பி.எம்.இந்தியா
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை பொது மற்றும் வணிக விஷயங்களில் பரஸ்பர சட்ட உதவிகளை மேற்கொள்ள இந்தியா- மொரோக்கோ நாடுகளுக்கு இடையே ஒப்பந்தம் செய்து கொள்ள தனது ஒப்புதலை அளித்தது.
இதன் முக்கிய அம்சங்களாவன:
1. நீதிமன்ற அழைப்புகளையும் இதர நீதிமன்ற ஆவணங்களையும் வழங்குவது அல்லது இவை தொடர்பான செயல்முறைகள்;
2. பொதுவிஷயங்களில் சான்றுகளைப் பதிவு செய்வது;
3. ஆவணங்கள், பதிவுகள் ஆகியவற்றை ஆய்வு செய்வது, அவற்றை அடையாளம் காண்பது மற்றும் நீதிமன்றத்தின் முன்வைப்பது;
4. பொது விஷயங்களில் சான்றுகளை மேற்கொள்வதற்கான கோரிக்கை கடிதங்களை வழங்குவது; மற்றும்
5. நடுவர் நீதிமன்றங்கள் வழங்கிய உத்தரவுகளை அங்கீகரித்து, செயல்படுத்துவது.
பயன்கள்: இரு நாடுகளைச் சேர்ந்த குடிமக்களுக்கும் இது பயனுள்ளதாக இருக்கும். பொது மற்றும் வணிக விஷயங்களில் நட்புறவு மற்றும் பயனுள்ள ஒத்துழைப்புக்கான உறவுகளை வலுப்படுத்த வேண்டும் என்ற இருநாடுகளின் விருப்பத்தை இது நிறைவேற்றுவதாக இருக்கும். அடிப்படையில் இந்த ஒப்பந்தத்தின் சாரமும் மொழியும் உணர்வும் இதுவே ஆகும். நீதிமன்ற அழைப்புகள், நீதித்துறை ஆவணங்கள், கோரிக்கை கடிதங்கள் மற்றும் நீதிமன்ற உத்தரவுகள், நடுவர் நீதிமன்ற தீர்ப்புகள் ஆகியவற்றை செயல்படுத்துவதாக இருக்கும்.
பின்னணி:
விடுதலைக்கு முந்தைய காலத்தில் இருந்தே இந்தியாவிற்கும் ஆப்பிரிக்க நாடுகளுக்கும் இடையே உறவுகள் இருந்து வந்தன. கடந்த பல ஆண்டுகளாகவே இந்தியாவிற்கு மொரோக்கோவிற்கும் இடையே இருதரப்பு உறவுகளும் நட்புறவும் நீடித்து வந்துள்ளன. அணிசேரா இயக்கத்தில் இந்த இரு நாடுகளுமே பங்கேற்றிருந்தன. மொரோக்கோ காலனியாதிக்கத்திலிருந்து விடுதலை பெறவும், மொரோக்கோவின் விடுதலை போராட்டத்திற்கும் ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா ஆதரவு தெரிவித்து வந்துள்ளது. 1956 ஜூன் 20 அன்று இந்தியா மொரோக்கோவை அங்கீகரித்து 1957-ல் உறவுகளை ஏற்படுத்திக் கொண்டது. மொரோக்கோவுடன் பரஸ்பர ஒத்துழைப்பு தளத்தை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை இந்தியா உணர்ந்திருப்பதோடு, பொது மற்றும் வணிக விஷயங்களில் இரு நாடுகளுக்கும் இடையே ஒத்துழைப்பு அம்சங்களை விரிவுபடுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தையும் உணர்ந்துள்ளது.