Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

எகனாமிக் டைம்ஸ் நாளிதழ் நடத்திய 2018-ம் ஆண்டிற்கான உலகளாவிய வர்த்தக உச்சி மாநாட்டில் பிரதமர் ஆற்றிய உரை


எகனாமிக் டைம்ஸ் நடத்தும் உலகளாவிய வர்த்தக உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியாவிலிருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் இங்கு வருகை தந்துள்ள விருந்தினர்கள், இங்கு குழுமியுள்ள பிரமுகர்கள், சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது வணக்கங்கள்.

புதிய இந்தியாவை உருவாக்குவோம் என்ற உறுதிமொழியை மேற்கொண்டுள்ள மிகவும் முக்கியமானதொரு தருணத்தில் புதிய பொருளாதாரம் – புதிய விதிமுறைகள் என்பது குறித்தி விவாதிப்பதற்காக நீங்கள் அனைவரும் குழுமியிருக்கிறீர்கள். இதில் கேள்வி என்னவென்றால், இதில் புதியது என்ன? என்பதாகும்.

எகனாமிக் டைம்ஸ் நாளிதழ் தினமும் வெளியிடப்படுகிறது. அந்த நாளிதழின் தரமும் கூட தினமும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது. அச்சடித்தலும் கூட தினசரி ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது. நீங்கள் எழுதுகின்ற முறை, அச்சுவகை ஆகியவையும் கூட ஒரே மாதிரியாகத்தான் உள்ளது. இருந்தபோதிலும் ஒவ்வொரு நாளும் புதியதொரு நாளிதழ் வெளியாகிறது என்றுதான் நாம் சொல்கிறோம். இதில் வேறுபடுவது என்பது அதன் உள்ளடக்கம்தான். அதன் அடிப்படையில்தான் இது புதிய செய்தி என்று நீங்கள் கூறுகிறீர்கள்.

நண்பர்களே,

அடுத்த சில மாதங்களில் எமது அரசு அதன் ஆட்சிக் காலத்தில் நான்கு ஆண்டுகளை நிறைவு செய்யவிருக்கிறது. நாடு அதேதான். அதில் செயல்படும் அதிகாரிகளும் அவர்கள்தான். இருந்தாலும் கூட இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் தெளிவானதொரு மாற்றம் தென்படுகிறது. நாட்டின் பொருளாதார, சமூக உள்ளடக்கத்தில் புதிய இந்தியாவின், புதிய பொருளாதாரத்தின் புதிய விதிமுறைகள் ஆகியவை இந்த மாற்றத்தின் உள்ளார்ந்த அம்சமாக விளங்குகின்றன.

நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் உலகம் முழுவதிலும் இந்தியப் பொருளாதாரம் பற்றி விவாதிக்கப்பட்டபோது எப்போது வேண்டுமானால் நொறுங்கி விழக்கூடிய ஐந்தில் ஒன்று என அதற்குப் பெயரிட்டிருந்தார்கள். உலகம் நம்மைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தது. இந்த நாடு தானும் மூழ்கி நம்மையும் தன்னோடு மூழ்கடித்துவிடக் கூடும் என்ற வெறுப்புடன் அவர்கள் நம்மைப் பார்த்துக்கொண்டிருந்தனர். இன்றைய விவாதமோ அந்த ஐந்தில் ஒரு நாட்டைப் பற்றியல்ல. மாறாக 5 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புடைய பொருளாதாரம் என்ற இந்தியாவின் இலக்கைப் பற்றியதாக இந்த விவாதம் உள்ளது. இப்போது உலகம் இந்தியாவுடன் இணைந்து நடைபோட விரும்புகிறது.

நண்பர்களே, இந்தியாவின் வளர்ச்சி என்பது உலகத்தின் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்து வருகிறது.

கடந்த மூன்று-நான்கு ஆண்டுகளில் தன்னுடைய பொருளாதார வளர்ச்சியோடு கூடவே உலகளாவிய பொருளாதார வளர்ச்சியையும் இந்தியா வலுப்படுத்தியுள்ளது.

சாதாரணமான வகையில் உலகத்தின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியைப் பார்த்தோமெனில் மிகவும் வியக்கத்தக்க போக்குகளை நம்மால் காண முடியும். சர்வ தேச நாணய நிதியத்தினால் வழங்கப்பட்ட புள்ளிவிவரங்களின்படி உலகப் பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்களிப்பு என்பது சாதாரண வகையில் 2.4 சதவீதமாக உள்ளது. இது எமது அரசின் கிட்டத்தட்ட நான்காண்டு காலப்பகுதியில் 3.1 சதவீதமாக அதிகரித்துள்ளது.

எமது அரசின் நான்காண்டுகால ஆட்சியில் உலகப் பொருளாதாரத்தில் நமது நாட்டின் பங்கு அதிகரித்துள்ளது. இத்தகைய உயர்வு எட்டாண்டு காலப்பகுதியில்தான் இதற்கு முன் அதிகரித்திருந்தது. இந்த சர்வதேச நாணய நிதியத்தின் புள்ளிவிவரங்களில் இருந்து மேலும் வியப்பளிக்கும் உண்மைகளும் வெளிப்படுகின்றன. கடந்த நான்கு ஆண்டுகாலப் பகுதியில் சாதாரண வகையில் உலகப்பொருளாதாரத்தில் எத்தகைய வளர்ச்சி ஏற்பட்டுள்ளதோ அதில் 21 சதவீதம் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியின் விளைவாகவே உருவாகியுள்ளது.

உலகத்தின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெறும் 3 சதவீதம் மட்டுமே பங்களிக்கக் கூடிய ஒரு நாடு உலகப் பொருளாதாரத்தின் வளர்ச்சியில் அதைவிட 7 மடங்கு பங்களிப்பை செய்து வருகிறது என்பதை இப்போது உங்களால் கற்பனை செய்ய முடியும்.

பணவீக்கம் அல்லது நடப்புக் கணக்கு பற்றாக்குறை அல்லது நிதிப் பற்றாக்குறை அல்லது ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி அல்லது வட்டி விகிதம் அல்லது நேரடி அந்நிய முதலீட்டு வரவுகள் போன்ற பொருளாதாரத்தின் பெரிய அளவிலான அளவீடுகள் எதை எடுத்துப் பார்த்தாலும், இந்த அளவீடுகள் அனைத்திலும் இந்தியா சிறப்பாக செயல்பட்டு வருவதை உங்களால் காணமுடியும்.

எமது அரசின் முதல் மூன்று- மூன்றரை ஆண்டுகளில் நடப்புக் கணக்கு பற்றாக்குறையின் அளவை அபாயகரமான 4 சதவீதம் என்பதில் இருந்து சராசரியாக ஒரு சதவீதம் என்ற அளவிற்கு குறைத்து வந்துள்ளது.

இதற்கு முந்தைய அரசின்போது சுமார் 4. 5 சதவீதமாக இருந்த நிதிப் பற்றாக்குறையை எமது அரசு 3.5 சதவீதமாக குறைத்துள்ளது.

நேரடி அந்நிய முதலீட்டைப் பொறுத்தவரையில் முந்தைய அரசின் மூன்று ஆண்டுகளில் நாட்டிற்குள் வந்து சேர்ந்த முதலீட்டின் அளவு 117 மில்லியன் அமெரிக்க டாலர்கள் எனில் எமது அரசின் மூன்றரை ஆண்டுக்காலப் பகுதியில் அது 209 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.

நாட்டின் தற்போதைய அந்நிய செலாவணி கையிருப்பு என்பது 300 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்பதில் இருந்து 419 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்துள்ளது. 2013-ம் ஆண்டில் உருவான நெருக்கடியின்போது மேற்கொண்ட ஒரு சிறப்பு நடவடிக்கையாக வெளிநாடு வாழ் இந்தியர்களிடமிருந்து அந்நிய செலாவணியாக பெற்றிருந்த 24 பில்லியன் அமெரிக்க டாலர்களை முழுமையாக திருப்பித் தந்தபிறகு உள்ள கையிருப்புத்தொகையாகும்.

அதிக உற்பத்தியுடன் கூடிய வளர்ச்சியின் விளைவாகவும், உயரிய பணவீக்க விகிதம் கட்டுக்குள் வைக்கப்பட்டதன் விளைவாகவும் இந்திய ரூபாய் குறித்த கண்ணோட்டம் தொடர்ந்து நன்றாகவே இருந்து வருகிறது. வட்டி விகிதம் ஒரு சதவீதத்திற்கும்  மேலாக குறைக்கப்பட்டிருப்பதும் வாடிக்கையாளர்கள், வீட்டுவசதித் துறை மற்றும் இதர தொழில்களுக்கும் பயனுள்ளதாக அமைகிறது.

ஆண்டுக்காண்டு அனைத்து பொருளாதார அறிகுறிகளையும் மேம்படுத்துவதில் எமது அரசு வெற்றி பெற்றுள்ளது. பழைய அணுகுமுறையைப் பின்பற்றி இந்த வகையில் வெற்றி பெற்றிருக்க முடியுமா? நிச்சயமாக முடியாது. பழைய அணுகுமுறையைப் பின்பற்றி இந்த மாற்றத்தைக் கொண்டுவந்திருக்க முடியாது.

நாட்டில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் புதியதொரு வேலைக்கலாச்சாரத்துடன் நாடு முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறது. தன் சொந்த திறமைகள், தன் சொந்த ஆதாரங்கள் ஆகியவற்றின் மீது கொண்டுள்ள நம்பிக்கையுடன் புதியதொரு இந்தியாவை உருவாக்குவோம் என்ற பற்றுறுதியுடன் அது முன்னே சென்று கொண்டிருக்கிறது.

கடந்த மூன்றாண்டுகளில் நாட்டின் பொருளாதார உலகம் புதியதொரு விஷயத்தை கற்றிருக்கிறது. அதுதான் போட்டியை எதிர்கொள்வதற்கான திறமை.

 முன்னேறிச் செல்வதற்கான ஒரு ஓட்டப் போட்டி இல்லாமல் இருந்தால், நியாயமான போட்டி என்பது இல்லாமல் இருந்தால் வேகமெடுக்கவோ அல்லது உயரிய நிலையில் இருந்து சிந்திக்கவோ இயலாது.

நண்பர்களே, இந்தியாவின் போட்டித் திறனுக்கு உலகம் மதிப்பளிக்கிறது; அதன் போட்டித்திறனுக்கு மரியாதை செலுத்துகிறது.

உன்க்டாட் அமைப்பின் உலக முதலீடு குறித்த அறிக்கை உலகத்தில் நேரடி அந்நிய முதலீட்டிற்கான சாதகமான இடங்களில் ஒன்றாக இந்தியா இருக்கிறது எனக் குறிப்பிடுகிறது.

உலகத்தில் உள்ள சிறந்த பொருளாதார வாய்ப்புள்ள, மேல்மட்டத்தில் உள்ள நாடுகளில் ஒன்றாகவும் இந்தியா விளங்குகிறது.

நேரடி அந்நிய முதலீட்டிற்கான நம்பிக்கை குறித்த அட்டவணையின்படி மிகச் சிறப்பாக மேலெழுந்து வரும் சந்தைச் செயல்பாடுகளைக் கொண்ட இரண்டு நாடுகளில் ஒன்றாகவும் இந்தியா விளங்குகிறது.

வெறும் மூன்று ஆண்டுகளிலேயே வர்த்தகம் செய்ய உரிய வசதிகளைக் கொண்ட நாடுகளின்  உலகவங்கியின் தரவரிசையில் 42 புள்ளிகளை நாம் கடந்து முன்னேறி வந்துள்ளோம். 142 இடத்தில்  இருந்து இன்று நாம் 100வது இடத்தை எட்டிப் பிடித்துள்ளோம். இத்தகைய தரவரிசைக்கான முகமைகள் பலவும் தற்போது இந்தியாவின் தரவரிசையை மேம்படுத்தி வருகின்றன. உலகத்தின் மிகவும் வெளிப்படையான பொருளாதார நாடுகளில் ஒன்றாகவும் இந்தியா இப்போது விளங்குகிறது.

நண்பர்களே,

கடந்த முறை உங்கள் நிகழ்ச்சியில் நான் பங்கேற்றபோது ஜிஎஸ்டி என்பது வருவதற்கான வாய்ப்புள்ள ஒன்றாகவே இருந்தது. ஆனால் இன்று அது நடைமுறையாகியுள்ளது. நாடு விடுதலை பெற்ற பிறகு மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரும் வரிச் சீர்திருத்தம் அமலாக்கப்பட்டு ஏழு மாதங்கள் ஆகிவிட்டது.

ஜிஎஸ்டி வரி ஏற்பாடு நாட்டிற்கு சிறப்பான வரிசெலுத்தும் முறையையும் சிறந்த வருவாய் முறையையும் அளித்துள்ளது. சரக்குகள் மிக விரைவாக செல்வதை அது ஊக்குவித்துள்ளது. போக்குவரத்திற்கான செலவையும் அது குறைத்துள்ளது. ஏற்றுமதித் துறையில் போட்டித்தன்மைக்கான சூழலையும் அது உருவாக்கியுள்ளது.

சகோதர, சகோதரிகளே, நாடு விடுதலை பெற்று எழுபது ஆண்டுகளுக்குப் பிறகும் கூட மறைமுக வரி ஏற்பாட்டின் ஒரு பகுதியாக நம் நாட்டில் 60 லட்சம் வியாபாரிகள் மட்டுமே இருந்தனர். ஜிஎஸ்டி அமலாக்கப்பட்ட ஏழு மாத காலத்திற்குள் 44 லட்சத்திற்கும் மேற்பட்ட புதிய நபர்கள் புதிய மறைமுக வரி அமைப்பின் ஒரு பகுதியாக இருக்க விண்ணப்பித்துள்ளனர். இது நாட்டில் நேர்மையான வர்த்தக கலாச்சாரத்தை வலுப்படுத்தியுள்ளதோடு, வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதன் விளைவாக நேர்மையாக வரி செலுத்துவோருக்கு குறைந்த வரிகள் என்ற பரிசினையும் வழங்கியுள்ளது.

நண்பர்களே, அரசின் இரட்டை இருப்பு நிலை குறிப்புகளில் எத்தகைய பாரம்பரியத்தை எமது அரசு பெற்றிருந்தது என்பதை நீங்கள் அறிவீர்கள். வங்கித் துறையில் முன்பு நிலவிய முறையில் எவ்வாறு வேண்டியவர்களுக்கு மட்டுமே வசதிகளை செய்து தருவது என்ற சூழ்நிலை முற்றிலுமாக நிலவி வந்தது என்பது பற்றியும் உங்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும். இந்த நிலையை மேம்படுத்த நொடித்துப் போதல் மற்றும் திவால் நிலை ஆகியவற்றுக்கான விதிமுறைகள் ஆகியவற்றில் மிகப்பெரும் சீர்திருத்தங்களை நாங்கள் மேற்கொண்டோம்.

இன்று இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட திவால் நிபுணர்களும், 62 திவால் தொடர்பான நிறுவனங்களும் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்காக நாள் முழுவதும் செயல்பட்டு வருகின்றனர். கடந்த மூன்று மாதங்களில் மட்டுமே 2,700க்கும் மேற்பட்ட வழக்குகளுக்கு எமது அரசு தீர்வு கண்டுள்ளது.

ஏற்றுமதி என்ற மற்றொரு பிரச்சனையையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. 2015-16-ம் ஆண்டு நிதியாண்டிற்கான இறக்குமதி-ஏற்றுமதி குறித்த புள்ளிவிவரங்களைப் பார்த்தோமானால் இந்த இரண்டு துறையிலுமே கிட்டத்தட்ட 15 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளதை நம்மால் காணமுடியும். இந்த சரிவுக்கான காரணங்கள் பற்றி பல்வேறு கருத்துக்கள் உள்ளன. மேலும் ஒரு வாய்ப்பும் இதில் இருக்கிறது. பொருளாதார நிபுணர்கள் இது குறித்து விவாதிக்க வேண்டும்.

வினீத் ஜீ! “ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள சரிவுக்கு மோடி விளக்கம்” என்று நாளைய நாளிதழில் இதை பதிப்பித்து விடாதீர்கள்! உங்களுக்கு முன்பாக ஒரு சிந்தனைக்கான கோணத்தைத் தான் நான் முன்வைத்திருக்கிறேன். நீங்கள் அனைவரும் அதைப் பற்றி சிந்திக்க வேண்டும். எப்படியிருந்தாலும் இத்தகைய இடையூறுகள் தொடர்ந்து நீடித்த ஒரு காலத்திற்குப் பிறகு நிலைமை மேம்பட்டு வருகிறது என்பதை ஏற்றுமதி குறித்த சமீபத்திய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன என்பதையும் நீங்கள் அறிவீர்கள்.

நண்பர்களே, குறிப்பிட்ட கொதிநிலையை எட்டியதும் சுடுநீர் ஆவியாக மாறிவிடுகிறது என்பதை நம் அன்றாட வாழ்வில் உணர்ந்துள்ள ஒரு விஷயமாகும். அந்தக் கொதிநிலை அளவை எட்டுவதற்கு முன்பாக நீர் கொதிப்பதும் இல்லை; ஆவியாக மாறுவதும் இல்லை. அதைப் போலவே, அரசின் முன்முயற்சிகள் மக்களை சென்றடைவதற்கு வேகம், அளவு, உணர்வு ஆகியவை தேவைப்படுகின்றன.

இந்த வேலையானது வேகத்தோடும், அளவுக்கு ஏற்றவகையிலும், உணர்வு பூர்வமாகவும் செய்யப்படும்போது வெற்றி கிடைக்கிறது. தடைகளை போடுவது, குழப்பத்தை ஏற்படுத்துவது, எல்லாவற்றையில் கிடப்பில் போடுவது என்ற முந்தைய கலாச்சாரத்தை எமது அரசு அழித்து ஒழித்துவிட்டது. இதன் விளைவாகவே இந்த அமைப்பு முழுவதிலும் புதியதொரு வேகம் பிறந்திருக்கிறது.

தற்போது ரயில்வே பாதைகளை அகல ரயில்பாதைகளாக மாற்றுவதை முந்தைய அரசின் காலத்தில் இருந்த வேகத்தைப் போல இரண்டு மடங்கு வேகத்தில் நாங்கள் செய்து வருகிறோம். அதைப் போலவே இந்த அரசின் காலப்பகுதியில் தேசிய நெடுஞ்சாலைகள், கிராமப்புற சாலைகள் ஆகியவற்றை உருவாக்கும் வேகமும் கூட முந்தைய அரசின் காலத்தில் இருந்த வேகத்தைப் போல இரண்டு மடங்காகி இருக்கிறது. இன்று மின்கடத்திகளுக்கான கம்பிகளைப் போடும் அதே வேலையானது முந்தைய அரசின் காலத்தில் இருந்ததைப் போல இரண்டு மடங்கு வேகத்தில் நடைபெறுகின்றது. மின்சார உற்பத்தித் திறனை அதிகரிக்கும் வேலையும் கூட முந்தைய அரசின் காலத்தின் இருந்ததை விட மிக வேகமாக நடைபெற்று வருகிறது.

முந்தைய அரசின் காலத்தில் மூன்றாண்டு கால வேலைக்குப் பிறகு 59 கிராம அமைப்புகள் மட்டுமே ஒளியிழை வலைப்பின்னலுடன் இணைக்கப்பட்டது. அதே நேரத்தில் எமது அரசின் மூன்றாண்டு காலத்திற்குள்ளாகவே 1.1 லட்சத்திற்கும் மேற்பட்ட கிராமங்கள் இத்தகைய வலைப்பின்னலுடன் இணைக்கப்பட்டுவிட்டன.

இதற்கு முன்பு திட்டங்களின் பயனாளிகளுக்கான தொகையை அவர்களுக்கே நேரடியாக கொண்டு சேர்ப்பது என்ற திட்டத்தின் கீழ் 28 திட்டங்களுக்கான தொகை மட்டுமே அவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக அனுப்பி வைக்கப்பட்டன. ஆனால் இப்போது 400க்கும் மேற்பட்ட அரசு திட்டங்களுக்கான தொகைகள் நேரடியாக வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகின்றன.

இதற்கு முன்பு சின்னஞ்சிறிய எல் இ டி பல்பு ஒன்றின் விலை சுமார் ரூ. 350 ஆக இருந்தது என்பதை சற்றே கற்பனை செய்து பாருங்கள். இப்போது நாங்கள் அதை படிப்படியாக ரூ. 40 முதல் 50 வரையாக குறைத்திருக்கிறோம். இன்றும் கூட உலகத்தின் பல நாடுகளில் இந்த எல் இ டி பல்புகள் 3 அமெரிக்க டாலர்களுக்கு விற்கப்பட்டு வருகின்றன. எனினும் எமது அரசு அதன் விலையை ஒரு அமெரிக்க டாலருக்கும் கீழாக குறைத்துள்ளது.

2014க்கு முன்பு நமது நாட்டில் மூன்றே மூன்று கைபேசி உற்பத்தி நிறுவனங்கள் செயல்பட்டு வந்தன. எனினும் இன்று இந்த எண்ணிக்கை சுமார் 120 ஆக அதிகரித்துள்ளது. இதன் விளைவாக கைபேசிகளை இறக்குமதி செய்வது என்பது 2014-15-ல் பதிவாகியிருந்த ரூ. 50,000 கோடி என்பது இப்போது அதில் பாதியாக குறைந்துள்ளது.

இந்த மாற்றங்கள் எல்லாம் தானாகவே வந்தனவா? இவ்வாறு நடப்பதற்குத் தேவையான மன உறுதியை இந்த அரசு வெளிப்படுத்தியது. சரியாகச் சொல்லவேண்டுமெனில், புதியதொரு பொருளாதாரத்திற்கு இவை எல்லாம் புதிய விதிமுறைகள் ஆகும்.

சகோதர, சகோதரிகளே, நிதியாதாரங்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்ட வகையிலான பட்ஜெட் என்பதற்கும் வளர்ச்சிக்கான கொள்கைகளின் அடிப்படையில் அமைந்த பட்ஜெட் என்பதற்கும் நாங்கள்  அழுத்தம் கொடுத்தோம்.

நாட்டில் கட்டமைப்புத் துறையிலும், விவசாயத்திலும், தொழில்நுட்பத்திலும், மருத்துவத் துறையிலும், கல்வித் துறையிலும் செய்யப்பட்டுள்ள முதலீடு என்பது இத்துறைகளில் இதற்கு முன் எப்போதுமே செய்யப்பட்டதில்லை.

முதன்முறையாக நாட்டில் விமானப் போக்குவரத்து குறித்த கொள்கை உருவாக்கப்பட்டது. இதற்கு முன் யாருமே நினைத்துப் பார்த்திராத வகையில் பாதுகாப்புத் துறையில் நேரடி அந்நிய முதலீட்டைக் கொண்டுவருவதற்கான புதிய வாய்ப்புகளை நாங்கள் உருவாக்கியிருக்கிறோம்.

நாட்டின் போக்குவரத்துத் துறையையும் எமது அரசு வளர்த்தெடுத்து வருகிறது. 21-ம் நூற்றாண்டின் தேவைகளை கணக்கில் எடுத்து அவையும் இத்துறையுடன் ஒருங்கிணைக்கப்பட்டு வருகிறது.

இந்த முதலீடுகள் அனைத்துமே, அரசின் இந்த திட்டங்கள் அனைத்துமே அவற்றோடு லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளையும் தம்மோடு கொண்டு வருகின்றன. கடந்த நான்கு ஆண்டுகளில் எமது அரசு வேலைவாய்ப்பை மையமாகக் கொண்ட, மக்களை மையமாகக் கொண்ட வளர்ச்சிக்கே அழுத்தம் கொடுத்து வந்துள்ளது. மேலும் நாட்டின் ஏழ்மையான மக்களையும் நிதிசார்ந்த துறைகளில் உள்வாங்குவதை உறுதிப்படுத்தும் வகையிலான பொருளாதாரத்தின் மீதும், அதே நேரத்தில் நடுத்தர வர்க்க மக்களின் விருப்பங்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டும் வருகிறது.

நண்பர்களே, எங்களுக்கு மட்டுமே எல்லாம் தெரியும் என்பது போன்ற திமிர்த்தனம் எதுவும் எமது அரசிடம் இல்லை. எல்லோருடனும் இணைந்து- எல்லோரின் நலனுக்காகவும் என்ற தாரக மந்திரத்தைப் பின்பற்றி ஒவ்வொருவரின் கருத்தையும் கேட்டுக் கொண்டும், ஒவ்வொருவரின் அனுபவத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்டுமே நாங்கள் முன்னேறிச் செல்கிறோம். முழுமையான உணர்வுடன் அவர்களின் கவலைகளையும் தேவைகளையும் எமது அரசு கேட்டறிகிறது. இதன் விளைவாகவே நீண்ட நாட்களாக நீடித்து வரும் பிரச்சனைகளுக்கான புத்தம்புதிய தீர்வுகளும் கண்டறியப்பட்டுள்ளன.

ஆட்சிப் பீடமேறிய முதல் நாளில் இருந்தே அரசமைப்பில் நீளவாக்கிலும் குறுக்கு வாக்கிலும் இந்த உணர்வை கொண்டு செல்ல வேண்டும் என்பது எங்களின் முயற்சியாக இருந்து வந்தது. பல்வேறு நேரங்களிலும் பல்வேறு மேடைகளிலும் விவசாயிகள், இளைஞர்கள், மாணவர்கள், இளம் தலைமை அதிகாரிகள் ஆகியோருடன் நானே நேரடியாக கலந்துரையாடி வந்திருக்கிறேன். இத்தகைய ஏற்பாட்டை நாங்கள் உருவாக்கியதன் விளைவாகவே மக்களின் பிரதிபலிப்பை எங்களால் நேரடியாகப் பெற முடிந்துள்ளது. குறைகளை களையும் ஏற்பாட்டிற்கு எமது அரசு பெரும் கவனம் செலுத்தி வருகிறது.

நண்பர்களே, சில நேரங்களில் தத்துவார்த்த  ரீதியாக பிரச்சனைகளுக்கு மிகச் சரியான தீர்வாக இருப்பவையே நடைமுறையில் பிரச்சனைகளை உருவாக்குவதற்கான காரணமாக அமைந்து விடுகின்றன. எல்லாவற்றையும் உணர்வு பூர்வமாக புரிந்து கொள்ள அரசு முயற்சிக்கும்போதுதான் அவற்றை புரிந்து கொள்ள முடியும். உதாரணமாக, மூங்கில் தொடர்பாகவும், யூரியாவிற்கு 100 சதவீத வேப்பிலை பூச்சு தொடர்பாகவும், சி, டி பிரிவு பதவிகளுக்கான நேர்முகத் தேர்வுகளை முற்றிலுமாக அகற்றுவது தொடர்பாகவும், அரசிதழ் பதிவு பெற்ற அதிகாரியிடம் கட்டாயமாக ஒப்புகைச் சான்றிதழ் பெற வேண்டும் என்ற தேவை தொடர்பாகவும் சமீப காலங்களில் எடுக்கப்பட்ட முடிவுகள் அனைத்தையுமே இதற்கு முன்பாகவும் கூட செய்திருக்க முடியும். எனினும் இதுபோன்ற விஷயங்களில் போதிய உணர்வு இல்லாததாலும், மக்களோடு நேரடித் தொடர்பு இல்லாததாலுமே இவை இதற்கு முன்பு மேற்கொள்ளப்படவில்லை.

நண்பர்களே,

நமது நாட்டில் மருத்துவத் துறை என்பது முழுமையானதொரு கவனம் பெறாத ஒரு துறையாகவே தொடர்ந்து நீடித்து வந்துள்ளது. இதற்கு முன்பும் கூட மக்கள் நலன் தொடர்பான திட்டங்கள் உருவாக்கப்பட்டன. எனினும் அவற்றில் போதிய உணர்வு இருக்கவில்லை. நல்லதொரு மக்கள் நலனோடு கூடவே நல்ல மருத்துவ வசதியையும் நாங்கள் உறுதிப்படுத்தியுள்ளோம்.

இந்திரதனுஷ் இயக்கத்தின் விளைவாக நாட்டில் தடுப்பூசி திட்ட விரிவாக்கத்தின் விகிதம் ஆறு மடங்கு அதிகரித்துள்ளது.

3,000 மக்கள் மருந்தகங்களின் மூலம் 800க்கும் மேற்பட்ட மருந்துகள் மலிவு விலையில் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இருதய நோய் சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் ஸ்டெண்ட்களின் விலையை எமது அரசு 80 சதவீதம் வரையில் குறைத்துள்ளதோடு, மூட்டு மாற்று சிகிச்சைக்கான மாற்று உறுப்புகளின் விலையையும் ஒழுங்கமைத்துள்ளோம். கிட்டத்தட்ட இரண்டரை லட்சம் நீரிழிவு நோயாளிகளுக்கு 20 முதல் 25 லட்சம் டயாலிசிஸ் (ரத்த சுத்திகரிப்பு செயல்முறை) சிகிச்சையை இலவசமாக ஏற்பாடு செய்திருந்தோம்.

இந்த பட்ஜெட்டில் ஆயுஷ்மான் பாரத் (நீண்ட ஆயுளுக்கான இந்திய மருத்துவ காப்பீடு) உடல்நலக் காப்பீடு திட்டத்தை நாங்கள் அறிவித்தோம். இது கிட்டத்தட்ட 10 கோடி ஏழைக் குடும்பங்களுக்குப் பயனளிப்பதாக இருக்கும். இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஏழைக் குடும்பமும் சிக்கலான நோய்களுக்கான சிகிச்சையை மேற்கொள்ள ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் வரையிலான காப்பீடு வழங்கப்படும்.

நண்பர்களே,

எண்ம வழி இந்தியா இயக்கம் என்பதன் அடிப்படை நமது சமூகத்தை எண்ம வழியில் திறன்படைத்த ஒன்றாக மாற்றுவது; அறிவார்ந்த பொருளாதாரம் கொண்ட நாடாக மாற்றுவது என்பதே ஆகும். நூறு கோடி வங்கிக் கணக்குகள், நூறு கோடி ஆதார் அட்டைகள், நூறு கோடி கைபேசிகள் என்பது உலகத்திலேயே மிகவும் தனித்துவம் மிக்க சூழலை உருவாக்குவதாக அமைகிறது.

நண்பர்களே,

சிறு, குறு, நடுத்தர தொழில் துறை என்பதே நமது பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்குகிறது. இத்துறையை மேலும் வலுப்படுத்த நாங்கள் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். அதிகமான கடனுதவி, மூலதனம், வட்டிக்கான மானியம் ஆகியவற்றிலும் முறைப்படுத்தப்பட்ட தொழில் பிரிவிற்குள் அதிக எண்ணிக்கையிலான சிறு தொழில்களைக் கொண்டுவருவதற்கான புதிய கண்டுபிடிப்புகளிலும் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம்.

இந்த விஷயத்தில் நிதிசார் தொழில்நுட்பம் மிக மிக முக்கிய பங்கை வகிக்கிறது. சிறு,குறு, நடுத்தர தொழில்களுக்கு நிதி வசதியை வழங்கவும், அவற்றின் வளர்ச்சி விகிதத்தை அதிகரிக்கவும் நிதிசார் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த ஊக்கமளிக்கப்படுகிறது. இத்தொழில்நுட்பத்தை பெருமளவில் பயன்படுத்துவது நாட்டின் பொருளாதாரத்தையும் வலுப்படுத்துவதாக அமைகிறது.

நண்பர்களே, இதற்கு முன்பு இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றபோது அனைவருக்கும் வீட்டுவசதி, அனைவருக்கும் மின்சார வசதி, அனைவருக்கும் தூய்மையான சமையல் எரிவாயு வசதி, அனைவருக்கும் சுகாதார வசதி, அனைவருக்கும் காப்பீட்டு வசதி போன்ற விஷயங்களைப் பற்றி நான் விவாதித்திருந்தேன்.

கடந்த மூன்றாண்டு காலத்தில் நாட்டில் ஏழைகளுக்கும் கீழ்த்தட்டு நடுத்தர வர்க்க மக்களுக்குமான 1 கோடிக்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டுள்ளன. சவுபாக்ய திட்டத்தின் மூலம் 4 கோடி வீடுகளுக்கு மின்சார வசதி செய்து தரப்பட்டுள்ளது. சமையல் எரிவாயு திட்டத்தின் கீழ் 3.4 கோடி பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

நாளொன்றுக்கு 90 பைசா பிரிமியம் என்ற வகையிலும், மாதம் ஒன்றுக்கு ஒரு ரூபாய் என்ற வகையிலும் 18 கோடிக்கும் மேற்பட்ட மக்களுக்கு எமது அரசு காப்பீட்டு வசதியை செய்து தந்துள்ளது. இதுவரையில் இத்திட்டத்தின் கீழ் ரூ. 2,000 கோடிக்கும் மேலாக கேட்புத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

நண்பர்களே,

அரசின் கொள்கைகள், நியமனங்கள், முடிவுகள், நோக்கங்கள், விதிகள் ஆகியவை அனைத்திற்கும் ஒரே குறிக்கோள்தான் இருந்தது. நாட்டின், ஏழை மக்களின் வளர்ச்சி மட்டும்தான் அது. அனைவருடனும் இணைந்து, அனைவரின் நலனுக்காகவும் என்ற வழியைப் பின்பற்றியே ஏழைகளுக்கு நாங்கள் அதிகாரம் அளித்து வருகிறோம்.

கடந்த மூன்றரை ஆண்டுகளில் ஜன் தன் திட்டத்தின் கீழ் நாட்டில் உள்ள ஏழை மக்களுக்கென 31 கோடிக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இவை வெறும் வங்கிக் கணக்குகள் மட்டுமேயல்ல; இந்தக் கணக்குகள் ரூ. 75,000 கோடிக்கும் மேலான தொகை செலுத்தப்பட்டுள்ளது.

இக்காலப்பகுதியில் நாட்டில் 6 கோடிக்கும் மேற்பட்ட கழிவறைகளை அரசு கட்டியுள்ளது. நாட்டில் கிராமப்புற தூய்மை என்பது 78 சதவீதமாக விரிவடைந்துள்ளது. 2014-ம் ஆண்டில் இது 40 சதவீதமாக இருந்தது.

முத்ரா திட்டத்தின் கீழ் 11 கோடி கடன்களுக்கு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. நாட்டின் இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் எந்தவித வங்கி உத்தரவாதமும் இன்றி ரூ. 4.5 லட்சம் கோடிக்கும் மேலாக கடன் தொகை வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் விளைவாக சுமார் 3 கோடி புதிய தொழில் முனைவர்கள் நாட்டிற்குக் கிடைத்துள்ளனர்.

இதுவரையில் 11 கோடிக்கும் மேலான மண் வள அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. குறு பாசன திட்டத்தின் கீழ் 20 லட்சம் ஹெக்டேருக்கும் மேற்பட்ட நிலங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

நண்பர்களே, இந்த ஆண்டு பட்ஜெட்டில் புதிய பொருளாதாரம் தொடர்பான மற்றொரு குறிப்பிடத்தக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பட்டியலிடப்பட்ட பயிர்களின் உற்பத்தி விலையைப் போன்ற குறைந்தது ஒன்றரை மடங்காக நிர்ணயித்து குறைந்தபட்ச ஆதரவு விலை அறிவிக்கப்பட்டுள்ளது. தொழிலாளிகளை கூலிக்கு அமர்த்துவது, சொந்த கால்நடை/இயந்திரம் ஆகியவற்றுக்கான செலவுகள் அல்லது மற்றவர்களிடமிருந்து கால்நடை/இயந்திரம் வாடகைக்கு அமர்த்துவதற்கான செலவுகள், விதைக்கான விலை, அனைத்து வகையான கலப்பு உரங்களுக்குத் தரப்பட்ட விலை, நிலத்தின் பாசனத்திற்கான செலவு, மாநில அரசுக்கு செலுத்தப்படும் நில வருவாய் வரி, செயல் மூலதனத்திற்காக செலுத்தப்பட்ட வட்டி, நிலத்தை குத்தகைக்கு எடுப்பதற்காக செலுத்தப்பட்ட நில வாடகை மற்றும் இதர செலவுகள் ஆகியவற்றை இது கவனத்தில் கொள்கிறது. அதுமட்டுமல்ல; குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிக்க உற்பத்தி விலையை கணக்கிடும்போது விவசாயியும் அவரது குடும்பமும் நிலத்தில் ஈடுபடுத்தியுள்ள உழைப்பும் சேர்த்தே கணக்கிடப்படுகிறது.

நாட்டில் மிகக் கடுமையான உழைப்பாளிகளான விவசாயிகளின் வருமானம் தொடர்பான மிகவும் முக்கியமானதொரு முடிவாகவே இது அமைகிறது. எனினும் இது விலையேற்றத்திற்கு கொண்டு செல்லக் கூடும் என ஒரு சில பொருளாதார நிபுணர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

நண்பர்களே,

இது போன்ற பொருளாதார நிபுணர்கள் வேறு ஒரு விஷயத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும்: நமக்கு உணவளிக்கின்ற விவசாயிகளுக்கு நாம் செய்ய வேண்டிய கடமை என்ன? விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் ஒவ்வொரு முடிவையும் நாம் ஆதரிக்க வேண்டும் என்றே நான் கருதுகிறேன். இத்தகைய முயற்சிகளில் வருமானத்திற்கான ஆதாரத்தை அரசு அடையாளம் கண்டு கொண்டதெனில், எவ்வித தயக்கமும் இன்றி அவற்றில் நமது பங்கேற்பை அதிகரிக்க வேண்டும்.

நண்பர்களே,

கடந்த மூன்றாண்டுகளில் நேர்மையை நிறுவனமயப்படுத்தும் வேலையை எமது அரசு செய்துள்ளது. தொழில்நுட்பத்தின் உதவியுடன் அரசின் அமைப்புகள் வெளிப்படையானதாக மாற்றப்பட்டு, சேதாரங்கள் தடுக்கப்பட்டன.

பயனாளிகளுக்கான தொகையை நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தும் திட்டத்தினை பயன்படுத்தி ரூ. 57,000 கோடிக்கும் மேலான தொகை தவறானவர்களின் கைகளில் சென்று சேராமல் அரசு தடுத்து நிறுத்தியுள்ளது. சந்தேகத்திற்குரிய வகையில் செயல்பட்டு வந்த 2 லட்சத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்களின் பதிவு ரத்து செய்யப்பட்டன. இந்த நிறுவனங்களின் இயக்குநர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதோடு, அவர்கள் வேறு எந்த நிறுவனங்களிலும் பொறுப்பேற்காதவாறு தடுத்து நிறுத்தப்பட்டனர்.

இந்தத் தருணத்தில் நாட்டின் தொழில் துறைக்கும், அனைத்துப் பிரிவுகளிலும் பணிபுரிவோருக்கும், அனைத்துத் தொழில்முறை நிபுணர்களுக்கும் ஒரே ஒரு வேண்டுகோளை முன்வைக்க விரும்புகிறேன். நமது நாட்டின் இன்றைய, எதிர்கால தேவைகளை எப்போதும் உங்கள் மனதில் இருத்திக் கொள்ளுமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

மற்றுமொரு விஷயத்திற்கும் வேண்டுகோள் விடுக்க நினைக்கிறேன். நிதிசார் நிறுவனங்களில் விதிமுறைகள், ஒழுக்கம் ஆகியவற்றை அமலாக்கும் பொறுப்பிலுள்ளவர்கள், குறிப்பாக கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வுக்கான பொறுப்பில் உள்ளவர்கள் தங்கள் கடமையை மிகுந்த ஊக்கத்துடன் நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

நிதித்துறை தொடர்பான எந்தவித ஒழுங்கீனங்களுக்கும் எதிராக இந்த அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்பதை தெளிவாகச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். பொதுப் பணத்தை, மக்களின் பணத்தை தவறாகப் பயன்படுத்துவதை இந்த அமைப்பு பொற்த்துக் கொள்ளாது. புதிய பொருளாதாரம், புதிய விதிமுறைகள் ஆகியவற்றின் அடிப்படையான சூத்திரம் இதுதான்.

நண்பர்களே,

புதிய பொருளாதாரம் பற்றி இங்கு விவாதிக்கப்பட்டது. இங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பல்வேறு அமர்வுகள் பற்றிய விவரங்களை சேகரித்துக் கொண்டிருந்தபோது எனக்கு ஒரு கருத்து தோன்றியது. அந்தக் கருத்து நாட்டின் பொருளாதாரத்தோடு மிக ஆழமான தொடர்புடையதாகும். நாடாளுமன்ற மக்களவைக்கும், மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்துவது நாட்டின் பொருளாதாரத்தில் எத்தகைய சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்ற விஷயத்தைப் பற்றியும் இதுபோன்ற நிகழ்வுகளில் விவாதிக்கப்பட வேண்டும் என்றே நான் கருதுகிறேன்.

இந்தப் பிரச்சனை என்பது இந்தியாவுக்கு மட்டுமேயானதல்ல. இதன் விளைவாக வெளிநாட்டு நிறுவனங்களும் கூட பாதிக்கப்படுகின்றனர். ஒரு சில நாடுகளில் தேர்தலை நடத்துவதற்கான நேரம், மாதம், தேதிகள் ஆகியவை முன்கூட்டியே நிர்ணயிக்கப்படுகின்றன. அந்த நாடுகளின் தொழில்வளர்ச்சியில் இத்தகைய ஏற்பாடு எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதும் கூட விவாதிக்கப்பட வேண்டும்.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, இந்தியாவில் சிறந்த நிர்வாகத்தை வென்றடைவதற்கான தொடர்ச்சியான முயற்சிகள், இந்தியாவில் உலகத் தரத்தை அடைவதை நோக்கமாகக் கொண்ட கொள்கைகள் மற்றும் திட்டங்கள், உலகத்துடன் முழுமையானதொரு பொருளாதார, வர்த்தக உடன்பாட்டை மேற்கொள்வதற்கான முயற்சிகள், புதிய கண்டுபிடிப்புகளுக்கான குவிமையமாக நீடித்த வளர்ச்சிக்கு  முன்னுரிமை அளிப்பதென்ற முடிவு ஆகிய இவை அனைத்துமே உலகத்தினரால் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. அவர்களும் இந்தியாவை நோக்கி கவரப்பட்டு வருகின்றனர்.

நவீன காலத்தில், புதிய உலக சூழலில் முன்னணி சக்தியாக இந்தியா உருவாகி வருகிறது. கண்டுபிடிப்புகள், தொழில்நுட்பம் ஆகிய விஷயங்களில் இந்தியாவினால் உலகத்திற்குத் தலைமை தாங்க முடியும்.

இதற்கான திறமை நமக்கு உள்ளது. இதற்கான ஆதாரங்களும் நம்மிடம் உள்ளன. இவற்றின் மூலம் புதிய இந்தியா என்ற கனவை நம்மால் நனவாக்க முடியும். நமது வளர்ச்சி என்பது நம்மோடு மட்டுமே நின்றுவிடப் போவதில்லை. உலகம் முழுவதற்குமே அது வளத்தைக் கொண்டு வரும்.

அனைவரும் முன்னே வாருங்கள். அதன் மூலம் நமது உறுதிப்பாட்டை நம்மால் நிறைவேற்ற முடியும். அதன் மூலம் நம் முன்னே உள்ள ஒவ்வொரு சவாலையும் ஒரு வாய்ப்பாக மாற்றுவதன் மூலம் நம்மால் புதியதொரு இந்தியாவை உருவாக்க முடியும்.

எனது உரையை முடிக்கும் தறுவாயில் இந்த நிகழ்விற்காக உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை மீண்டும் ஒரு முறை தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.

(எகனாமிக் டைம்ஸ் நாளிதழின் 2018-ம் ஆண்டிற்கான உலகளாவிய வர்த்தக உச்சிமாநாட்டில் முன்வைக்கப்பட்ட கருத்துரையின் தலைப்பு “புதிய பொருளாதாரம், புதிய விதிமுறைகள்” என்பதாக இருந்தது.)