பி.எம்.இந்தியா
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (20.02.2026) காலை சேவா தீர்த் எனப்படும் பிரதமர் அலுவலகத்தில், செயற்கை நுண்ணறிவு நிறுவனங்கள், தொழில்நுட்பப் புத்தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றின் தலைமைச் செயல் அதிகாரிகளுடன் ஒரு வட்டமேசைக் கூட்டத்தை நடத்தினார். இதில் பங்கேற்ற நிறுவனங்கள் முக்கிய துறைகளில் செயல்பட்டு வருகின்றன. சுகாதாரப் பராமரிப்பு, விவசாயம் உள்ளிட்ட துறைகளில் உள்ளூர் தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் அவை செயல்படுகின்றன.
செயற்கை நுண்ணறிவுத் துறையின் விரைவான வளர்ச்சியை இந்த நிறுவனங்களின் பிரதிநிதிகள் குறிப்பிட்டனர். இந்திய செயற்கை நுண்ணறிவுத் தாக்க உச்சிமாநாட்டையும் அவர்கள் பாராட்டினர்.
இதில் பேசிய பிரதமர் திரு நரேந்திர மோடி, சவால்களை வெற்றிகரமாக நிவர்த்தி செய்யும் தீர்வுகளை உருவாக்கியதற்காக புதுமைக் கண்டுபிடிப்பாளர்களைப் பாராட்டினார். விவசாயம், சுற்றுச்சூழல் போன்ற பல்வேறு துறைகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் சாத்தியக்கூறுகள் குறித்தும் அவர் குறிப்பிட்டார். இந்திய மொழிகள், கலாச்சாரத்தை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், தாய்மொழியில் உயர்கல்வி கற்பதற்கான நமது செயற்கை நுண்ணறிவு கருவிகளை விரிவுபடுத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
வலுவான தரவு நிர்வாகத்தின் அவசியத்தை பிரதமர் சுட்டிக் காட்டினார். இந்தியாவின் தேவைகளுக்கு ஏற்ப தீர்வுகளை உருவாக்க அவர் வலியுறுத்தினார். விண்வெளித் துறையில் தனியார் பங்களிப்பை விரிவுபடுத்துவது குறித்தும் அவர் பேசினார். இந்திய புத்தொழில் நிறுவங்களின் வலுவான முதலீட்டாளர் ஆர்வத்தைப் பிரதமர் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார்.
இந்தக் கூட்டத்தில் சுமார் 15 நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள், நிறுவனர்கள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் பிரதமரின் முதன்மைச் செயலாளர் பி.கே. மிஸ்ரா, 2-வது முதன்மை செயலாளர் திரு சக்திகாந்த தாஸ், மத்திய இணையமைச்சர் திரு ஜிதின் பிரசாதா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
***
(Release ID: 2230627)
AD/PLM/RK