பி.எம்.இந்தியா
இந்தியா மற்றும் அயல் நாடுகளைச் சேர்ந்த எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறையிலுள்ள தலைமை நிர்வாக அதிகாரிகளும், நிபுணர்களும், பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்தனர்.
சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்டுகளின் அமைச்சர்கள், சவூதி அரேம்கோ, அட்நாக், பி.பி., ராஸ்நெப்ட், ஐ எச் எஸ் மர்கிட், பயணியர் நேச்சுரல் ரிசோர்சஸ் கம்பெனி, எமர்சன் எலக்ட்ரிக் கம்பெனி, டெல்லூரியன் முபதலா முதலீட்டு நிறுவனம், சுலம்பர்கர் லிமிடெட், வுட் மெக்கன்சி, உலக வங்கி, சர்வதேச எரிசக்தி முகமை, என்.ஐ.பி.எஃப்.பி, புருக்கிங்ஸ் இந்தியா மற்றும் பல்வேறு இந்திய நிறுவனங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
மத்திய அமைச்சர்கள் திரு. அருண் ஜேட்லி, திரு தர்மேந்திர பிரதான், நிதி ஆயோக் அமைப்பின் துணைத் தலைவர் டாக்டர் ராஜீவ் குமார் மற்றும் மத்திய அரசு, நிதி ஆயோக் அமைப்பு ஆகியவற்றைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் இக்கலந்துரையாடல் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
கலந்துரையாடலின் போது, கடந்த நான்கு ஆண்டுகளாக தொழில் தொடங்குவதற்கான சூழலை, குறிப்பாக எரிசக்தித் துறையில் மத்திய அரசு மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகளை, தலைமை நிர்வாக அதிகாரிகளும், நிபுணர்களும் பாராட்டினர். முதலீட்டைப் பொறுத்தவரை, போட்டி சார்ந்த தரவரிசையில் இந்தியா 56-ம் இடத்திலிருந்து 44-ம் இடத்துக்கு முன்னேறியிருப்பதை நிபுணர்கள் குறிப்பிட்டுப் பேசினர். இந்தியாவில் எண்ணெய் மற்றும் எரிவாயு உள்கட்டமைப்பின் விரிவாக்கம்; எண்ணெய் ஆய்வு மற்றும் உற்பத்தி மேம்பாடு, சூரியசக்தி மற்றும் உயிரி எரிசக்திக்கான வாய்ப்புகள்; எரிசக்தித் துறையில் மத்திய அரசின் ஒட்டுமொத்த அணுகுமுறை ஆகியவை இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன. கொள்கைகளைப் பொறுத்தவரை சம்பந்தப்பட்ட அனைவரையும் ஒன்றிணைக்கும் உரையாடலுக்கான தனித்துவம் வாய்ந்த முன்முயற்சியை நிபுணர்கள் பாராட்டிப் பேசினர்.
எரிசக்தித் துறையைச் சேர்ந்த உலகளாவிய தலைவர்களோடு கலந்துரையாடிய பிரதமர், எண்ணெய் மற்றும் எரிவாயு சந்தையில் இந்தியாவின் சிறப்பிடத்தை கோடிட்டுக் காட்டினார். எண்ணெய் சந்தை, உற்பத்தியாளர்களால் உந்தப்படுவதாகக் குறிப்பிட்ட பிரதமர், அளவும், விலையும் எண்ணெய் உற்பத்தி செய்யப்படும் நாடுகளால் தீர்மானிக்கப்படுவதாகக் கூறினார். போதிய உற்பத்தி இருந்தபோதிலும், எண்ணெய் துறையின் சந்தையில் நிலவும் தனிப்பட்ட தன்மைகள், எண்ணெய் விலையேற்றத்திற்கு வழிவகுப்பதாக அவர் கூறினார். மற்ற சந்தைகளில் நிலவுவது போன்று எண்ணெய் சந்தையிலும், உற்பத்தியாளர் மற்றும் நுகர்வோரின் கூட்டு முயற்சி குறித்து பிரதமர் வலியுறுத்தினார். மீட்புப் பாதையில் உள்ள உலகப் பொருளாதாரம் நிலைபெறுவதற்கு இது உதவும் என்றார் பிரதமர்.
நிபுணர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்தியா சம்பந்தப்பட்ட சில முக்கிய கொள்கைகள் குறித்து திரு. மோடி எடுத்துரைத்தார். முதலாவதாக கச்சா எண்ணெயின் விலை உயர்வு காரணமாக எண்ணெய் பயன்படுத்தும் நாடுகள் நிதிப்பற்றாக்குறை உட்பட இதர பொருளாதார சவால்களை சந்தித்து வருவதாக அவர் கூறினார். இந்த இடைவெளியை நிரப்புவதற்கு எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளின் ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானது என்றார் பிரதமர். வளரும் நாடுகளின் எண்ணெய் துறையில் உள்ள வர்த்தக வாய்ப்புகளை, முதலீட்டுக்கான உபரி நிதியைக் கொண்டு, எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் ஆராய வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார். இரண்டாவதாக, ஆய்வு செய்வதற்கான நிலப்பகுதியை அதிகரிப்பது குறித்து பேசிய பிரதமர், தொழில்நுட்பம் மற்றும் ஆய்வுக்கான விரிவாக்கத்தில் வளர்ச்சியடைந்த நாடுகளின் ஒத்துழைப்பை நாடினார். மூன்றாவதாக, எரிவாயு விநியோகத் துறையில் தனியாரின் பங்களிப்பு பற்றியும் அவர் பேசினார். தொழில்நுட்பத்தைக் குறிப்பிட்டுப் பேசிய பிரதமர், இயற்கை எரிவாயுவின் வர்த்தக வாய்ப்புகளைப் பெருக்கிட, உயர் அழுத்தம் மற்றும் உயர் தொழில்நுட்ப செயல்பாட்டிற்கு தேவையான உதவி வழங்கிட வேண்டுகோள் விடுத்தார். இறுதியாக முக்கியமாக, சம்பந்தப்பட்ட நாட்டின் நாணயத்திற்கு தற்காலிக நிவாரணம் வழங்க, கட்டண நிபந்தனைகள் மறு பரிசீலனை செய்யப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
இத்துறையில், தனது அரசு மேற்கொண்ட பல்வேறு கொள்கை முன்முயற்சிகள், வளர்ச்சி நடவடிக்கைகள் பற்றியும் பிரதமர் குறிப்பிட்டுப் பேசினார். எரிவாயு விலை நிர்ணயம் மற்றும் சந்தையின் தாராளமயமாக்கல் பற்றி கோடிட்டுப் பேசிய பிரதமர், ஆழ்கடலில் உயர் அழுத்த உயர் வெப்ப ஆய்வுக்கு, குறிப்பாக போதிய தொழில்நுட்பம் தேவைப்படுவதாகக் கூறினார். திறந்தவெளி உரிமக் கொள்கை, நிலக்கரிப் படுகையின் மீத்தேன் மதிப்பீடு, தேசிய அளவிலான சிறு வயல்கள் மற்றும் நிலநடுக்க அளவில் ஆய்வுக்கான ஊக்கிகள் ஆகியவை குறித்தும் அவர் பேசினார். தற்போது நிலவி வரும் வர்த்தக ஆய்வு பற்றி பேசிய பிரதமர், உற்பத்தி பங்கீட்டு ஒப்பந்தங்களின் விரிவாக்கம் பற்றியும் குறிப்பிட்டுப் பேசினார்.
—-
PM's meeting with Global Oil and Gas Experts/CEOs. https://t.co/1ql1ZjskGT
— PMO India (@PMOIndia) October 15, 2018
via NaMo App pic.twitter.com/UK73XyjRul