழிகளை வழங்கும் வகையில் இந்த துறையில் பணியாற்றுபவர்கள் பல முக்கிய பங்களிப்பை செய்கின்றனர்.
சில சமயம் வரலாற்றுக்கு சவால் விடும் ஆற்றல் கற்களிலிருந்து பிறக்கிறது. தொடக்கத்தில் இது ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. எனினும் இந்தப் பொருட்கள் நமக்கு மிகவும் பழகிப் போனவையாக இருப்பதால் அவற்றுக்குரிய முக்கியத்துவத்தை தருவதற்கு தவறி விடுகிறோம்.
ஒன்றுமே இல்லாத ஒரு நபர் பொருட்களை மிகவும் பத்திரமாக பாதுகாப்பார். ஒரு சமயம் நான் அமெரிக்க அரசின் அழைப்பின் பேரில் ஒரு குழுவுடன் அங்கு சென்றேன். அவர்கள் என்னிடம் எனது பயண விவரங்களை கேட்டனர். அதாவது நான் எங்கே சென்று எதனை பார்க்க வேண்டும், அறிந்து கொள்ள வேண்டும் என்று கேட்டனர். எனவே நான் அவர்களது சிறிய கிராமங்களில் உள்ள மருத்துவமனைகள், பள்ளிகளை பார்க்க வேண்டுமென்று பதிலளித்தேன். மேலும் அவர்கள் பெருமைப்படும் முக்கியமான வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களுக்கும் என்னை அழைத்துச் செல்லுமாறு கேட்டுக் கொண்டேன். அவர்கள் என்னை பென்சில்வேனியா மாநிலத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு மிகப் பெரிய வரலாற்றுச் சின்னம் ஒன்றை எனக்கு காட்டி இது 400 ஆண்டுகள் பழமையானது என்று பெருமையுடன் தெரிவித்தனர். அவர்களை பொறுத்த வரை இது வரலாற்று பெருமை வாய்ந்த விஷயம். நம்மிடம் 2000 முதல் 5000 ஆண்டுகள் பழமையான வரலாற்றுச் சின்னங்கள் உள்ளன. இத்தகைய தொன்மையுடன் தொடர்பின்மை நம்மிடையே பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விட்டது.
சுதந்திரமடைந்த பிறகு இத்தகைய மனப்பான்மையிலிருந்து நாம் விடுபட்டிருக்க வேண்டும். ஆனால் துரதிருஷ்டவசமாக இந்த மனப்பான்மை நாட்டை இரும்புப் பிடியாக பிடித்துக்கொண்டது. நமது வரலாற்று பெருமையை அவர்கள் அடிமைத்தனம் என கருதுகின்றனர். நமது பாரம்பரியம், பண்பாடு குறித்து நாம் பெருமைப்படவில்லை என்றால் அவற்றை பாதுகாக்கும் வேட்கை நம்மிடம் தோன்றாது என்று நான் நம்புகிறேன். ஏதாவது ஒன்றை புதுப்பிக்க வேண்டும் என்ற வேட்கை நாம் அது குறித்து பெருமை கொண்டிருந்தால் மட்டுமே ஏற்படும். இல்லையெனில் அது ஒரு குன்று மட்டுமே. நான் பிறந்த கிராமம் ஒரு வரலாற்றை கொண்டது என்பதில் நான் பெருமை அடைகிறேன். பல ஆண்டுகளாக மனிதர்களுக்கான வசதிகள் மேம்பாடு அடைந்து வருகின்றன. யுவான் சுவாங் புத்த பிக்குகளுக்கென தனியாக பல்கலைக்கழகம் இருந்ததாக கூறுகிறார். எனவே அவையெல்லாம் இ்ன்னமும் உள்ளன. எங்கள் பள்ளியில் எங்களுக்கு போதித்த ஒரு ஆசிரியர் நாம் செல்லும் இடங்களில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கற்களை கண்டால் அவற்றை சேகரித்து பள்ளியின் ஒரு மூலையில் சேர்க்க வேண்டுமென்று கூறுவார். இத்தகைய கற்களை சேகரிப்பது எங்களிடையே ஒரு பழக்கமாக ஆகி விட்டது. இப்போது இத்தகைய கற்கள் சேகரிப்பின் நிலை என்ன என்பது எனக்கு தெரியாது. ஆனால் அந்த சமயத்தில் மாணவர்களிடையே அது பழக்கமாக இருந்தது. எனினும் அப்போது சாலையில் நான் காணும் எந்த கல்லும் கட்டாயமாக மதிப்பை கொண்டது என்பதை என்னால் புரிந்துக்கொள்ள முடிந்தது. ஒரு ஆசிரியர் எங்களுக்கு இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இது பற்றிய அறிவையும் எங்களுக்குஅவர் புகட்டினார். அப்போது முதல் இத்தகைய பொருட்கள்எனது மரத்தின் பின்புலத்தில் நிலை கொண்டு விட்டன.
டாக்டர் ஹரி பாய் கோதானி அகமதாபாத்தில் வசிப்பவர் என்பது எனக்கு நன்றாக நினைவில் உள்ளது. அவர் ஒரு மருத்துவர். பொருட்களை சேகரிப்பதில் அவர் பிரபலமானவர். எனவே அவரை பார்க்க நான் சென்றேன். அவர் தனது 20 பியட் கார்கள் ஏற்கனவே சேதமடைந்து விட்டதாக என்னிடம் தெரிவித்தார். அந்த காலத்தில் பியட் கார்கள்தான் மிகவும் பிரபலமானவை. நவீன காலத்தின் கார்கள் தற்போது அந்த காலத்தில் இல்லை. அவர் வனத்துக்கும், குன்று பகுதிகளுக்கும், மலைச் சார்ந்த பகுதிகளுக்கும் தனது பியட் காரில் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் செல்வது வழக்கம். அவர் குண்டும் குழியுமான சாலைகளில் தமது காரில் பயணம் செய்வதால் அந்த கார்கள் ஓராண்டுக்கு மேல் தாக்குப் பிடிப்பதில்லை. வேறு எந்தவொரு நபரிடமும் இவ்வளவு பெரிய அளவிலான பழமையான கலைப் பொருட்கள் இல்லையென்றே நான் நம்புகிறேன். அந்தக் காலத்திலேயே அவரிடம் மிகப் பெரிய அளவிலான தொல்பொருள்கள் இருந்தன. அவர் மருத்துவத் துறையைச் சார்ந்தவர். அவர் சில படக்காட்சிகளை எனக்கு காட்டினார். மிகவும் இளவயதிலிருந்த நான் அவற்றை ஆர்வத்துடன் பார்த்தேன். இந்தப் படக்காட்சியில் சித்திரம் பொறித்த பாறை ஒன்றை எனக்கு காட்டினார். அதில் கருவுற்ற பெண்ணின் சித்திரம் இருந்தது. இந்த சித்திரம் 800 ஆண்டுகள் பழமையானது என்று அவர் என்னிடம் தெரிவித்தார். இந்தக் கல் சித்திரத்தில் அந்தப் பெண்ணின் வயிற்றில் அறுவை சிகிச்சை நடைபெற்றது போன்ற தோற்றம் இருந்தது. அவரது வயிறு ஒரு பக்கத்தில் வெட்டி திறந்து காணப்பட்டது. அந்த சித்திரத்தில் தோளின் பல அடுக்குகள் நுண்மையுடன் சித்திரி்க்கப்பட்டிருந்தன. பெண்ணின் வயிற்றுக்குள் குழந்தை எவ்வாறு தூங்குகிறது என்பது நுண்மையாக சித்தரிக்கப்பட்டிருந்தது.
இந்த விவரங்களெல்லாம் மருத்துவ விஞ்ஞானத்தின் சில நூற்றாண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்டவை என்று என்னிடம் தெரிவிக்கப்பட்டது. 800 ஆண்டுகளுக்கு முன் நமது கைவினைஞர் நுண்மையாக கல்லில் வடித்திருந்ததை அதற்கு வெகு காலம் பின்னர் மருத்துவ விஞ்ஞானம் வெளிப்படுத்தி உள்ளது. அதாவது தோலின் பல்வேறு அடுக்குகள், அன்னையின் வயிற்றுக்குள் குழந்தை எவ்வாறு தூங்குகிறது என்பவை. இப்போது இத்தகைய நுண்ணறிவு எப்படி அனைவருக்கும் சென்றடைந்தது என்பதை நீங்கள் கற்பனை செய்து பார்த்துக் கொள்ளலாம். இவையெல்லாம் அந்தப் படக் காட்சியில் இருந்தன.
நாம் ஆச்சரியமான பாரம்பரியத்தைப் பெற்றுள்ளோம். அதாவது நம் முன்னோர்களிடம் அளப்பரிய அறிவாற்றல் இருந்தது. இல்லையெனில் தோலின் அடுக்குகளின் எண்ணிக்கையை அவர்கள் எவ்வாறு அறிந்திருக்க முடியும், அவற்றை எவ்வாறு நுண்ணியமாக கல்லில் வடிவத்திருக்க முடியும்? அதாவது நமது விஞ்ஞானம் மிகவும் பழமையானது. அது சக்தி வாய்ந்த படைப்புக்களை கொண்டது. இது குறித்து நாம் பெருமை கொள்ள வேண்டும்.
இந்தப் பொருள் குறித்து ஆர்வம் உள்ளவர்களிடையே ஒரு நல்ல விஷயம் காணப்படுகிறது. இந்தத் துறையில் மிக அதிகமான பொதுமக்கள் பங்கேற்பு காணப்படுகிறது. உலகின் எந்த நினைவுச் சின்னத்திற்கு நீங்கள் சென்றாலும் ஓய்வு பெற்ற மக்கள் சீருடையில் சுற்றுலா வழிகாட்டிகளாக கடமையேற்று நமக்கு அந்த இடத்தை சுட்டிக்காட்டுகிறார்கள். சமுதாயத்திற்கு இந்தப்பொறுப்பு உள்ளது. இந்த விஷயத்தை மேம்படுத்தும் வகையில் மூத்த குடிமக்களின் மன்றங்களை அமைக்கும் சூழ்நிலை உருவாக வேண்டும். பொதுமக்கள் பங்கேற்புடன் நமது பாரம்பரியத்தை பாதுகாக்கும் திறன் அப்போது நமக்கு வரும். அரசு ஊழியர்கள் இந்த வகையில் முன் வந்தால் அதனை செய்ய இயலும். செயல் நிலை நடைமுறை அதேதான். தோட்டம் ஒன்றில் எவ்வளவு கடமைப்பட்டுள்ள காவலர் இருந்தாலும் பார்வையாளர் அத்தோட்டத்தின் ஒரு செடியை கூட நசுக்கி விடக் கூடாது என்ற உணர்வுடன் இருந்தால்தான் அது சாத்தியமாகும். அப்படியாகின் அந்த தோட்டத்தை மிகப் பல ஆண்டுகளுக்கு எவரும் தொடமுடியாது. எனவே பொதுமக்கள் பங்கேற்பு பெரிய வலுவை சேர்க்கக்கூடியது. இத்தகைய விஷயங்களை நமது பொது வாழ்வில் நாம் நிறுவனப்படுத்தினால் இத்தகைய சேவைகளை பொதுமக்களுக்கு வழங்குவோரை வரவழைத்து பயன்படுத்தினால் இதுவொரு சிறந்த பணியாக அமையும்.
கம்பெனிகளிடமிருந்தும் நாம் உதவியை கோரலாம். புராதன சின்னங்களை பாதுகாப்பதில் பிரதி மாதமும் 10 அல்லது 15 மணி நேர சேவையை இந்த நிறுவனங்களின் பணியாளர்கள் வழங்கினால் அதனை வரவேற்று பயன்படுத்த வேண்டும். படிப்படியாக இத்தகைய விஷயங்கள் முக்கியத்துவம் பெறுவதாக வளரும்.
மற்றொரு விஷயம் குறித்தும் சிந்திக்க வேண்டியது அவசியம் உள்ளது என்று நான் கருதுகிறேன். இந்தப் பொறுப்பு இந்திய தொல்லியல் ஆய்வு நிறுவனத்திடம் மட்டுமே இருக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை. சுற்றுலாத் துறை, பண்பாட்டுத் துறை, மத்திய அரசின் இதர துறைகள், மாநில அரசுகளின் சம்பந்தப்பட்ட துறைகளும் இதில் இணைந்து பணியாற்றலாம்.
ஒருவேளை நாம் நல்ல சுற்றுலா இடங்களைக் கொண்ட பாரம்பரியம் மற்றும் சுற்றுலா அடிப்படையிலான மதிப்புமிக்க 100 நகரங்களைத் தேர்வு செய்தால், அந்த நகரத்தில் உள்ள மாணவர்களுக்கு அந்த நகரத்தின் தொல்லியல் மற்றும் வரலாறு பயிற்றுவிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு தலைமுறையின் காலவரிசை பயிற்றுவிக்கப்பட வேண்டும். ஆக்ராவைச் சேர்ந்த மாணவர்களுக்கு தாஜ் மஹாலைப் பற்றிய வரலாறு பயிற்றுவிக்கப்படும்போது திரிபு அல்லது திசைதிருப்புதலுக்கான வாய்ப்புகள் இருக்காது. ஒவ்வொரு தலைமுறையை பற்றியும் அவர்கள் தயாராக இருப்பார்கள்.
இரண்டாவதாக,
அவர்களது நகரத்தைப் பற்றிய சான்றிதழ் வகுப்பு ஒன்றையும் நாம் தொடங்கலாம். இதில் தேர்ச்சி பெறும் நபர்கள், தங்களது நகரங்களின் நுட்பங்களைப் பற்றி தெரிந்து கொள்வதுடன், சிறந்த சுற்றுலா வழிகாட்டிகளாக திகழமுடியும்.
நான் பிரதமராக வரும் முன்னர், நான் ஊடகத்தினருடன் பேசினேன். குழந்தைகள் தங்களது திறன்களை வெளிப்படுத்தும் இசை மற்றும் நாட்டியத்திற்கான திறன் தேடல் இருப்பதாக நான் அவர்களிடம் கூறினேன். இந்தக் குழந்தைகளின் அற்புதமான திறன்களை தொலைக்காட்சி வெளிக்காட்டுகிறது. சிறந்த வழிகாட்டிகளுக்கான இதே போன்ற திறன் தேடலை, நாம் ஏன் நடத்தக்கூடாது? அந்த வழிகாட்டி பணியாற்ற வேண்டிய நகரத்தை, அவர்கள் திரையில் காண்பிக்க முடியும். வழிகாட்டிகளாக பணியாற்ற வாய்ப்புள்ளவர்கள் ஆச்சரியமூட்டும் ஆடைகளை அணிந்து புதிய மொழிகளைக் கற்றுக் கொண்டு, அருகில் உள்ள இடங்களை காண்பிக்கலாம். இதுபோன்ற ஒரு போட்டி நடத்தப்படலாம். இது இந்தியாவின் சுற்றுலா துறையை படிப்படியாக மேம்படுத்துவதுடன் நிபுணத்துவம் வாய்ந்த வழிகாட்டிகள் கிடைப்பார்கள். வழிகாட்டிகள் இன்றி இவற்றை நடத்துவது மிகவும் கடினமானது.
எனினும், நமது சிந்தனைகளில் இதற்கு பின் ஒரு வரலாறு உள்ளது என நமக்குத் தெரிய வரும்போது, அதன் மீது ஒரு ஈடுபாடு ஏற்படுவது உண்டு. ஒரு விஷயத்தின் பின்னே அதற்கென ஒரு சரித்திரம் இருப்பது நமக்கு தெரிய வரும் போது அதன் மீதான ஈர்ப்பு நமக்கு அதிகரிப்பது இயல்புதான். ஒரு உதாரணத்தை சுட்டிக்காட்ட வேண்டுமென்றால், பூட்டப்பட்ட அறைக்குள் இருக்கும் மனிதர் ஒருவர் அந்த அறையின் சுவற்றில் இருக்கும் ஒரே ஒரு சிறிய துளை வழியாக தனது கையை நீட்டிக்கொண்டிருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அறைக்கு வெளியே இருக்கும் மனிதர்கள், உள்ளே இருப்பவர் யார் என்றே தெரியாதிருக்கும் நிலையில், அவருடன் கைகுலுக்க அழைக்கப்படும் போது, அவர்கள் தொங்கிக் கொண்டிருக்கும் அந்த கையை உயிரற்ற நபரின் கையாகக்கூட எண்ணிக் கொள்ள வாய்ப்புள்ளது. ஆனால், அதே சமயத்தில் அந்த கை சச்சின் டெண்டுல்கருடையது என்று அறிவிக்கப்பட்டால், அந்த கையை விட்டுவிட விரும்பவே மாட்டார்கள். இதிலிருந்து தெரிய வருவது என்னவென்றால், தகவலுக்கு எப்போதுமே வலு இருக்கிறது என்பதுதான். நமது கலாச்சாரத்தை பற்றி நாம் தெரிந்து வைத்திருப்பது, மிகமிக அத்தியாவசியமானது.
குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில் உள்ள பாலைவனத்தை சுற்றுலாத் தலமாக மேம்படுத்த நான் விரும்பினேன். ஆனால் அது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. எனவே, எனது பணியை நான் சிறுவர்களை சுற்றுலா வழிகாட்டிகளாக பயிற்சி அளிப்பதில் இருந்து தொடங்கினேன். உப்பை தயாரிப்பது எப்படி என்று அவர்களுக்கு கற்றுத்தரப்பட்டது. அதன் பிறகு அவர்கள், அங்கு வரும் மக்களுக்கு உப்பை எப்படி உற்பத்தி செய்வது என்று சொல்லிக் கொடுப்பார்கள். 8 ஆவது மற்றும் 9 ஆவது படிக்கும் இந்த சிறுவர்கள், அந்த பகுதியை பற்றியும், உப்பு தயாரிப்பது மற்றும் சுத்திகரிப்பது ஆகியவற்றை மிகத் தெளிவாக எடுத்துரைத்தார்கள் என்பதை உங்களால் நம்பவே முடியாது. ஆங்கிலேய சுற்றுலாப் பயணிகள் முதலில் வந்தனர். அவர்களிடம் அந்த பகுதி பற்றி இந்த சிறுவர்கள் அற்புதமாக விளக்கி கூறியதைத் தொடர்ந்து, பொதுமக்களுக்கு இந்தப் பகுதி தொடர்பான ஆர்வம் அதிகரித்தது. அந்த சிறுவர்களுக்கும் வேலை கிடைத்ததாக ஆகிவிட்டது. இன்றைக்கு தொழில்நுட்பம் ஏகத்துக்கும் மாறியிருக்கிறது. நான் இப்போது சொல்லப்போவதை தயவுசெய்து தவறாக எண்ணிக் கொள்ளாதீர். இன்றைக்கு இந்த உலகம் செயல்படும் விதம் அதிலும் குறிப்பாக, விண்வெளி தொழில்நுட்பத்தின் உதவியோடு செயல்படும் விதம் முற்றிலுமாக மாறியுள்ளது. பல்லாயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் இருந்து, புதுதில்லியில் நெரிசலான சாலையில் நிற்கக்கூடிய வாகனம் ஒன்றின் நம்பர் பிளேட்டை ஒருவரால் புகைப்படம் எடுக்க முடியும் என்ற அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்திருக்கும் நிலையில், இன்றைக்கும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த சுற்றுலாத் தலங்களின் வெளியே வைத்திருக்கும் அறிவிப்பு பலகைகளில், இங்கே புகைப்படம் எடுக்க அனுமதியில்லை என்று எழுதப்பட்டிருக்கிறது. இப்போது காலமும் மாறிவிட்டது, தொழில்நுட்பமும் முன்னேறிவிட்டது.
சர்தார் சரோவர் அணை, கட்டப்பட்டு வந்தபோது, மக்கள் அதை பார்க்க விரும்பினார்கள். அணையின் மேல் மட்டத்திலிருந்து உபரிநீர் வழிந்தோடுவது உண்டு. மக்கள் அதையும் பார்க்க விரும்பினார்கள். ஆனால் பெரிய பெரிய அறிவிப்பு பலகைகளில் இங்கு புகைப்படம் எடுக்கக்கூடாது என்று எழுதி வைத்திருந்தார்கள். அப்போது நான் முதலமைச்சராக இருந்தேன். இந்த அறிவிப்புக்கு நேர் எதிரான காரியத்தை நான் அப்போது செய்தேன். அணையின் மிகச்சிறந்த புகைப்படத்தை எடுத்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்பவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என்று அறிவித்தேன். இந்த போட்டியில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கையை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். அணைக்கு சென்று புகைப்படங்களை எடுத்து இணைய தளத்தில் மக்கள் பதிவேற்றிய வண்ணம் இருந்தனர். அதற்கு பிறகு அணையை பார்வையிட அனுமதிச்சீட்டு வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த அனுமதிச்சீட்டுகள் அந்த நபரின் பெயரோடு பதிவு செய்யப்பட்டு வந்தது. டிஜிட்டல் முறையில் பதிவு செய்யப்படும் இந்த அனுமதிச்சீட்டுகள் வாயிலாக, 5 லட்சமாவது பார்வையாளர் பரிசளித்து கவுரவிக்கப்படுவார் என்றும் அறிவித்திருந்தேன். ஆச்சரியப்படும் வகையில் அந்த வருகையாளர் கஷ்மீர் பாரமுல்லாவில் இருந்து வந்த தம்பதியினர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆக, இந்த புகைப்படப் போட்டியின் பலனை உணர ஆரம்பித்த தருணம் அது. அந்த தம்பதியினர் கவுரவிக்கப்பட்டனர். அதற்கு பிறகு, 8 ஆம் வகுப்பு மற்றும் 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இங்கு வழிகாட்டிகளாக பணியாற்ற பயிற்றுவிக்கப்பட்டார்கள். அவர்கள் அந்த அணையை பற்றி, அதன் தோற்றம், அனுமதி வழங்கப்பட்டவிதம், எவ்வளவு சிமெண்ட் பயன்படுத்தப்பட்டது, எவ்வளவு இரும்பு பயன்படுத்தப்பட்டது, இதில் எவ்வளவு தண்ணீரை தேக்கி வைக்கமுடியும் என்பது உள்ளிட்ட அனைத்து விவரங்களையும், அங்கு வருகிற சுற்றுலாப் பயணிகளுக்கு விளக்க வேண்டும். அவர்கள் பழங்குடியினத்தைச் சேர்ந்த சிறுவர்கள், அவர்களது பணி அற்புதமாக இருந்தது. இதேபோன்ற நடவடிக்கைகளை, இந்தியாவில் உள்ள 100 நகரங்களுக்கு விரிவுபடுத்த முடியும். புதிய தலைமுறை ஒன்று, வழிகாட்டிகளாக உருவாக நாம் உதவி புரிய முடியும். அவர்களது விரல் நுனியில் சரித்திரம் இருக்குமானால், படிப்படியாக இந்தியாவின் பிரமாண்டமான பாரம்பரியம் மற்றும் ஆயிரம் வருடங்கள் பழமையான வரலாறு, அதிசய உலகமாக நம் கண்முன்னே விரிவடையும். நாம் இந்த உலகத்திற்கு வேறு எதையும் வழங்க வேண்டிய அவசியம் இல்லை. நமது முன்னோர்கள் விட்டுச் சென்ற பாரம்பரியத்தையும் சரித்திரத்தையும் உலக மக்களின் பார்வைக்கு வைத்தாலே போதுமானது. இந்திய சுற்றுலாத் துறையின் வளர்ச்சியை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. நமது முன்னோர்களின் கடும் உழைப்பையும் பங்களிப்பையும் மறந்து விடும் தலைமுறையாக நாம் வளரவில்லை. அவர்களின் பாரம்பரிய பெருமையை முன்னெடுத்துச் செல்ல வேண்டியது நமது கடமை. அதை உலகத்தின் முன்பு பறைசாற்றி பெருமையும் உவகையும் கொள்ள வேண்டும். தன்னம்பிக்கையோடு நாம் முன்னேற வேண்டும். இந்த எண்ணங்களோடு புதிய கட்டிடத்தை பிரகாசமாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கையுடன் உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
Inaugurated Dharohar Bhawan, the Headquarters of ASI, in Delhi. Talked about India’s rich archaeological heritage and the need for more people to visit various archaeological sites across the country. https://t.co/V7FA73CItN pic.twitter.com/3hp39PmMzT
— Narendra Modi (@narendramodi) July 12, 2018