Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பின் முதலாவது மாநாட்டை பிரதமர் தொடங்கி வைத்தார்


பிரதமர் திரு. நரேந்திர மோடி சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பின் முதலாவது மாநாட்டை இன்று விஞ்ஞான் பவனில் தொடங்கி வைத்தார். இந்தியப் பெருங்கடல் எல்லைப் பகுதி நாடுகள் கூட்டமைப்பின் (IORA) புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான அமைச்சர்கள் கூட்டம் மற்றும் இரண்டாவது சர்வதேச ரீ-இன்வெஸ்ட் (புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலீட்டாளர்கள் மாநாடு மற்றும் கண்காட்சி) ஆகியவையும் இந்த நிகழ்ச்சியின்போது தொடங்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் ஆண்டோனியோ கட்டரஸும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் கடந்த 150-200 ஆண்டுகளாக, மனித குல தனது எரிசக்தி தேவைக்குப் படிம எரிபொருட்களையே நாடி இருந்தது. ஆனால், சூரிய சக்தி, காற்றாலை மற்றும் நீர்சக்தி ஆகியவை எரிசக்தி தேவைகளுக்கு நிலையான தீர்வை அளிக்கும் என்று தற்போது இயற்கை நமக்கு சுட்டிக்காட்டுகிறது. 21 ஆம் நூற்றாண்டில் மனித நலனுக்காக உருவாக்கப்பட்ட அமைப்புகள் பற்றிப் பேசுகையில் சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பு முதலிடம் வகிக்கும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார். பருவநிலை குறித்த நீதியை உறுதி செய்யும் பணியை மேற்கொள்ள இந்த அமைப்பு சிறந்த களமாக அமையும் என்று அவர் கூறினார். வருங்காலத்தில் எண்ணெய் மற்றும் பெட்ரோலியம் ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்புக்கு(OPEC) மாறாக சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பு சர்வதேச அளவில் முக்கிய எரிசக்தி விநியோக அமைப்பாக இருக்கும் என்றார் பிரதமர்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை அதிகமாகப் பயன்படுத்துவதன் மூலம் ஏற்படும் மாற்றங்களை தற்போது இந்தியாவில் பார்க்க முடிகிறது. பாரிஸ் பிரகடனத்தின் இலக்குகளை செயல் திட்டம் மூலம் அடைய இந்தியா பணிபுரிந்து வருகிறது. 2030-ல் இந்தியாவின் எரிசக்தி தேவையில் 40 சதவீதத்தை மாற்று எரிபொருள் மூலம் அடைய இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது என்று பிரதமர் கூறினார். “வறுமையில் இருந்து சக்தி” எனும் புதிய தன்னம்பிக்கையுடன் இந்தியா வளர்கிறது என்றார் பிரதமர்.

எரிசக்தி உற்பத்தியுடன் எரிசக்தி சேமிப்பும் மிகவும் முக்கியம் என்பதை சுட்டிக்காட்டிய பிரதமர் இதற்கான தேசிய எரிசக்தி சேமிப்பு இயக்கம் பற்றி குறிப்பிட்டார். இந்த இயக்கத்தின் கீழ் தேவை உருவாக்கம், உள்நாட்டு உற்பத்தி, புதிய கண்டுபிடிப்புகள், எரிசக்தி சேமிப்பு ஆகியவற்றிற்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருவதாக அவர் கூறினார்.

சூரிய எரிசக்தி மற்றும் காற்றாலை சக்தி தவிர உயிரி, உயிரி எரிபொருள் மற்றும் உயிரி எரிசக்தி ஆகியவற்றிலும் இந்தியா பணிபுரிகிறது. இந்தியாவின் போக்குவரத்தைத் தூய்மையான எரிசக்தியின் அடிப்படையில் கொண்டுவர இந்தியா முயற்சித்து வருகிறது. உயிரி கழிவுகளை உயிரி எரிபொருளாக மாற்றுவதன் மூலம் இந்தியா சவால்களை வாய்ப்புகளாக மாற்றிவருகிறது என்று பிரதமர் கூறினார்.

***