Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தீன்தயாள் உபாத்யாயாவின் சிலையை திறந்துவைத்த பிரதமர், அவரது நினைவகத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார்


வாரணாசியில் பண்டிட் தீன்தயாள் உபாத்யாயாவின் சிலையைத் திறந்துவைத்த பிரதமர் திரு.நரேந்திர மோடி, அவரது நினைவகத்தையும் நாட்டிற்கு அர்ப்பணித்தார். மூன்று ஜோதிர்லிங்க யாத்திரைத் தளங்களான வாரணாசி, உஜ்ஜைன் மற்றும் ஓம்காரேஸ்வர் பகுதிகளை இணைக்கும் வகையிலான, 3-ஆவது தனியார் ரயிலான மஹாகாள் எக்ஸ்பிரஸை அவர் கொடியசைத்துத் தொடங்கிவைத்தார். 430 படுக்கை வசதி கொண்ட உயர் சிறப்பு அரசு மருத்துவமனை உள்ளிட்ட 36 வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைத்த அவர், 14 வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

வாரணாசியில் உள்ள பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா நினைவு மைய திறப்பு விழாவில் உரையாற்றிய பிரதமர் திரு.நரேந்திர மோடி, ‘படாவ்’ என்ற பெயருடைய இந்தப் பகுதியில், பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா நினைவகமும் அமைந்துள்ளதால், அதன் பெயருக்கேற்ப, இன்றுமுதல் மேலும் முக்கியத்துவம் பெறுகிறது என்றார். இந்த மையம் சேவை, தியாகம் மற்றும் பொதுநலன் ஆகியவற்றை ஒருங்கிணைப்பதாக வளர்ச்சியடையும். தற்போது இந்த நினைவகமும், அதனைச் சுற்றி பூங்காவும் அமைக்கப்பட்டிருப்பதுடன், பிரம்மாண்ட சிலையும் நிறுவப்பட்டிருப்பதால், பல தலைமுறைகளுக்கும் தீன்தயாள் உபாத்யாயாவின் நெறிமுறைகளை பின்பற்ற ஊக்கமளிப்பதாக அமையும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

ஏழை மக்களுக்காகப் பாடுபட வேண்டும் என்ற பாதையை தீன்தயாள் உபாத்யாயா நமக்கு காட்டியிருப்பதாகக் குறிப்பிட்ட பிரதமர், சமுதாயத்தின் கடைக்கோடியில் உள்ளவரும் வளர்ச்சி அடைய வேண்டும் என்பதே அவரது நோக்கம் என்றார். அவரது இந்தக் கருத்திலிருந்து கிடைத்த உத்வேகம் மூலம் 21 ஆம் நூற்றாண்டு இந்தியா, ஏழைகளுக்காக பாடுபட்டு வருகிறது என்றும் தெரிவித்தார். இந்தப் புனித தினத்தில் ரூ.1250 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்கப்பட்டிருப்பது, வாரணாசி உள்ளிட்ட ஒட்டுமொத்த பூர்வாஞ்சல் பகுதியின் வளர்ச்சிக்கு உதவும் என்றார். “கடந்த 5 ஆண்டுகளில் காசி உள்ளிட்ட ஒட்டுமொத்த பூர்வாஞ்சல் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியே இந்தத் திட்டங்கள். இந்தக் காலகட்டத்தில் வாரணாசி மாவட்டத்தில் ரூ.25,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றி முடிக்கப்பட்டுள்ளன அல்லது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்றும் அவர் தெரிவித்தார்.

சாலைகள், நெடுஞ்சாலைகள், நீர்வழிச்சாலைகள், ரயில்வே, குறிப்பாக கட்டமைப்புத் திட்டங்களுக்கு அரசு உயர் முன்னுரிமை அளிப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார். “இதுபோன்ற வளர்ச்சிப் பணிகள் நாட்டை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்வதோடு, வேலைவாய்ப்புகளையும், குறிப்பாக காசி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் சுற்றுலா சார்ந்த வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருகின்றன” என்றும் அவர் குறிப்பிட்டார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இங்கு வந்த இலங்கை அதிபர், இப்பகுதியின் ஆன்மீகச் சூழலைக் கண்டு வியந்து போனதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்தப் புனித நிகழ்ச்சியில், பாபா விஸ்வநாத் வீற்றிருக்கும் நகரத்தை ஓம்காரேஸ்வர் மற்றும் மஹாகாளேஸ்வருடன் இணைக்கும் காசி-மஹாகாள் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார். பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தில் 2016 ஆம் ஆண்டு பிற்பகுதியில் அடிக்கல் நாட்டப்பட்ட உயர்சிறப்பு மருத்துவமனை தற்போது திறந்துவைக்கப்பட்டுள்ளது. “21 மாதங்களுக்குள்ளாக இந்த 430 படுக்கை வசதி கொண்ட மருத்துவமனை, காசி மற்றும் பூர்வாஞ்சல் பகுதி மக்களுக்கு சேவையாற்றத் தயாராகியுள்ளது” என்று அவர் குறிப்பிட்டார். தீன்தயாள் உபாத்யாயாவின் சிந்தனைகளுக்கு ஏற்ப, சுயசார்பு மற்றும் சுயஉதவி என்பவை அனைத்துத் திட்டங்களுக்கும் மையப் புள்ளியாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்ட பிரதமர், இந்த சிந்தனைகளை அரசின் திட்டங்களாகவும், அரசின் கலாச்சாரமாகவும் மாற்ற தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

வளர்ச்சித் திட்டங்களின் பலன், சமுதாயத்தின் கடைக்கோடியில் உள்ள மக்களையும் சென்றடையும் வகையில் அரசு தொடர்ந்து பாடுபட்டு வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார். “தற்போது நிலைமை மாறி வருவதுடன், சமுதாயத்தின் கடைக்கோடி மனிதனுக்குத்தான் அதிக முன்னுரிமை அளிக்கப்படுகிறது” என்றும் அவர் தெரிவித்தார்.

******