பி.எம்.இந்தியா
ஒடிஷா மாநிலம் பரிபடாவிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று (05.01.2019) வருகை தந்தார்.
ரசிகா ரே ஆலயம் மற்றும் ஹரிப்பூர்கர் புராதன கோட்டையில் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட கட்டடத்தின் வளர்ச்சி, புனரமைப்பு பணிகள் தொடங்கிவைப்பதற்கான டிஜிட்டல் கல்வெட்டை அவர் திறந்துவைத்தார்.
மூன்று தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.
பாராதீப்-ஹால்டியா-துர்காபூர், சமையல் எரிவாயு குழாய் திட்டத்தின் பலாசோர்-ஹால்டியா-துர்காபூர் பிரிவை நாட்டுக்கு அவர் அர்ப்பணித்தார். பலாசோரில் உள்ள பன்முக வரையறுக்கப்பட்ட யுக்தி சார்ந்த பூங்கா மற்றும் ஆறு பாஸ்போர்ட் சேவை மையங்களை அவர் தொடங்கிவைத்தார்.
டாடா நகருக்கும் பதாம்பஹருக்கும் இடையேயான இரண்டாவது பயணிகள் ரயிலை அவர் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், இன்று அடிக்கல் நாட்டப்பட்டிருக்கும் அல்லது தொடங்கிவைக்கப்பட்டிருக்கும் திட்டங்கள் நான்காயிரம் கோடி ரூபாய் மதிப்பினாலானவை என்றார்.
சாமானிய மக்களின் வாழ்க்கையில் அடிப்படை மாற்றத்தை உருவாக்கக் கூடிய உள்கட்டமைப்பு வசதியின் வளர்ச்சிக்கு மத்திய அரசு முன்னுரிமை கொடுப்பதாக அவர் கூறினார்.
பலாசோர்-ஹால்டியா-துர்காபூர் சமையல் எரிவாயு குழாய் திட்டம் ஒடிஷா மற்றும் மேற்கு வங்காளத்தின் பகுதிகளில் சமையல் எரிவாயுவை எளிமையான முறையில் விநியோகம் செய்ய உறுதி செய்யும் என்பதோடு, அதற்கான செலவையும், நேரத்தையும் சேமிக்கும் என்று அவர் கூறினார்.
21 ஆம் நூற்றாண்டில் இணைப்பின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். இந்தியாவில் நவீன உள்கட்டமைப்பு மற்றும் தொடர்பினை உருவாக்குவதற்கு முன்னெப்போதும் இல்லாத முதலீடு செய்யப்பட்டு வருவதாக அவர் கூறினார். ஒடிஷாவிலும் சாலை, ரயில் மற்றும் விமான இணைப்பு வலியுறுத்தப்பட்டு வருவதாக அவர் கூறினார். மேம்படுத்தப்பட்ட ரயில் தொடர்பு, மக்களுக்கும், கனிம வளங்கள் தொழிற்சாலைகளை சென்றடைவதற்கும் உதவும் என்றும் அவர் கூறினார்.
நாட்டில் மேம்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பினால் நடுத்தர மக்கள் மற்றும் நடுத்தர நிறுவனங்களும் அதிகமான பயன்பெறுவார்கள் என்று பிரதமர் கூறினார். நடுத்தர மக்களின் வசதியான வாழ்க்கைக்கு நவீன சாலைகள், தூய்மையான ரயில்கள் மற்றும் சிக்கனமான விமானப் போக்குவரத்து ஆகியவை பெரும் பங்களிப்பை வழங்கும் என்றார் அவர்.
கடந்த நான்கரை வருடங்களாக பாஸ்போர்ட்களை பெறுவதில் மக்கள் சந்திக்கின்ற பிரச்சினைகளை குறைக்க மத்திய அரசு முயற்சித்ததாக பிரதமர் கூறினார். இன்று திறந்துவைக்கப்பட்டிருக்கும் ஆறு பாஸ்போர்ட் சேவை மையங்கள் இந்த இலக்கை நோக்கிய நடவடிக்கை என்று அவர் கூறினார். இது மக்களின் வாழ்க்கையை மேலும் வசதியாக்குவதற்கான மற்றுமோர் முயற்சி என்று அவர் விவரித்தார்.
நாட்டின் வளமையான கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாப்பதற்கு அரசு முயற்சி எடுத்து வருவதாக பிரதமர் கூறினார். சமயம், ஆன்மீகம், வரலாறு ஆகியவை சார்ந்த மையங்கள்; யோகா மற்றும் ஆயுர்வேதம் பற்றிய தகவல்கள் ஆகியவை பிரபலப்படுத்தப்படுவதோடு, முன்னெடுத்தும் செல்லப்படுகின்றன. இத்தருணத்தில் பிரதமர், ரசிகா ரே ஆலயம் மற்றும் ஹரிபூர்கர் புராதன கோட்டையில் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட கட்டிடம் ஆகியவற்றில் மேற்கொள்ளப்படும் பணிகளை பற்றி குறிப்பிட்டார். இது போன்ற முயற்சிகள் சுற்றுலாத் துறையை மேம்படுத்த உதவும் என்றும் அவர் தெரிவித்தார்.
********
விகீ/எல்கே/உமா