Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மாநிலங்களுக்கிடையேயான குழுவின் பதினோராவது சந்திப்பில் பிரதமர் ஆற்றிய வரவேற்புரையில் இருந்து சில பகுதிகள்.

மாநிலங்களுக்கிடையேயான குழுவின் பதினோராவது சந்திப்பில் பிரதமர் ஆற்றிய வரவேற்புரையில் இருந்து சில பகுதிகள்.


மாநில முதலமைச்சர்களே, யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர்களே மற்றும் எனது அமைச்சரவை சகாக்களே, உங்கள் அனைவரையும் மாநிலங்களுக்கிடையேயான குழுவின் சந்திப்பிற்கு வரவேற்கிறேன். வெகு அரிதாகவே மாநில மற்றும் மத்திய தலைமைகள் ஒன்றாக சந்திக்க வாய்ப்பு அமைகிறது. கூட்டாட்சியமைப்பைச் சேர்ந்த அனைவரும் சந்திக்கும் இந்தக் கூட்டம் மக்களின் தேவைகளை தெரிந்துகொள்ளவும், அவர்கள் பிரச்சினைகளை நிவர்த்தி செய்யவும், ஒற்றுமையாக பல்வேறு உறுதியான முடிவுகளை எடுக்கவும் உதவி செய்கிறது. நம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்களின் கனவுகளை இத்தகைய சந்திப்புகள் நிறைவேற்றுகின்றன.

நம் மதிப்பிற்குரிய முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பதினாறு ஆண்டுகளுக்கு முன்பு இக்கூட்டத்தில் பேசிய வார்த்தைகளை நினைவுகூர்கிறேன். “இந்தியாவைப் போன்றதொரு பரந்துவிரிந்த ஜனநாயக நாட்டில் விவாதங்களும், கலந்துரையாடல்களும் மட்டுமே மக்களின் அடிப்படை தேவைகளை அறிந்து அதற்கு ஏற்றவாறு கொள்கை முடிவுகளை எடுக்க உதவும். மாநிலங்களுக்கிடையேயான குழு என்பது அரசுகளுக்கு இடையேயான குழுவாகவும் திகழ்கிறது. இக்குழு கொள்கைகளை வகுக்க உதவுவதோடு அவற்றை நிறைவேற்றவும் உதவுகிறது. நம் ஜனநாயகத்தையும், சமூகத்தையும், குடிமையையும் வலுப்படுத்த இந்தக் குழுவை கூடியமட்டும் பயன்படுத்திக் கொள்ளுமாறு நான் மாநிலங்களிடம் வேண்டிக்கொள்கிறேன்.”

மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையிலான உறவையும், மாநில அரசுகளுக்கிடையிலான உறவையும் வலுப்படுத்துவதில் மாநிலங்களுக்கிடையேயான குழுவின் பங்கு முக்கியமானதும், முதன்மையானதுமாகும். 2006ஆம் ஆண்டுக்குப் பின் இக்குழு சந்திக்கவில்லை என்றாலும், மாண்புமிகு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் முயற்சியால் இக்குழு மீண்டும் கூடியிருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். கடந்த ஓராண்டில் ஐந்து பகுதிசார் குழுக்களை அவர் வெற்றிகரமாக கூட்டியிருக்கிறார். அந்த கூட்டங்களில் பறிமாறிக்கொள்ளப்பட்ட ஆரோக்கியமான விவாதங்களின் விளைவாகவே நான் இந்த சந்திப்பைப் பார்க்கிறேன்.

மாநில அரசுகளும், மத்திய அரசும் தோளோடு தோளாக இணைந்து தோழனாக செயலாற்றும்போதுதான் தேசம் முன்னேற்றத்தை நோக்கிச் செல்லும். எந்த அரசுக்குமே தன்னிச்சையாக ஒரு திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றுவதென்பது கடினமான காரியம். எனவே எந்த ஒரு திட்டத்தை செயல்படுத்தவும் பொறுப்புணர்ச்சி எவ்வளவு அத்தியாவசியமோ அதே அளவுக்கு பொருளாதாரமும் அவசியம்.

14வது பொருளாதார கமிஷன் பரிந்துரையின்படி மத்திய அரசின் வரிகளில் மாநிலங்களின் பங்கு 32 சதவிகிதத்தில் இருந்து 42 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது மாநிலங்களுக்கு அவற்றின் தேவைக்கேற்ப நிதி ஆதாரம் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. 2015-16 ஆண்டில் மாநிலங்கள் மத்திய அரசிடம் இருந்து பெற்ற நிதி 2014-15ஆம் ஆண்டில் பெற்றதைவிட 21 சதவிகிதம் அதிகம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல பஞ்சாயத்துகள் மற்றும் நகர்புற வளர்ச்சிக்காக 2.87லட்சம் கோடி ரூபாய் வழங்கப்பட உள்ளது. இந்தத் தொகையும் சென்றமுறை வழங்கப்பட்டதைவிட அதிகமாகும்.,

இயற்கை வளங்கள் ஏலத்தில் விடப்படுவதில் கூட மாநிலங்களின் உரிமை கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது. நிலக்கரி ஏலத்தின் மூலம் மட்டும் மாநிலங்களுக்கு 3.35லட்சம் கோடி ரூபாய் வரும் ஆண்டுகளில் கிடைக்கும். பிற சுரங்கங்கள் ஏலம் விடப்படுவதில் இருந்து 18000 கோடி ரூபாய் வருமானம் மாநிலங்களுக்கு கிடைக்கும். அதே போல கேம்பா (CAMPA) சட்டத்தை திருத்துவதன் மூலம் வங்கிகளில் உறங்கும் 41000 கோடி ரூபாயை மாநிலங்களுக்கு வழங்கவும் முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.

அரசு செயல்பாடுகளில் நிலவும் வெளிப்படைத்தன்மையின் மூலம் எவ்வளவு தொகை மிச்சப்படுத்தப்பட்டுள்ளது என்ற விவரத்தையும் மத்திய அரசு மாநில அரசுகளுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறது. மண்ணெண்ணெய் விநியோகத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் இதற்கு சிறந்த உதாரணம். ஊரகப் பகுதிகளில் மின் இணைப்புகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. அடுத்த மூன்றாண்டுகளில் 5கோடி புதிய கேஸ் இணைப்புகளை மத்திய அரசு தர இருக்கிறது.

சமையல் எரிவாயு வரும் நாட்களில் மேலும் அதிகப்படுத்தப்படும். இந்த முயற்சிகளின் மூலம் மண்ணெண்ணெய் உபயோகம் கட்டுப்படுத்தப்படும். சமீபத்தில் மண்ணெண்ணெய் உபயோகப்படுத்தாத நகராக சண்டிகர் அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலங்கள் தங்கள் மண்ணெண்ணெய் உபயோகத்தை குறைக்கும்பட்சத்தில், அவ்வாறு குறைப்பதன் மூலம் சேமிக்கப்படும் தொகையில் 75 சதவிகிதத்தை மத்திய அரசு அந்தந்த மாநில அரசுகளுக்கு மானியமாக வழங்கும். இதை பயன்படுத்திக்கொண்ட கர்நாடக அரசு விரைந்து செயல்பட்டு மண்ணெண்ணெய் உபயோகத்தை குறைத்துக்கொண்டதோடு மானியத்தை கோரி பெட்ரோலிய அமைச்சகத்துக்கு விண்ணப்பம் அனுப்பியிருந்தது. அந்த விண்ணப்பம் ஏற்கப்பட்டு உடனே மானியமும் அனுப்பப்பட்டுவிட்டது. இதேபோல் எல்லா மாநிலங்களும் தங்கள் மண்ணெண்ணெய் உபயோகத்தை 25 சதவிகிதம் குறைத்துக்கொண்டாலே 1600கோடி ரூபாய் வரை மானியமாக பெறலாம்.

மத்திய-மாநில அரசுகளுக்கு இடையேயான உறவு மட்டுமல்லாமல், நம் தேசத்தின் பெரும்பான்மை மக்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளையும் விவாதிக்கும் தளமாக மாநிலங்களுக்கிடையேயான குழு நிலவுகிறது. கொள்கைகளை வடிவமைக்கும் சமயத்திலேயே அனைத்துத் தரப்பினரின் ஒப்புதலையும் பெறுவது, எல்லோருக்கும் ஏற்புடைய வகையில் பிரச்சினைகளை அணுகுவது போன்ற விஷயங்களையும் இங்கு விவாதிக்க தேவை இருக்கிறது.

பன்ச்சி கமிஷன் அறிக்கைக்கு அப்பாற்பட்டு மூன்று முக்கியமான விஷயங்களை நம் நோக்கத்தில் சேர்த்திருக்கிறோம். அதில் முக்கியமானது பாராளுமன்றத்தால் 2016ல் போடப்பட்ட ஆதார் சட்டம். இச்சட்டத்தின் மூலம் மானியம் மற்றும் பிற சேவைகளை நேரடியான பணப்பரிவர்த்தனை மூலம் செயல்படுத்த முடியும்.

128கோடி பேர் வசிக்கும் நம் நாட்டில் இன்றுவரை 102கோடி பேருக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது. நம் மக்கள் தொகையில் 79% பேரிடம் ஆதார் அட்டை உள்ளது. வயதுவந்தவர்களில் 96 சதவிகிதம் மக்களிடம் ஆதார் அட்டை உள்ளது. உங்கள் ஆதரவுடன் இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து இந்திய மக்களையும் ஆதார் எனும் குடையின் கீழ் நம்மால் இணைத்துவிட முடியும்.

ஆதார் அட்டை இன்று குடிமக்களின் மேம்பாட்டுச் சின்னமாக விளங்குகிறது. திட்டங்களின் வாயிலாக கிடைக்கும் நன்மைகள் சரியான மக்களை சென்றடைகிறது. வெளிப்படையான நிர்வாகத்தை வழங்குவதோடு, நேரடியாக மக்களின் வங்கிக்கணக்கிலேயே பணம் செலுத்தப்படுவதால் மிச்சமாகும் எத்தனையோ கோடி ரூபாய் நாட்டின் வளர்ச்சிக்காக பயன்படுத்தப்படுகிறது.

தோழர்களே, அம்பேத்கர் சொன்னதைப் போல, சொர்க்கத்தின் வழி என்பது இந்தியாவில் எவ்வளவு சிக்கலானதோ அதேபோன்றதுதான் இந்தியாவில் மாற்றத்திற்கான வழியும். சமூக மாற்றத்தை முன்னெடுக்கும்போது ஏராளமான விமர்சகர்கள் கிடைப்பார்களேயொழிய நண்பர்கள் குறைவாகத்தான் கிடைப்பார்கள்.

அம்பேத்கரின் இந்த வார்த்தைகள் இன்றைய சூழலுக்கும் பொருந்தும், எனவே விமர்சனங்களை புறந்தள்ளிவிட்டு சமூக மாற்றத்தை ஏற்படுத்த நாம் ஒருவருக்கொருவர் துணையாக இருப்பது அவசியம்.

மாநிலங்களுக்கிடையேயான குழுவில் விவாதிக்கப்பட வேண்டிய மற்றொரு முக்கியமான விஷயம் கல்வி. இந்தியாவின் பெரிய சொத்தாக கருதப்படுவது இந்தியாவின் இளைஞர் சக்தி. முப்பது கோடி சிறார்கள் பள்ளிக்குச் செல்லும் பருவத்தில் இருக்கிறார்கள். எனவே வருங்காலத்தில் திறன்வாய்ந்த ஏராளமான வல்லுனர்களை உலகிற்கு வழங்கும் ஆற்றல் நம் நாட்டிற்கு உண்டு. மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து நம் நாட்டு குழந்தைகள் அவர்களின் திறன்களை வளர்த்துக்கொள்ளும் விதத்திலும், இன்றைய தேவைக்கேற்ப தங்களை கூர்த்தீட்டிக் கொள்ளும் விதத்தில் நல்லதொரு சூழலை அமைத்துக்கொடுத்தல் அவசியம்.

“கல்வி என்பது முதலீடு. மரக் கன்றுகளை நடும்போது அவைகளிடம் நாம் கட்டணம் எதுவும் வசூலிப்பதில்லை. ஏனெனில் அம்மரங்கள் உயிர்வாயுவை அளித்து சுற்றுச்சூழலுக்கு நன்மை செய்யும் என்பது நமக்குத் தெரியும். அதைப்போலவே கல்வியும் நம் சமூகத்துக்கு நிறைய நன்மைகளைச் செய்யும்,” என்றார் பண்டிட் தீன் தயாள் உபாத்யாய்.

அவர் இதைச் சொன்னது 1965ஆம் ஆண்டில். கல்வியைப் பொறுத்தவரை அந்த காலத்தில் இருந்து நம் நாடு எவ்வளவோ வளர்ச்சி கண்டுவிட்டது. ஆனாலும் இன்னமும் கல்வித்தரத்தை முன்னேற்றும் வகையில் நாம் செய்யவேண்டிய விஷயங்கள் ஏராளம் உள்ளன. நம் கல்விமுறை குழந்தைகளுக்கு எவ்வகையிலான கல்வியை வழங்குகின்றன என்பதை நாம் விவாதத்திற்கு உட்படுத்தவேண்டும்.

கல்வியின் தேவையை குழந்தைகளுக்கு அறிவுறுத்துவதன் மூலம் கல்வித்தரத்தை நம்மால் மேம்படுத்த முடியும். வெறுமனே பள்ளிக்குச் செல்வது மட்டுமே கல்வி ஆகிவிடாது. கல்வி, குழந்தைகளின் ஆர்வத்தை தூண்டுவதாக இருக்க வேண்டும், அறிவைப் பெறுவதும், வளர்ப்பதும் எப்படி என்பதை கல்வி அவர்களுக்கு சொல்லித்தர வேண்டும். தங்கள் வாழ்க்கை முழுதும் கற்றுக்கொண்டே இருக்கும் வகையில் மாணவர்களை அவர்களின் கல்வி ஊக்குவிக்க வேண்டும்,

புத்தக அறிவு மட்டுமே கல்வி அறிவு இல்லை என சுவாமி விவாகானந்தர் தெரிவித்துள்ளார். கல்வி ஒருவரின் குணத்தை மேம்படுத்துவதாக இருக்கவேண்டும். சிந்தனையை நேர்ப்படுத்தி, அறிவுக்கூர்மையை வளர்த்து, தற்சார்போடு ஒருவர் வாழ வழி செய்தலே கல்வி ஆகும்.

21ஆம் நூற்றாண்டிற்கு தேவைப்படும் திறன்களையும், ஆற்றலையும் நம் நாட்டு இளைஞர்கள் பெற்று, தேர்ந்தெடுக்கும் துறைகளில் அவர்கள் வல்லுனர்களாக திகழ்வதை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு நமக்குள்ளது. புதுமையாகவும், படைப்பாற்றல் திறனோடும் நம் இளைஞர்கள் சிந்திக்கும் வண்ணம் அவர்களை தயார் செய்ய வேண்டும்,

இன்று நாம் விவாதிக்கப்போகும் மற்றொரு முக்கியமான விஷயம் உள்நாட்டு பாதுகாப்பு. தேசம் சந்திக்கும் உள்நாட்டு பாதுகாப்பு பிரச்சினைகளை எல்லாம் விவாதித்து, அவற்றுக்கான தீர்வுகளைத் தேட அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். தகவல் பரிமாற்றம், காவல்துறை மற்றும் பிற பாதுகாப்பு அமைப்புகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு, காவல்துறைக்கு புதிய தொழிநுட்பங்களை வழங்குதல், ஆகிவற்றின் மூலம் மட்டுமே உள்நாட்டு பாதுகாப்பில் நாம் சந்திக்கும் சவால்களை எதிர்கொள்ள முடியும். இந்த விஷயங்களில் நாம் கடக்க வேண்டிய தூரம் நிறைய இருப்பதால் எப்போதும் கவனமாகவும், விழிப்போடும் இருப்பது அவசியம்.

மாநிலங்களுக்கிடையேயான குழுவின் இந்த சந்திப்பு வெளிப்படையாகவும், திறந்த மனதுடனும் நம் கருத்துக்களை பறிமாறிக்கொள்ள நல்லதொரு வாய்ப்பை வழங்கியிருக்கிறது. இந்த சந்திப்பின் நோக்கம் சார்ந்த உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் வழங்குகள்.

இங்கு அலசப்படவிருக்கும் விஷயங்களின் மீது நாம் எந்த அளவுக்கு ஒருமித்த கருத்துக்களை கொண்டிருக்கிறோமோ, அந்த அளவிற்கு நம்மால் அவற்றை திறம்பட சமாளிக்க முடியும். அப்படிச் செய்வதன் மூலம் மத்திய-மாநில அரசுகளின் உறவு மற்றூம் கூட்டாட்சி தத்துவத்தை வலுப்படுத்துவதோடு, நம் குடிமக்களுக்கு நல்லதொரு எதிர்காலத்தையும் நம்மால் வழங்க இயலும்.