பி.எம்.இந்தியா
புனே மெட்ரோ திட்டம் (பகுதி-1) -க்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டினார்
அதையொட்டி புனே நகரில் கூடியிருந்த ஏராளமான மக்கள் மத்தியில் பேசிய பிரதமர், இந்தியா வெகு வேகமாக நகர்ப்புற வசதிகளைப் பெற்று வருகிறது என்றும், அதனால் இரு வழிகளில் உழைக்க வேண்டியது அவசியம் என்றும் கூறினார். கிராமங்களில் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது, நமது நகர்ப்புறங்களில் எதிர்கொண்டு வரும் சவால்களை சமாளிக்க நீண்டகால நோக்குடன் சிந்திப்பது ஆகியவற்றை கருத்தில் கொண்டு உழைக்க வேண்டும் என்று கூறினார்.
எதிர்காலத்துக்கு நாம் திட்டமிட வேண்டும் என்று வலியுறுத்திய பிரதமர், எல்லா விஷயங்களையுமே அரசியல் கண்ணோட்டத்துடன் பார்க்க முடியாது என்று கூறினார். நமது நகரங்களின் வளர்ச்சிக்காக போதிய அளவில் நாம் திட்டமிட வேண்டும் என்று குறிப்பிட்டார்.
வேகமாக வளரும், நகரமயமாகி வரும் பகுதிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக `ஊரக நகர திட்டம்’ குறித்து மத்திய அரசு தீவிரமாக பணியாற்றி வருகிறது என்று பிரதமர் தெரிவித்தார்.
இப்போதைக்கான ஆதாயங்கள் முக்கியம் என்று கூறிய பிரதமர், எதிர்கால தேவைகள் மற்றும் விருப்பங்களைப் நிறைவேற்றும் வகையிலான வசதிகளும் தேவைப்படுகிறது என்று குறிப்பிட்டார். எந்தத் திட்டம் தொடங்கப்பட்டாலும், குறிப்பிட்ட காலவரம்புக்குள் அவை நிறைவேற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை என்று பிரதமர் தெரிவித்தார்.
எரிவாயுத் தொகுப்புகள், தண்ணீர் தொகுப்புகள், டிஜிட்டல் நெட்வொர்க், விண்வெளி தொழில்நுட்பத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்துதல், விவசாயிகளுக்கு உதவும் வகையில் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது ஆகியவற்றில் அரசு பணியாற்றி வருகிறது என்று பிரதமர் கூறினார்.
இந்த நாட்டில் சட்டத்தின் முன் அனைவரும் சமம், அனைவரும் சட்டத்தைப் பின்பற்ற வேண்டும் என்று அவர் கூறினார். ஊழல் மற்றும் கருப்புப் பணத்தின் தீமைகள் முன்பே அகற்றப்பட்டிருந்தால், தாம் எடுத்துள்ள பணம் மதிப்பிழக்கச் செய்யும் நடவடிக்கையை இப்போது எடுத்திருக்க வேண்டி இருந்திருக்காது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
கற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டும் நகரம் புனே என்று அவர் கூறினார். ஆன்லைன் வங்கி சேவையை பயன்படுத்தவும், அதில் உள்ள வசதிகளை அறிந்து கொள்ளவும் நகர மக்கள் முன்முயற்சி எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இந்த நாட்டில் 125 கோடி இந்தியர்களின் கருத்துகள் கேட்கப்படும்; இந்தக் கருத்துகளை சிலரால் சிதைத்துவிட முடியாது என்று பிரதமர் கூறினார்.