பி.எம்.இந்தியா

இந்தியாவின் நவீன ரயில் உள்கட்டமைப்பை விரிவுபடுத்துவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க படியாக, பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் இருந்து நான்கு புதிய வந்தே பாரத் விரைவு ரயில் சேவைகளைக் கொடியசைத்து தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு மோடி, இதில் பங்கேற்பதற்காக வந்துள்ள அனைத்து பிரமுகர்களையும் வரவேற்று, பாபா விஸ்வநாதரின் புனித நகரமான வாரணாசியின் அனைத்து குடும்பங்களுக்கும் தனது மரியாதைக்குரிய வாழ்த்துகளைத் தெரிவித்தார். தேவ் தீபாவளிப் பண்டிகையின் போது காணப்பட்ட அசாதாரண கொண்டாட்டங்கள் குறித்து குறிப்பிட்ட அவர், மேலும் இன்று ஒரு நல்ல தருணம் அமைத்திருக்கிறது என்றும், இந்த வளர்ச்சிக்கானத் திருவிழாவையொட்டி அனைவருக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
உலகின் வளர்ந்த நாடுகளில், பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய உந்துசக்தியாக வலுவான உள்கட்டமைப்பு இருந்துள்ளது என்பதைக் சுட்டிக்காட்டிய திரு மோடி, குறிப்பிடத்தக்க முன்னேற்றம் மற்றும் வளர்ச்சியடைந்த ஒவ்வொரு நாட்டிலும், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முக்கிய பங்கு வகித்து வந்துள்ளதை அவர் எடுத்துரைத்தார். இந்தியாவும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நடவடிக்கைகளை விரைவாக செயல்படுத்தி முன்னேற்றப் பாதையில் சென்றுகொண்டிருப்பதாக அவர் கூறினார். இந்தச் சூழலில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் புதிய வந்தே பாரத் ரயில் சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருவதாக பிரதமர் அறிவித்தார். பனாரஸ்–கஜுராஹோ வந்தே பாரத் விரைவு ரயில் சேவை தவிர, ஃபிரோஸ்பூர்–டெல்லி, லக்னோ–சஹரன்பூர் மற்றும் எர்ணாகுளம்–பெங்களூரு இடையேயான வந்தே பாரத் விரைவு ரயில் சேவைகளையும் அவர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இந்த நான்கு புதிய ரயில்களுடன், நாட்டில் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்களின் மொத்த எண்ணிக்கை தற்போது 160 – ஐக் கடந்துள்ளது. இந்த ரயில் சேவைகளை தொடங்கி வைத்த பின் வாரணாசி மக்களுக்கும், நாட்டு மக்கள் அனைவருக்கும் பிரதமர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
“வந்தே பாரத், நமோ பாரத், அமிர்த பாரத் போன்ற ரயில்கள் அடுத்த தலைமுறைக்கான இந்திய ரயில்வேயின் திட்டங்களுக்கு அடித்தளம் அமைத்துள்ளதுள்ளதாக” பிரதமர் கூறினார். இது இந்திய ரயில்வேத் துறையை மாற்றியமைப்பதற்கான ஒரு விரிவான நடவடிக்கை என்று அவர் தெரிவித்தார். வந்தே பாரத் ரயில் என்பது இந்தியர்களால், இந்தியர்களுக்காக உருவாக்கப்பட்ட ரயில் என்றும் அவர் கூறினார். இது ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை சேர்க்கிறது என்றார். வெளிநாட்டுப் பயணிகளும் வந்தே பாரத் ரயில்களைக் கண்டு வியப்படைகிறார்கள் என்று அவர் குறிப்பிட்டார். வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான இலக்குகளை எட்ட நாட்டில் உள்ள வளங்களை மேம்படுத்தும் பணிகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது என்றும், இந்த ரயில்கள் அதற்கான படிக்கற்களாக அமைந்துள்ளன என்றும் திரு மோடி தெரிவித்தார்.
இந்தியாவில், புனித யாத்திரை என்பது பல நூற்றாண்டுகளாக தேசிய உணர்வின் ஊடகமாகக் கருதப்பட்டு வருவதை எடுத்துரைத்த திரு மோடி, இது தெய்வீக தரிசனத்திற்கான யாத்திரைகள் மட்டுமின்றி, இந்தியாவின் ஆன்மாவுடன் இணைக்கும் புனிதமான மரபுகள் என்றும் அவர் குறிப்பிட்டார். பிரயாக்ராஜ், அயோத்தி, ஹரித்வார், சித்ரகூட் மற்றும் குருக்ஷேத்ரா ஆகியவை நாட்டின் பாரம்பரியத்தின் ஆன்மீக மையங்களாக திகழ்வதை அவர் சுட்டிக்காட்டினார். “இந்த புனித தலங்கள் தற்போது வந்தே பாரத் விரைவு ரயில் சேவைகள் மூலம் இணைக்கப்பட்டுள்ளன என்றும், இது இந்தியாவின் கலாச்சாரம், நம்பிக்கை மற்றும் முன்னேற்றத்திற்கான பயணத்தின் ஒருங்கிணைப்பைக் குறிக்கிறது என்றும், இத்தகைய நடவடிக்கைகள் பாரம்பரிய நகரங்களை தேசிய முன்னேற்றத்தின் அடையாளச் சின்னங்களாக மாற்றுவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க படியாகும்” என்று பிரதமர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2187690
***
AD/SV/RJ
Delighted to flag off four Vande Bharat trains. These will enhance connectivity and provide greater comfort for citizens.
— Narendra Modi (@narendramodi) November 8, 2025
https://t.co/kHl2ufYLoF