Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரசல்ஸ் நகரில் இந்திய சமூகத்தினரிடையே பிரதமர் திரு. நரேந்திர மோடி உரை.

பிரசல்ஸ் நகரில் இந்திய சமூகத்தினரிடையே பிரதமர்          திரு. நரேந்திர மோடி உரை.


பிரதமர் திரு. நரேந்திர மோடி பிரசல்ஸ் நகரில் இந்திய சமூகத்தினரிடையே இன்று உரையாற்றினார். இந்திய சமூகத்தை அவர் மக்களின் தூதுவர்கள் என்று அழைத்தார்.

கடந்த வாரத்தில் பிரசல்ஸ் நகரில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலை நினைவூட்டி அதில் பலியானவர்களின் குடும்பங்களுக்குத் தமது இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார். பயங்கரவாதம் மனிதகுலத்துக்கே ஒரு சவால் என்று அவர் குறிப்பிட்டார். பயங்கரவாதத்துக்கு எதிராக மனிதகுல சக்திகள் அனைத்தும் ஒருங்கிணைந்து போராட வேண்டிய தருணம் வந்துவிட்டது என்று அவர் கூறினார்.

பயங்கரவாதம் மிகப்பெரிய அபாயமாக உருவெடுத்துள்ளபோதிலும் அதற்கு சரியான பதிலடி கொடுக்க உலகினால் இயலவில்லை என்று குறிப்பிட்டு, “நல்ல பயங்கரவாதம்” “கெட்ட பயங்கரவாதம்” என்றெல்லாம் பிரித்துப் பேசுவது பயங்கரவாதத்துக்கு வலு சேர்ப்பதே ஆகும் என்றார். இந்தியா 40 ஆண்டுகளாக பயங்கரவாதக் கொடுமையைச் சந்தித்து வருகிறது. 09/11 வரை இந்த அபாயத்தை வெறும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினையாகவே சிலர் கருதினார்கள் என்று குறிப்பிட்டு, பயங்கரவாதத்துக்கு இந்தியா ஒரு போதும் அடி பணியாது என்று பிரகடனம் செய்தார். மதத்திலிருந்து பயங்கரவாதத்தை பிரித்துப் பார்க்க வேண்டும் என்று பல உலக நாடுகளின் தலைவர்களுடன் தாம் பேசியபோது எடுத்துரைத்ததாகவும் கூறினார். அண்மையில் புதுதில்லியில் நடைபெற்ற சூஃபி மாநாட்டில் கலந்துகொண்ட மிதவாத இஸ்லாமிய அறிஞர்கள் பயங்கரவாதத்துக்கு கண்டனம் தெரிவித்தார்கள் என்றும் கூறினார். தீவிரவாதம் உருவாகாமல் தடுக்க இந்த அணுகுமுறை இன்றியமையாதது என்றும் கூறினார். பயங்கரவாதத்துக்கு முடிவுகட்ட தகுந்த சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

பயங்கரவாதத்துக்கு ஐ.நா. மன்றம் இதுவரை சரியான பதிலடி கொடுக்கத் தவறிவிட்டது என்றும் குறிப்பிட்டு, ஐ.நா. இந்த விஷயத்தில் தனது கடமையை சரிவர நிறைவேற்றவில்லை என்றும் கூறினார். இது போன்ற சூழ்நிலைக்கு சரியான பதிலடி கொடுக்காத நிறுவனங்கள் காலத்துக்கு ஏற்றவையா என்று கருதும் நிலை ஏற்படும் என்றும் எச்சரித்தார்.

உலகமே பொருளாதார தேக்க நிலையை கடந்து கொண்டிருக்கும் போது இந்தியாவை நம்பிக்கை ஒளிக்கீற்றாக பார்க்கின்றன என்றும் கூறினார். இந்தியா இப்போது வேகமான பொருளாதார வளர்ச்சி பெற்று வருகிறது, இந்த வளர்ச்சி ஒன்றும் அதிர்ஷ்டம் காரணமாக வந்ததல்ல என்றார். அடுத்தடுத்து 2 ஆண்டுகள் வறட்சியை சந்தித்த போதிலும் இந்த வளர்ச்சி கிட்டியுள்ளது என்றும் கூறினார். நல்ல நோக்கத்துடன் சிறந்த கொள்கைகளை வகுத்து செயல்படுவதே அதற்குக் காரணம் என்றும் தெரிவித்தார். 2015 – ம் ஆண்டில் தமது அரசு ஆற்றிய பங்களிப்பை விளக்க விரும்புவதாகவும் கூறினார். பெற்றோருடன் எத்தனாலை கலக்கும் திட்டம் கூடுதல் உற்பத்தி, இயற்கை உரக் கலப்பு மூலம் உரப்பற்றாக்குறைக்கு முடிவு கட்டியது ஆகியவற்றை விளக்கினார்.

ஏழைகளுக்கு எல்.பி.ஜி எரிவாயு இணைப்பு ஏராளமாக வழங்கப்பட்டுள்ளது. வசதி படைத்தவர்கள் எல்.பி.ஜி. எரிவாயு மானியத்தை விட்டுக் கொடுக்க முன்வந்தது இதற்குக் காரணம் என்றார். 90 லட்சம் பேர் இவ்வாறு விட்டுக் கொடுக்க முன்வந்துள்ளார்கள் என்றும் கூறினார். இந்த விஷயத்தில் மத்தியபட்ஜெட்டில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

2015- ம் ஆண்டில் மின்சாரமும் நிலக்கரியும் அதிகபட்ச அளவாக உற்பத்தியானது, இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பு ரயில்வே என்று நம்புவதால் ரயில்வேயில் முதலீடு கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார். கார் உற்பத்தியும் மென்பொருள் ஏற்றுமதியும் 2015 – ல் அதிகபட்ச அளவை எட்டியுள்ளன என்றார்.

நிதி உள்ளடக்க திட்டத்தின் கீழ் 21 கோடி புதிய வங்கிக் கணக்குகள் திறக்கப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டு ஜன்தன் ஆதார் மொபைல் திட்டம் ஊழலை ஒழிக்கவும் எல்.பி.ஜி இணைப்பை வழங்கவும் எப்படி உதவியது என்பதை விளக்கினார். சுதந்திரம் கிடைத்து 70 ஆண்டுகள் ஆன போதிலும் 18,000 கிராமங்கள் இன்னமும் மின் இணைப்பு பெறாமல் இருப்பதைக் குறிப்பிட்டு, 1000 நாட்களுக்குள் இந்த கிராமங்களுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுவிடும் என்று உறுதி அளித்தார். 7,000 கிராமங்கள் இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை இணைப்புப் பெற்றுள்ளது திருப்தி அளித்ததாக கூறினார். சாலை அமைக்கும் பணியும் உத்வேகம் பெற்றுள்ளது என்று குறிப்பிட்டார். 175 கிகாவட் மின்சாரம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சாதனங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் என்று தாம் அறிவித்த திட்டத்தைப் பார்த்து உலகமே வியப்புற்றது என்றும் அந்த குறிக்கோளை ஈடேற்றும் பாதையில் நாடு வேகமாக செல்கிறது என்றும் கூறினார். ராணுவத்தில் ஒரு பதவிக்கு ஒரே ஓய்வூதியம் என்று தாம் அறிவித்த கொள்கை இப்போது நிறைவேற்றப்பட்டுள்ளது என்றும் மகிழ்ச்சி தெரிவித்தார்.

மிகவும் சிக்கலான பிரச்சினைகளுக்குக் கூட சுமுகமாகத் தீர்வு காண முடியும் என்பதற்கு வங்களாதேசத்துடன் இந்தியா செய்து கொண்ட நில எல்லை ஒப்பந்தம் சிறந்த எடுத்துக்காட்டு என்றும் கூறினார். தமது பெயரில் உள்ள நரேந்திர மோடி செயலி பற்றியும் வலைதளத்தில் இந்திய-பெல்ஜிய உறவுகள் குறித்தும் ஏராளமான ஆலோசனைகள் வந்துள்ளன என்றும் கூறினார்.

வெளிநாடுவாழ் இந்தியர்களுக்காக சமீபத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளையும் பிரதமர் திரு. நரேந்திர மோடி விவரித்தார்.

******