Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளுக்குப் பிரதமர் பயணம்


இந்தோனேசிய அதிபர் திரு பிரபோவோ சுபியான்டோவின் அழைப்பின் பேரில், பிரதமர் திரு நரேந்திர மோடி, 2026 ஜூலை 6 முதல் 8 வரை இந்தோனேசியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். இது பிரதமரின் நான்காவது இந்தோனேசியப் பயணமாகவும், மே 2018-ல் இந்தியா, இந்தோனேசியா இடையிலான உறவுகள் விரிவான உத்திசார் கூட்டாண்மை நிலைக்கு உயர்த்தப்பட்ட பிறகு மேற்கொள்ளப்படும் முதல் இருதரப்புப் பயணமாகவும் அமையும். இந்தப் பயணத்தின்போது, அதிபர் திரு  பிரபோவோவுடன் பிரதமர் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை நடத்துவதுடன், இந்தக் கூட்டாண்மையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களையும் ஆய்வு செய்வார். ஜகார்த்தாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரிடையே பிரதமர் உரையாற்றுவார். இந்தியாவும் இந்தோனேசியாவும் வரலாற்றுச் சிறப்புமிக்க மற்றும் நெருக்கமான மக்கள் இடையிலான உறவுகளைக் கொண்டுள்ளன. இந்தச் சிறப்பான பிணைப்புகளைப் போற்றும் வகையில், இந்தோனேசியாவில் உள்ள யுனெஸ்கோ உலகப் பாரம்பரியச் சின்னங்களில் ஒன்றான யோக்யகர்த்தாவில் உள்ள பிரம்பனன் கோயில் வளாகத்தையும் பிரதமர் பார்வையிடுவார்.

 

இந்தோனேசியாவிலிருந்து திரு மோடி ஆஸ்திரேலியாவிற்குப் பயணிப்பார். அந்நாட்டுப் பிரதமர் மாண்புமிகு திரு அந்தோனி அல்பனீஸின் அழைப்பின் பேரில், 2026  ஜூலை 8 முதல் 10 வரை பிரதமர்  மெல்போர்னுக்குப் பயணம் மேற்கொள்வார். மெல்போர்னில், அவர், திரு அல்பனீஸுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை நடத்துவார். மேலும், ஆஸ்திரேலிய கவர்னர் ஜெனரல் மாண்புமிகு திருமிகு சாம் மோஸ்டினையும் அவர் சந்திப்பார். இந்தப் பயணத்தின்போது, ‘இந்திய-ஆஸ்திரேலிய தலைமைச் செயல் அதிகாரிகள் மன்றக்’ கூட்டத்திலும் பங்கேற்று, இரு நாடுகளையும் சேர்ந்த முன்னணித் தொழில் தலைவர்கள் மத்தியில் பிரதமர் உரையாற்றுவார். அத்துடன், இந்திய-ஆஸ்திரேலிய உறவின் வலுவான தூணாகத் திகழும் இந்திய வம்சாவளியினர் மத்தியிலும் அவர் உரையாற்றுவார்.

 

 

நியூசிலாந்து பிரதமர் மாண்புமிகு திரு கிறிஸ்டோபர் லக்சனின் அழைப்பின் பேரில், மெல்போர்னிலிருந்து ஆக்லாந்துக்குச் செல்லும் பிரதமர் திரு மோடி, 2026  ஜூலை 10-11 ஆகிய தேதிகளில் அங்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்வார். கடந்த நான்கு தசாப்தங்களில் இந்தியப் பிரதமர் ஒருவர் நியூசிலாந்துக்கு மேற்கொள்ளும் முதல் அரசுமுறைப் பயணமாக இது அமையும். ஆக்லாந்தில், பிரதமர் திரு லக்சனுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை நடத்தும் திரு மோடி, கடந்த இரண்டு ஆண்டுகளில் வர்த்தகம், வணிகம் மற்றும் பாதுகாப்பு ஆகிய துறைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ள இருதரப்பு உறவுகளின் ஒட்டுமொத்த நிலையை ஆய்வு செய்வார். ஆக்லாந்தில் தங்கியிருக்கும்போது, முக்கிய வணிக மற்றும் விளையாட்டுத் துறைப் பிரமுகர்களையும் அவர் சந்தித்துப் பேசுவார். இந்தியா மற்றும் நியூசிலாந்துக்கு இடையே நிலவும் வலுவான மக்கள் இடையிலான உறவை வெளிப்படுத்தும் விதமாக, இந்திய வம்சாவளியினர் கலந்து கொள்ளும் கூட்டத்திலும் பிரதமர் உரையாற்றுவார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2280912&reg=3&lang=1

****

TV/BR/SH