Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரதமர் வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளர்களிடையே கலந்துரையாடல்


பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளர்களிடையே
காணொலி மூலம் கலந்துரையாடினார்.

பிரதமர், கொவிட்-19 குறித்த விழிப்புணர்வைப் பரப்பி வருவதற்காக வானொலி
நிகழ்ச்சி தொகுப்பாளர்களைப் பாராட்டினார். முழு அடைப்பு காலத்தின்
போதும், வானொலி நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் தங்கள் கடமைகளை ஆற்றும் வகையில் வீடுகளில் இருந்தபடியே நிகழ்ச்சிகளை ஒலிப்பதிவு செய்து வருவது
பாராட்டுக்குரியது என்று அவர் கூறினார்.

வானொலி நிகழ்ச்சிகள் பரவலாகச் சென்றடைவதால், கேட்கும் லட்சக்கணக்கான இந்தியக் குடும்பங்களில், குடும்ப உறுப்பினர்களைப் போல நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் உள்ளனர் என்று பிரதமர் கூறினார். மக்கள், அவர்கள்
சொல்லுவதை காதால் கேட்பதுடன் அவற்றைப் பின்பற்றுகிறார்கள். வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளர்கள், தகவல்களைத் தருவதுடன், மூட நம்பிக்கையையும்
போக்குகிறார்கள், மக்களை உற்சாகப்படுத்தி ஊக்குவிக்கின்றனர் என்று அவர் தெரிவித்தார்.

நிபுணர்களின் கருத்துக்கள், அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் ஆகியவை பற்றிய
செய்திகளைப் பரப்புவதுடன் நின்றுவிடாமல், மக்கள் எதிர்கொள்ளும் கஷ்டங்கள் ,
சவால்கள் குறித்த கருத்துக்களை அரசுக்குத் தெரிவித்தால் அரசு தாமாகவே
முன்வந்து அவற்றை தீர்க்க நடவடிக்கை எடுக்க முடியும் என்று பிரதமர் கூறினார்.

நேர்மறையான செய்திகளை, குறிப்பாக கொரோனோ வைரஸ் தொற்றிலிருந்து முற்றிலுமாகக் குணமடைந்து மீண்டவர்களின் கதைகளை நாடெங்கிலும் சென்று சேர்த்தால், நாம் ஒன்றாகச் செயல்பட முடியும் என்று பிரதமர் கூறினார். காவல் துறை அதிகாரிகள், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் போன்ற உள்ளூர் கதாநாயகர்களின் பங்களிப்பை கொண்டாடும் விதமாக நிகழ்ச்சிகளை அமைக்குமாறு, வானொலி நிகழ்ச்சித் தொகுப்பாளர்களை பிரதமர் கேட்டுக்கொண்டார்.

மக்கள் பரிவுடன் நடந்து கொள்ள வேண்டியது அவசியம் என்று வலியுறுத்திய பிரதமர், தொற்றைப் பரப்பிவிடுவார்கள் என்ற அச்சத்தின் காரணமாக, மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், விமான ஊழியர்கள் ஆகியோரிடம் தவறாக நடந்துகொள்வது குறித்து சுட்டிக் காட்ட வேண்டும் என்றும், அப்போதுதான் இத்தகைய பிரச்சினைகளுக்கு முடிவு ஏற்படும் என்றும் கூறினார்.

பொது மக்களுக்கு உதவ அர்ப்பணிப்புடன் பணியாற்றும் காவல் துறையினரின் பங்கு குறித்து மக்களுக்கு தெரிவிக்க வேண்டியதன் அவசியத்தையும் பிரதமர்
வலியுறுத்தினார். பொது மக்கள் காவல் துறையினருடன் ஒத்துழைக்க வேண்டும்
என்றும் அதேசமயம் காவல் துறையினர் பலப்ரயோகம் செய்வதை தவிர்க்க
வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். ஒழுங்கை அமல்படுத்துவதும்
அவசியம் என்றும் அவர் கூறினார். உலகளாவிய இந்த நோய்த்தொற்றை எதிர்ப்பதில் 130 கோடி இந்தியர்களும் தொண்டர்களாக செயல்பட வேண்டும் என்றார்.

இந்த கஷ்டமான சூழலில் ஏழைகளுக்கும் வாய்ப்பு வசதிகள் அற்றவர்களுக்கும்
அரசு பல்வேறு உதவித் திட்டங்களை அறிவித்துள்ளதை பிரதமர்
சுட்டிக்காட்டினார். இந்த அறிவிப்புகள் குறித்த சரியான தகவல்கள், உடனடியாக
அவர்களுக்கு சென்றடைவது மிக முக்கியமானது என்றார் அவர். இந்த
அறிவிப்புகள் குறித்து வானொலி நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் நேயர்களுக்கு
அறிவிப்பது அவசியம் என்கிறார். சமூக இடைவெளி, சுயமாக தனிமைப்படுத்திக்
கொள்வது குறித்தும் எடுத்துக் கூறுமாறு வானொலி நிகழ்ச்சி
தொகுப்பாளர்களை பிரதமர் கேட்டுக் கொண்டார்.

தங்கள் பதிலுரையில் வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளர்கள், 2014 முதல் மன் கி
பாத் வானொலி கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்துவதால் பிரதமர் தங்களில்
ஒருவர் என்று குறிப்பிட்டனர். பிரதமர் விடுத்த மக்கள் ஊரடங்கு மற்றும்
முன்னணி போராளிகளுக்கு பாராட்டுத் தெரிவிக்கும் அவரது புதுமையான கைதட்டல் முறைக்கு கிடைத்த வரவேற்பிற்கும் அவர்கள் பாராட்டு தெரிவித்தனர். பிரதமரின் தலைமையை புகழ்ந்துரைத்த தொகுப்பாளர்கள், கொவிட் -19 க்கு எதிரான போரில் தேசத்தின் குரலாக இருக்க உறுதி ஏற்பதாகக் கூறினர்.

வதந்திகள் பரவுவதைத் தடுப்பதில் அரசுத் துறை நிறுவனமான அகில இந்திய
வானொலிக்கு முக்கிய பங்கு உள்ளது என்று பிரதமர் கூறினார். வானொலி
நிகழ்ச்சி தொகுப்பாளர்களும் வதந்திகளைக் கட்டுப்படுத்தப்படுத்துவதில்
உதவ வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். சமுதாயத்தில் ஆக்கபூர்வ மற்றும் நேர்மறை மனப்பான்மை ஏற்பட உழைக்குமாறு வானொலி நிகழ்ச்சித் தொகுப்பாளர்களை அவர் கேட்டுக் கொண்டார்.

மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் மற்றும் இத்துறை செயலாளர்
ஆகியோர் இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

****