Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரதமர் “பிரிட்ஜிடல் நேஷன்” எனும் புத்தகத்தை வெளியிட்டார்


 

பிரதமர் திரு நரேந்திர மோடி புதுதில்லி 7, லோக் கல்யாண் மார்க் என்னும்  முகவரியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் “பிரிட்ஜிடல் நேஷன்” எனும் நூலை வெளியிட்டார்.  அதன் முதல் பிரதியை திரு ரத்தன் டாடா பெற்றுக் கொண்டார்.  இந்த புத்தகம் திரு என் சந்திரசேகரன், திருமிகு ரூபா புருஷோத்தம் ஆகியோரால் எழுதப்பட்டுள்ளது. 

 

தொழில்நுட்பம்: “அனைவரும் ஒன்றிணைவோம்-அனைவரும் உயர்வோம்” என்பதை எட்டும் பாலம்

 

நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தை ஆழமாக விவரித்துள்ளதுடன், நேர்மறையான நம்பிக்கை நிறைந்த தொலைநோக்கு கொண்ட  நூலாக இதனை உருவாக்கியுள்ளதாக ஆசிரியர்களைப் பாராட்டினார்.  இந்தியாவின்  கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையை தொழில்நுட்பம் ஆக்கப்பூர்வமாக மாற்றிவரும் சூழலில் இந்தப் புத்தகம் வெளிவந்துள்ளதாக அவர் தெரிவித்தார். 

 

தொழில்நுட்பம் என்பது ஒரு பாலமே தவிர, அது பிரிக்கக்கூடியது அல்ல என்பதை  அனைவரும் உணர வேண்டியது அவசியம் என்று பிரதமர் வலியுறுத்தினார்.  “அனைவரும் ஒன்றிணைவோம்-அனைவரும் உயர்வோம்” எனும் இலக்கை எட்டும் வகையில் அபிலாஷைகள் மற்றும்  சாதனைகள், தேவை மற்றும் விநியோகம், அரசு மற்றும் நிர்வாகம்  ஆகியவற்றுக்கு இடையே தொழில்நுட்பம் பாலமாக இணைப்பை உருவாக்குகிறது என்று பிரதமர் கூறினார்.    வேகமாக வளரும் இந்தியாவை உருவாக்க நேர்மறையான எண்ணம், படைப்பாற்றலைக் கொண்ட ஆக்கப்பூர்வமான மனப்பான்மை தேவை என்று அவர் கூறினார். செயற்கை நுண்ணறிவு மற்றும் மனித நோக்கங்களுக்கு இடையே இணைப்பை உருவாக்க வேண்டியது அவசியம் என்றும் பிரதமர் வலியுறுத்தினார். 

 

தொழில்நுட்பத்தின் மூலம் நிர்வாகம்: கடந்த ஐந்தாண்டுப் பயணம்

 

சீர்திருத்து, மாற்று, திறம்படச் செயல்படு ஆகியவற்றின் அடிப்படையில் அரசின் திட்டங்களை செயல்படுத்துவதற்கு தொழில்நுட்பம் எவ்வாறு முக்கிய அம்சமாக இருந்தது என்பதைப் பிரதமர் விளக்கினார்.  கோடிக்கணக்கான பெண்களின் வாழ்க்கையை மாற்றியமைத்துள்ள உஜ்வாலா திட்டத்தை  கண்காணிக்க தரவு நுண்ணறிவு, டிஜிட்டல் மேப்பிங் ஆகியவை பயன்படுத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார்.  ஜன்-தன் யோஜனா, ஆயுஷ்மான் பாரத் போன்ற திட்டங்களின் மூலம் மக்களை அதிகாரம் பெற்றவர்களாக மாற்றுவதில் எவ்வாறு தொழில்நுட்பம் உதவியது என்பது பற்றியும் பிரதமர் விளக்கினார். 

 

அரசு மின்னணு சந்தை  என்னும் புதுமையான நடைமுறையைக் கையாண்டு அரசுத்துறைகளுக்கு இடையே நிலவிய இடையூறுகளை  அகற்றி, தேவைக்கும், விநியோக நடைமுறைக்கும் இடையே இணைப்பை ஏற்படுத்த தமது அரசு  தொழில்நுட்பத்தை பயன்படுத்தியதை பிரதமர் விரிவாக எடுத்துரைத்தார்.  நாட்டில் வலுவான ஸ்டார்ட் – அப் முறையை குறிப்பாக நிலை 2 மற்றும் நிலை 3 நகரங்களில் உருவாக்க தொழில்நுட்பம் எப்படி பயன்படுத்தப்பட்டது என்பதையும் அவர் விவரித்தார்.  இது முற்றிலும் புதிய சுற்றுச்சூழல் சார்ந்த ஸ்டார்ட்-அப்புகளை மேம்படுத்த உதவியதாக பிரதமர் கூறினார். 

 

தொழில்நுட்பத்தால்  ஏற்படும் சவால்களை வாய்ப்புகளாக மாற்றுவதன் அவசியம் குறித்து வலியுறுத்திய பிரதமர், இந்திய தபால் வங்கியின் உருவாக்கத்தை உதாரணமாகக் குறிப்பிட்டார்.  தொழில்நுட்பம் பெரும் இடையூறாக உருவான நிலையில், அஞ்சல் துறை முழுமையும், தொழில்நுட்பம் சார்ந்த வங்கித் துறையாக மாற்றப்பட்டதாக அவர் தெரிவித்தார்.  அஞ்சல் வங்கி மூலம் லட்சக்கணக்கானோர் பயனடையும்  வகையில் தபால்காரர்கள் வங்கிப் பணியாளர்களாக, மாற்றப்பட்டுள்ளனர்.   

 

தூதரக அதிகாரிகள், அரசுப் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் பங்கேற்றனர்

 

இந்த நிகழ்ச்சியில் அமெரிக்கா, இங்கிலாந்து, சீன மக்கள் குடியரசு உள்ளிட்ட நாடுகளின் தூதர்கள் மற்றும் தூதரக அதிகாரிகள்,  மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களைச் சேர்ந்த செயலர்கள், சிஐஐ, எப்ஐசிசிஐ, நாஸ்காம் உள்ளிட்ட தொழில் அமைப்புகளின் பிரதிநிதிகள், ரஜத் ஷர்மா, நவிகா குமார், ராஜ்கமல் ஜா, சுதிர் சவுத்திரி,  ஸ்மிதா பிரகாஷ் உள்ளிட்ட ஊடகவியலாளர்கள், டாடா குழும உறுப்பினர்கள் பங்கேற்றனர். 

 

புத்தகம் பற்றி

 

மக்களும், தொழில்நுட்பமும் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து பரஸ்பரம் பயன்பெறும் சுற்றுச்சூழல் குறித்த வலுவான எதிர்கால தொலைநோக்கை இந்தப் புத்தகம் கொண்டுள்ளது.  மனித சக்திக்கு மாற்றாக தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக, இந்தியா இதனை மேலும் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும்  கருவியாக பயன்படுத்தலாம் என்று இந்தப் புத்தகம் தெரிவிக்கிறது.  அதிநவீன டிஜிட்டல் உபகரணங்கள், அபிலாஷைகளுக்கும், இலக்குகளை அடைவதற்கும் இடையிலான பாலமாக திகழலாம் என்பதால், “பிரிட்ஜிடல்” எனும் தலைப்பு சூட்டப்பட்டுள்ளது.