Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மிசோராம் மாநிலத்தின் ஐஸ்வால் நகரில் துய்ரியல் நீர்மின் திட்டத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரை


நண்பர்களே

சிபாய் வேக் உலே

இன் டம் எம்

பிரதமர் என்ற முறையில், மிசோராம் மாநிலத்துக்கு பயணம் மேற்கொள்ள, எனக்கு முதன்முறையாக வாய்ப்பு கிடைத்துள்ளது. 8 சகோதரிகள் என்று அழைக்கப்படும் வடகிழக்கு மாநிலங்களில், நான் பயணம் மேற்கொள்ளாத ஒரே மாநிலமாக மிசோராம் இருந்தது. எனவே, முதலில் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். எனினும், பிரதமராக பதவியேற்பதற்கு முன்னதாக, மிசோராமிற்கு நான் வந்துள்ளேன். இந்தப் பகுதியின் அமைதியான மற்றும் அழகான சூழல் எனக்கு நன்றாகத் தெரியும். இந்தப் பகுதியைச் சேர்ந்த அன்புகொண்ட மக்களுடன் நான் நேரத்தை செலவிட்டுள்ளேன். உங்களிடம் நான் வரும்போது, பழைய நினைவுகள் இயற்கையாக மீண்டும் தோன்றுகிறது.

உங்களது அழகான மாநிலத்துக்கு நான் பயணம் மேற்கொண்டதன் மூலம், மிசோராமின் அன்பான மக்களுடன் நேரத்தை செலவிட்ட அன்பான நினைவுகள் திரும்ப வந்துள்ளது. உங்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துவிட்டு தொடங்க விரும்புகிறேன். குறிப்பாக, மிசோராம் பகுதியின் அனைத்து மக்களுக்கும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

இந்த புத்தாண்டு, அனைவருக்கும், மகிழ்ச்சியையும், வளங்களையும் வழங்கட்டும்.
சிறிது நேரத்துக்கு முன்பு, ஐஸ்வாலுக்கு நான் வந்தபோது, மிசோராமின் அழகு: “மலைப்பகுதி மக்களின் நிலத்தை” பார்த்து மிகவும் உற்சாகமடைந்தேன்.
அமைதியான மற்றும் சாந்தமான நிலம்.

மக்களும் கூட, உற்சாகமும், உபசரிக்கும் தன்மையும் கொண்டவர்கள்.
இந்தியாவில் அதிக அளவில் கல்வியறிவு பெற்றவர்கள் கொண்ட மாநிலங்களில் ஒன்று.

அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் ஆட்சிக்காலத்தில் வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்காக தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பிராந்திய பாகுபாடுகளை முழுமையாக நீக்குவதே, பொருளாதார வளர்ச்சியின் மிகப்பெரும் நோக்கமாக இருக்க வேண்டும் என்று அடல் பிகாரி வாஜ்பாய் கூறியுள்ளார். இதற்காக பல்வேறு நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டார்.

2014-ம் ஆண்டில் நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது, அரசின் கொள்கைகள் மற்றும் முடிவுகளில் இந்த பிராந்தியத்தின் மீதான கவனத்தை திரும்ப கொண்டுவந்தோம். வடகிழக்கு மாநிலங்களுக்கு இரண்டு வாரத்துக்கு ஒரு முறை, குறைந்தது ஒரு மத்திய அமைச்சராவது பயணம் மேற்கொள்ள வேண்டும் என்ற விதியை நான் கொண்டுவந்தேன். எனினும், இந்தப் பயணம், அமைச்சர் காலையில் இங்கு வந்து, நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, மாலையில் திரும்புவது போன்று இருக்கக் கூடாது. எனது அமைச்சரவை சகாக்கள், உங்களைப் போன்ற மக்களுடன் தங்கியிருந்து, உங்களது பிரச்சினைகளை புரிந்துகொண்டு, அதன் பிறகு, அவர்களது அமைச்சகங்களில் கொள்கைகளை வகுக்க வேண்டும் என்று நான் விரும்பினேன்.

நண்பர்களே,

கடந்த 3 ஆண்டுகளில், வடகிழக்கு மாநிலங்களுக்கு எனது அமைச்சரவை சகாக்கள், 150-க்கும் மேற்பட்ட முறை பயணம் மேற்கொண்டதாக எனக்கு தெரிவித்தனர். நீங்கள் டெல்லிக்கு வர வேண்டிய தேவை ஏற்படக் கூடாது, உங்களது பிரச்சினைகள் குறித்து டெல்லிக்கு தகவல்களை அனுப்பும் தேவையை ஏற்படுத்தக் கூடாது, மாறாக டெல்லியே இங்கு வந்து பிரச்சினைகளை அறிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் நாங்கள் பணியாற்றி வருகிறோம்.

இந்தக் கொள்கையின்படியே, வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சகம், உங்கள் அருகிலேயே உள்ளது. அமைச்சர்களுடன், வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சகத்தின் செயலாளரும் கூட, சில வடகிழக்கு மாநிலங்களுக்கு ஒவ்வொரு மாதமும் பயணம் மேற்கொண்டு, அதிகாரிகளுடன் இங்கேயே தங்கியிருக்கிறார். அரசின் இந்த முயற்சிகளின் மூலம், வடகிழக்கு மாநிலங்களுக்கான திட்டங்கள், வேகமாக செயல்படுத்தப்படுகின்றன. பல ஆண்டுகளாக செயல்படுத்தப்படாமல் இருந்த திட்டங்கள், இன்று வேகமாக செயல்படுத்தப்படுகின்றன.

மத்திய அரசின் முயற்சியின் மூலம், வடகிழக்கு பிராந்தியத்தின் நலனுக்காக கொண்டுவரப்பட்ட திட்டங்கள், செயல்படத் தொடங்கியுள்ளன. பல ஆண்டுகளாக முடங்கிக் கிடந்த திட்டங்களில் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
வடகிழக்குப் பகுதியில் உள்ள 8 மாநிலங்களிலும் தயாரிக்கப்பட்ட பொருட்களை உள்ளடக்கி, சுயஉதவிக் குழுக்கள் அமைத்திருந்த கண்கவர் கண்காட்சியை நான் பார்வையிட்டேன். அற்புதமான திறமையைப் பெற்றுள்ள இந்த சுயஉதவிக் குழுக்களின் உறுப்பினர்களை நான் வாழ்த்துகிறேன். இந்தத் திறனையே ஊக்குவிக்கவும், வளர்க்கவும் மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. இதுவே தீன்தயாள் அந்த்யோதயா திட்டத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்று.

மத்திய அரசு வழங்கும் வட்டி மானியத்துடன் வடகிழக்கு மேம்பாட்டு நிதி கழகம் வழங்கும் கடன் மூலம், சுயஉதவிக் குழுக்கள் பயனடைகின்றன.
வடகிழக்கு கைவினை மற்றும் கைத்தறி வளர்ச்சி கழகம்; மற்றும் வடகிழக்கு பிராந்திய வேளாண்மை சந்தைப்படுத்துதல் கழகம் ஆகியவற்றின் செயல்பாடுகளுக்கு வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சகம் ஆதரவு அளித்து வருவதாக என்னிடம் தெரிவித்தனர்.

இந்த பொதுத்துறை நிறுவனங்கள், கலைஞர்கள், நெசவாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு பயிற்சி அளிப்பதுடன், சந்தைப்படுத்துதல் மற்றும் உணவுப் பதப்படுத்துதல் பணிகளுக்கு ஊக்குவிப்பாகவும் திகழ்கின்றன.
அறிவியல் மற்றும் தொழில் துறை ஆய்வு கவுன்சில் (CSIR), இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கவுன்சில் (ICAR), இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் (IITs) போன்ற நிறுவனங்கள் தயாரித்த பொருட்கள் மற்றும் தொழில்நுட்பங்களை வடகிழக்கு மாநிலங்களில் பின்பற்றுவதற்கான வாய்ப்புகள் குறித்து ஆராய வேண்டும். இதன்மூலம், உள்ளூர் பொருட்களின் மதிப்பை அதிகரிக்கச் செய்ய வேண்டும்.
நண்பர்களே! மிசோராமின் வரலாற்றில் முக்கிய மைல்கல்லை கொண்டாடுவதற்காக நாம் இங்கு கூடியுள்ளோம்:

60 மெகாவாட் துய்ரியல் நீர்மின் திட்டப் பணிகளை முடிக்கவும், அர்ப்பணிக்கவும் உள்ளோம். வடகிழக்கு பிராந்தியத்தில் மத்திய அரசின் மிகப்பெரும் நீர்மின் திட்டமான கோபிலி-யின் இரண்டாம் அலகு தொடங்கப்பட்டு, 13 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

மிசோராம் மாநிலத்தில் வெற்றிகரமாக தொடங்கப்பட்ட மத்திய அரசின் முதலாவது மிகப்பெரும் திட்டமாக துய்ரியல் நீர்மின் திட்டம் இருக்கும். இது மாநிலத்தின் முதலாவது மிகப்பெரும் நீர்மின் திட்டம். இது ஒவ்வொரு ஆண்டும் 251 மில்லியன் யூனிட்கள் அளவுக்கு மின் சக்தியை உற்பத்தி செய்யும். மேலும், மாநிலத்தின் சமூக-பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும்.

இந்தத் திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவந்ததன் மூலம், வடகிழக்குப் பிராந்தியத்தில், சிக்கிம் மற்றும் திரிபுரா-வுக்குப் பிறகு, மூன்றாவது மின்மிகை மாநிலமாக மிசோராம் மாறியுள்ளது.

இந்தத் திட்டத்தை முதலில் அறிவித்து, ஒப்புதல் அளித்தது, 1998-ல் இருந்த பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசு. ஆனால், இந்தத் திட்டம் தாமதமானது.
இந்தத் திட்டப் பணிகளை முடிவுக்கு கொண்டுவந்ததன் மூலம், தற்போது செயல்படுத்தப்படும் திட்டங்களின் பணிகளை முடிக்கவும், வடகிழக்குப் பிராந்தியத்தின் வளர்ச்சியில் புதிய பரிமாணத்தை ஏற்படுத்தவும் நாம் உறுதிபூண்டிருப்பது வெளிப்படுகிறது.

மின்சார உற்பத்தி செய்வதோடு, இந்த நீர்த்தேக்கத்தில் உள்ள நீர், நீர்வழிப் போக்குவரத்துக்கு புதிய வாய்ப்பை ஏற்படுத்தும். இது தொலைதூர கிராமங்களுக்கு இணைப்பை ஏற்படுத்தும். 45 சதுர கிலோமீட்டர்கள் அளவுக்கு பரந்து விரிந்துள்ள மிகப்பெரும் நீர்த்தேக்கத்தை, மீன்வள மேம்பாட்டுக்கும் பயன்படுத்த முடியும்.
இந்தத் திட்டம், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத சுற்றுலாவை ஊக்குவிப்பதுடன், குடிநீர் விநியோகத்தை உறுதிப்படுத்துவதற்கான ஆதாரமாகவும் இருக்கும். மாநிலத்தில் 2,100 மெகாவாட் அளவுக்கு நீர் மின்சார உற்பத்திக்கான வாய்ப்புகள் இருப்பதாக என்னிடம் தெரிவித்தனர். இதில், ஒரு சிறு பகுதியை மட்டுமே நாம் இதுவரை பயன்படுத்தியுள்ளோம்.

மின்சாரத்தை ஏற்றுமதி செய்யும் மாநிலமாக மிசோராம் மாற முடியாது என்று கூறுவதற்கு, எந்தவொரு காரணமும் எனக்கு தெரியவில்லை. வடகிழக்கு மாநிலங்களை மின்மிகை மாநிலங்களாக மாற்றுவது மட்டும் நமது நோக்கம் இல்லை. அதிநவீன மின் பகிர்மான முறையை உருவாக்கி, கூடுதலாக உற்பத்தியாகும் மின்சாரத்தை, மின்சாரப் பற்றாக்குறை உள்ள நாட்டின் மற்ற பகுதிகளுக்கு கொண்டுசெல்வதை உறுதிப்படுத்தவும் நாங்கள் இலக்கு நிர்ணயித்துள்ளோம்.
வடகிழக்கு மாநிலங்களில் மின்சார பகிர்மான அமைப்பை ஒருங்கிணைந்து மேம்படுத்துவதற்காக சுமார் ரூ.10,000 கோடியை எனது தலைமையிலான அரசு முதலீடு செய்துள்ளது.

நண்பர்களே,

நமது நாடு, சுதந்திரமடைந்து 70 ஆண்டுகளைக் கடந்த பின்னரும், 4 கோடி வீடுகளுக்கு மின்சார இணைப்பு வழங்கப்படவில்லை. இந்த மக்கள், 18-ம் நூற்றாண்டில் இருந்ததைப் போன்ற வாழ்க்கையை வாழ வேண்டிய நெருக்கடியில் இருப்பதை உங்களால் யூகிக்க முடியும். மிசோராம் மாநிலத்தில் உள்ள ஆயிரக்கணக்கான வீடுகளில் வசிக்கும் மக்கள், மின்சாரம் இல்லாமலேயே வாழ வேண்டிய நிலை உள்ளது. இதுபோன்ற வீடுகளுக்கு மின்சாரத்தை வழங்குவதற்காக மத்திய அரசு அண்மையில், பிரதமரின் சகஜ் பிஜ்லி ஹர் கர் திட்டம் (Pradanmantri Sahaj Bijli – Har Ghar Yojana) அல்லது சவ்பாக்யா (SAUBHAGYA) என்ற திட்டத்தை தொடங்கியுள்ளது. நாட்டில் உள்ள ஒவ்வொரு வீடுகளுக்கும் முடிந்தவரை விரைவில் மின்சாரம் வழங்குவதே எங்களது நோக்கம்.

இந்தத் திட்டத்தின்கீழ், ரூ.16,000 கோடிக்கும் மேல் செலவு செய்யப்படும். இந்தத் திட்டத்தின்கீழ், வழங்கப்படும் மின்சார இணைப்புக்கு எந்த வீடுகளிலும் கட்டணத்தை அரசு வசூலிக்காது. ஏழை மக்களின் வாழ்வில் ஒளியைப் பார்க்க விரும்புகிறோம், அவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்ற விரும்புகிறோம்.
நண்பர்களே,
நாட்டின் மற்ற பகுதியுடன் தொடர்புபடுத்திப் பார்க்கும்போது, வடகிழக்குப் பகுதியில் உள்ள ஏராளமான தொழில்முனைவோர், அவர்களின் திறனுக்கு ஏற்ப முன்னேற்றம் அடையவில்லை என்பதைப் பார்க்க முடியும். இதற்கு மிகப்பெரிய காரணம், நமது இளைஞர்கள், சொந்தமாக தொழில் தொடங்குவதற்குத் தேவையான முதலீட்டை அவர்கள் பெற முடியாததுதான். இளைஞர்களின் இந்தத் தேவையை கருத்தில் கொண்டே, பிரதமரின் முத்ரா திட்டம், இந்தியாவில் தொடங்குவோம் மற்றும் இந்தியாவை நிலைநிறுத்துவோம் போன்ற திட்டங்களை அரசு தொடங்கியுள்ளது. வடகிழக்குப் பிராந்தியத்திற்கு சிறப்பு கவனம் செலுத்துவதுடன், ரூ.100 கோடியில் மூலதன நிதியத்தை வடகிழக்குப் பிராந்திய மேம்பாட்டு அமைச்சகம் உருவாக்கியுள்ளது. மத்திய அரசின் இந்தத் திட்டங்களை அதிக அளவில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மிசோராம் பகுதி இளைஞர்களை நான் கேட்டுக் கொள்கிறேன். தொழில் தொடங்குவதில், உலகில் அதிசயத்தை ஏற்படுத்தும் திறனும், தைரியமும் இந்தப் பிராந்தியத்தில் உள்ள இளைஞர்களுக்கு உண்டு. இந்த இளைஞர்களுக்கு கைகொடுக்க இந்திய அரசு உறுதிபூண்டுள்ளது.

இந்திய இளைஞர்களின் திறன் மற்றும் பலம் மீது நம்பிக்கை வைத்துள்ளோம். தொழில் முயற்சிகள் மூலம் மேம்படுத்துவதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம். இது வளம் பெறும் வகையில், புத்தாக்கத்துக்கான சரியான வழிமுறை மற்றும் துணிவான முயற்சியை உருவாக்கும். இதன்மூலம், மிகப்பெரிய யோசனைகளைக் கொண்ட இடமாக இந்தியா மாறி, மனிதசமூகத்தை மாற்றியமைக்கும்.
2022-ம் ஆண்டில், இந்தியா சுதந்திரமடைந்து 75 ஆண்டுகளை நிறைவுசெய்ய உள்ளது. அனைத்து முனைகளிலும் வளர்ச்சிக்கான வித்துக்களை ஏற்படுத்துவதற்கான திட்டங்களை உருவாக்கவும், சாதனைகளைப் படைக்கவும் அடுத்த 5 ஆண்டுகள் வாய்ப்பாக அமைந்துள்ளது.

2022-ம் ஆண்டில் புதிய இந்தியாவை கட்டமைக்க, இரண்டு இலக்குகளை நோக்கி பணியாற்ற வேண்டியுள்ளது. அதாவது, பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பது மற்றும் வளர்ச்சியின் பலன்கள், அனைவருக்கும் கிடைக்கச் செய்வது. சப்கா சாத், சப்கா விகாஸ் (அனைவரும் இணைவோம் அனைவரும் உயர்வோம்) என்ற இலக்கின்படி, ஒவ்வொரு இந்தியருக்கும், சாதி, பாலினம், மதம், இனம் என எந்தப் பாகுபாடும் இன்றி, புதிய வளத்தைப் பெறுவதற்காக அனைவருக்கும் சமமான வாய்ப்பு கிடைக்கச் செய்ய வேண்டும்.

போட்டி நிறைந்த மற்றும் கூட்டுறவு கூட்டாட்சி மீது எனது அரசு நம்பிக்கை கொண்டுள்ளது. இங்கு மாநிலங்களுக்கு இடையே ஆரோக்கியமான போட்டி இருக்கும். மாற்றத்துக்கான முக்கிய காரணிகளாக மாநிலங்கள் உள்ளன என்பதில் நான் நம்பிக்கை கொண்டுள்ளேன்.

மாநிலங்களுக்கு இடையே ஆரோக்கியமான போட்டியை ஏற்படுத்த, பல்வேறு நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டுள்ளோம். மத்திய அரசின் நிதியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்களை சீராக செயல்படுத்துவதற்கான பரிந்துரைகளை மாநில முதலமைச்சர்களைக் கொண்ட குழு அளித்துள்ளது. இதனை நாங்கள் முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளோம்.

நிதிச்சுமை இருந்தபோதிலும், வடகிழக்கு மாநிலங்களுக்காக மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கான நிதிப் பகிர்வு 90-10 என்ற விகிதத்தில் தொடர்ந்து இருந்து வருகிறது. மற்ற திட்டங்களுக்கு 80-20 என்ற விகிதத்தில் உள்ளது.

நண்பர்களே, வளர்ச்சியின் பலன்கள் அனைவரையும் சென்றடைந்தால் தான், புதிய இந்தியா என்ற இலக்கை அடைய முடியும்.

பல்வேறு சமூக காரணிகளின் அடிப்படையில், பின்தங்கியுள்ள சுமார் 115 மாவட்டங்கள் மீது கவனம் செலுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன்மூலம், மிசோராம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் உள்ள பின்தங்கிய மாவட்டங்களும் பயனடையும்.

புதிதாக மத்திய அரசின் திட்டம் ஒன்றுக்கு நேற்றுதான் ஒப்புதல் அளித்தோம். வடகிழக்கு சிறப்பு கட்டமைப்பு வளர்ச்சித் திட்டம் என்ற இந்தத் திட்டத்தின் மூலம், இரண்டு பிரிவுகளில் கட்டமைப்பை உருவாக்குவதில் உள்ள இடைவெளி நிரப்பப்படும்.
ஒன்று, குடிநீர் விநியோகம், மின்சாரம், இணைப்பு மற்றும் சுற்றுலாத் துறையை ஊக்குவிக்கும் திட்டம் போன்ற கட்டமைப்பை ஏற்படுத்துவது ஆகும்.

மற்றொன்று, கல்வி மற்றும் சுகாதாரம் தொடர்பான சமூகத் துறை திட்டங்கள். மாநில அரசுகளுடன் உரிய ஆலோசனைகளை நடத்தியபிறகே, புதிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. எனினும், என்.எல்.சி.பி.ஆர். திட்டத்தின் கீழ், செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களையும் மார்ச் 2022-ல் முடிப்பதற்காக தொடர்ந்து நிதி வழங்கப்படும்.

என்.எல்.சி.பி.ஆர். திட்டத்தின்கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களில், மாநில அரசின் பங்களிப்பாக 10 சதவீத நிதி இருக்கும் நிலையில், புதிய திட்டத்தின் கீழ், முழுமையாக மத்திய அரசே நிதி வழங்கும்.

அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான திட்டங்களின் கீழ், வடகிழக்கு மாநிலங்களுக்கு ரூ.5,300 கோடியை மத்திய அரசு வழங்கும்.

வடகிழக்குப் பிராந்திய வளர்ச்சிக்கான முயற்சியில், போதிய இணைப்பு வசதி இல்லாதது, மிகப்பெரும் தடைகளில் ஒன்றாக திகழ்கிறது. போக்குவரத்து வசதிகளை அளித்து, மாற்றத்தை ஏற்படுத்த நாங்கள் இலக்கு நிர்ணயித்துள்ளோம். இதன்படி, இந்தப் பிராந்தியத்தில் கட்டமைப்புகளுக்கு முதலீடு செய்யப்படும்.

கடந்த மூன்று ஆண்டுகளில் ரூ.32,000 கோடி முதலீட்டில் 3,800 கிலோமீட்டருக்கும் அதிகமான தொலைவுக்கு தேசிய நெடுஞ்சாலை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதில், சுமார் 1,200 கிலோமீட்டர் சாலைகள் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது.

வடகிழக்குப் பகுதிகளில் சிறப்பு ஊக்குவிப்பு சாலை மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், மேலும் ரூ.60,000 கோடியை மத்திய அரசு முதலீடு செய்யும். வடகிழக்குப் பிராந்தியத்தில் நெடுஞ்சாலைகள் மற்றும் சாலைகள் கட்டமைப்பை உருவாக்க அடுத்த 2-3 ஆண்டுகளில் பாரத்மாலா திட்டத்தின்கீழ் ரூ.30,000 கோடி செலவிடப்படும். வடகிழக்குப் பிராந்தியத்தில் உள்ள அனைத்து மாநிலங்களின் தலைநகரங்களுக்கும் ரயில் சேவை வழங்க உறுதிபூண்டுள்ளோம்.

ரூ.47,000 கோடி செலவில், 1,385 கிலோமீட்டர் தொலைவுக்கு புதிதாக 15 ரயில் பாதை திட்டங்களை இந்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

அசாமின் சில்சாரிலிருந்து மிசோராமின் பைராபி-யை இணைக்கும் ரயில் பாதையை தொடங்கிவைத்ததன் மூலம், மிசோராமுக்கு கடந்த ஆண்டில் ரயில் சேவை கிடைத்துள்ளது. ஐஸ்வால் நகரை இணைக்கும் வகையிலான புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டத்துக்கு கடந்த 2014-ம் ஆண்டில் நான் அடிக்கல் நாட்டிவைத்தேன்.
மாநில அரசின் ஆதரவுடன், மாநிலத் தலைநகரான அய்ஸாலை அகல ரயில் பாதை மூலம் இணைக்க உள்ளோம்.

“கிழக்கு நோக்கிய கொள்கை”யை (Act East Policy) மத்திய அரசு தீவிரமாக பின்பற்றி வருகிறது. இதன்மூலம், தென்கிழக்கு ஆசியாவின் நுழைவுவாயிலான மிசோராம் அதிக அளவில் பயன்பெறும். இது மியான்மர் மற்றும் வங்காளதேசத்திற்கு வர்த்தக பொருட்களை ஏற்றிச் செல்வதற்கான முக்கிய முனையாக மாறும்.

பல்வேறு இருதரப்பு திட்டங்கள், முடிவடைவதற்கான பல்வேறு கட்டங்களில் உள்ளன. இவற்றில் கலாதன் பல்முனை போக்குவரத்து திட்டம், ரிஹ்-டெடிம் சாலைத் திட்டம், பார்டர் ஹாட்ஸ் உள்ளிட்டவை சில முக்கிய திட்டங்கள் ஆகும்.
இவை அனைத்தும், பொருளாதார இணைப்புக்கான வாய்ப்புகளை அதிகரிக்கச் செய்யும். மேலும், ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி மற்றும் வடகிழக்குப் பிராந்தியத்தின் மேம்பாட்டுக்கு வழிவகை செய்யும்.

நண்பர்களே, அதிக அளவில் கல்வியறிவு பெற்றோர் விகிதம், அழகான இடங்கள், அதிக அளவில் ஆங்கிலம் பேசும் மக்கள் ஆகியவற்றின் மூலம், மாதிரி சுற்றுலா பகுதியாக மிசோராமை மேம்படுத்த முடியும்.

சாகச சுற்றுலா, கலாச்சார சுற்றுலா, சுற்றுச்சூழல் சுற்றுலா, வனவிலங்குகள் சுற்றுலா மற்றும் சமூக அடிப்படையிலான கிராமப்புற சுற்றுலா ஆகியவற்றுக்கான வாய்ப்புகளை மிசோராம் மாநிலம் கொண்டுள்ளது. இதனை சிறப்பான முறையில் மேம்படுத்தினால், மாநிலத்தில் மிகப்பெரிய அளவில் வேலைவாய்ப்பை உருவாக்கும் துறையாக சுற்றுலா விளங்கும். சுற்றுச்சூழல் சுற்றுலா மற்றும் சாகச சுற்றுலாவை ஊக்குவிக்க கடந்த 2 ஆண்டுகளில் மிசோராம் மாநிலத்துக்கு ரூ.194 கோடி மதிப்பிலான இரண்டு சுற்றுலா திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் திட்டங்களை செயல்படுத்த ஏற்கனவே ரூ.115 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது.

சுற்றுலாப் பயணிகளை கவர்வதற்காக மிசோராமில் வனவிலங்கு பாதுகாப்பகங்கள் மற்றும் தேசிய பூங்காக்களை பராமரிக்கவும், மேம்படுத்தவும் நிதியுதவி அளிக்க அரசு உறுதிபூண்டுள்ளது. இந்தியாவில் முன்னணி சுற்றுலா மையமாக மிசோராமை உருவாக்க நாம் ஒருங்கிணைந்து பணியாற்றுவோம்.

நண்பர்களே,

நமது நாட்டின் இந்தப் பகுதியை கார்பன் இல்லாத பகுதியாக எளிதில் அறிவிக்கலாம். நமது நட்பு நாடான பூடான் ஏற்கனவே செய்துள்ளது. மாநில அரசுகள் தங்களது முயற்சிகளை தீவிரப்படுத்தினால், வடகிழக்கில் உள்ள 8 மாநிலங்களும் கார்பன் இல்லாத பகுதியாக மாறும். கார்பன் இல்லாத மாநிலங்களாக அங்கீகரிக்கும்போது, நாட்டின் இந்தப் பகுதிக்கு உலக வரைபடத்தில் மிகப்பெரும் பெயர் கிடைக்கும். சிக்கிம் மாநிலத்தைப் போன்று, வடகிழக்குப் பகுதியில் உள்ள மற்ற மாநிலங்களும் 100 சதவீத இயற்கை வேளாண்மை மாநிலமாக மாற தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க பாரம்பரிய வேளாண்மை மேம்பாட்டுத் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது.

இந்தத் திட்டத்தின்கீழ், நாடு முழுவதும் 10,000 இயற்கை வேளாண்மை முனையங்களை அரசு உருவாக்கியுள்ளது. வடகிழக்குப் பகுதியிலும் கூட, நூறு விவசாய உற்பத்தியாளர்கள் அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவற்றுடன் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் இணைந்துள்ளனர். இந்தப் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், தங்களது இயற்கை தயாரிப்புகளை டெல்லியில் விற்பனை செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நண்பர்களே,

நமது நாடு, சுதந்திரம் பெற்றதன் 75 ஆண்டுகள் நிறைவை, 2022-ம் ஆண்டில் கொண்டாட உள்ளோம். 2022-ம் ஆண்டில் 100 சதவீத இயற்கை வேளாண்மை கொண்ட மற்றும் கார்பன் இல்லாத மாநிலமாக உருவாக மிசோராம் உறுதியேற்க வேண்டும். இந்த உறுதியை நிறைவேற்ற மத்திய அரசு முழுமையாக ஆதரவளிக்கும் என்று மிசோராம் மக்களுக்கு நான் உறுதியளிக்கிறேன். உங்களைப் புரிந்துகொண்டு, உங்களது சிறிய பிரச்சினைகளைத் தீர்த்துவைத்து வருகிறோம். இதற்கு மூங்கிலை நான் உதாரணமாக கூறுகிறேன்.

வடகிழக்குப் பகுதியில் லட்சக்கணக்கான மக்களுக்கு வாழ்வாதாரமாக மூங்கில் விளங்குகிறது. இது மிகவும் கட்டுப்பாடான ஒழுங்குமுறையின் கீழ் இருந்தது. அதாவது, உங்களது சொந்த நிலத்தில் விளைவிக்கும் மூங்கிலை, அனுமதி இல்லாமல், எடுத்துச் செல்லவோ அல்லது விற்பனை செய்யவோ முடியாது. இந்த நெருக்கடியைக் குறைக்கும் நோக்கில், ஒழுங்குமுறை விதிகளை நமது அரசு மாற்றியமைத்துள்ளது. இதன்மூலம், தற்போது, விவசாயிகள் தங்களது சொந்த நிலத்தில் மூங்கில் மற்றும் அதுதொடர்பான பொருட்களை உற்பத்தி செய்யவோ, உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை கொண்டுசெல்லவோ மற்றும் விற்பனை செய்யவோ, எந்தவொரு அனுமதியையும் பெற வேண்டியதில்லை. இது லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு பயனளிக்கும். மேலும், 2022-ம் ஆண்டில் விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்காக மாற்றச் செய்யும் முயற்சிக்கு பலம் சேர்க்கும்.

நான் மிசோராமுக்கு வந்து, கால்பந்து குறித்து பேசாமல் இருப்பதற்கு வாய்ப்பு இல்லை. மிசோராமைச் சேர்ந்த வீரர் ஜெஜி லால்பெக்லுவா, ஒட்டுமொத்த நாட்டின் கவனத்தையும், தன் பக்கம் ஈர்த்துள்ளார். இதன்மூலம், மிசோராமில் ஒவ்வொரு குடும்பத்தினரின் ஒரு அங்கமாக கால்பந்து விளங்குகிறது. இந்திய கால்பந்து கூட்டமைப்பும், அய்ஸால் கால்பந்து கிளப்-பும் இணைந்து செயல்படுத்திய மாதிரி திட்டம் மூலம், உள்ளூர் கால்பந்து வீரர்களின் திறமை மேலும் வலுப்பட்டுள்ளதாக என்னிடம் தெரிவித்தனர்.

சந்தோஷ் கோப்பையை முதல்முறையாக, கடந்த 2014-ம் ஆண்டில் மிசோராம் வென்றபோது, நாட்டின் ஒட்டுமொத்த கால்பந்து ரசிகர்களும் கைதட்டி பாராட்டு தெரிவித்தனர். விளையாட்டுத் துறையில் படைத்துவரும் சாதனைகளுக்காக மிசோராம் மக்களுக்கு நான் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். கால்பந்துக்கு மென்மையான சக்தி உண்டு. இதன்மூலம், உலக அளவிலான அங்கீகாரத்தை மிசோராம் மாநிலத்தால் பெற முடியும்.

கால்பந்தின் மென்மையான திறன், மிசோராமின் சர்வதேச அடையாளமாக மாறும். மிசோராமில் மேலும் பல்வேறு பிரபலமான விளையாட்டு வீரர், வீராங்கனைகள் உள்ளனர். இவர்கள், மாநிலத்துக்கும், நாட்டுக்கும் பெருமைதேடித் தந்துள்ளனர். இவர்களில் ஒலிம்பிக்கில் பங்கேற்ற வில்வித்தை வீரர் சி. லால்ரெம்சங்கா, குத்துச்சண்டை வீராங்கனை ஜென்னி லால்ரெம்லியானி, பளுதூக்கும் வீராங்கனை லால்ச்சாஹிமி, ஹாக்கி வீராங்கனை லால்ருவாட்ஃபெல்லி உள்ளிட்டோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

உலக அரங்கில் தலைசிறந்து விளங்கும் வகையிலான, விளையாட்டு வீரர், வீராங்கனைகளை மிசோராம் தொடர்ந்து வழங்கும் என்று நான் உறுதியாக கூறுகிறேன்.

நண்பர்களே,

உலகில் உள்ள சில நாடுகளின் பொருளாதாரம், விளையாட்டை மட்டுமே சார்ந்து உள்ளன. இதுபோன்ற நாடுகள், விளையாட்டுத் துறைக்கு தேவையான சூழலை உருவாக்கி, உலகம் முழுவதையும் சேர்ந்தவர்களையும் ஈர்த்து வருகின்றன. வடகிழக்குப் பிராந்தியத்தில் விளையாட்டுக்கு உள்ள அதிக அளவிலான வாய்ப்புகளை கருத்தில் கொண்டு, இம்பாலில் விளையாட்டுப் பல்கலைக் கழகத்தை மத்திய அரசு உருவாக்கி வருகிறது.

இந்தப் பல்கலைக் கழகம் அமைக்கப்பட்டதும், இந்தப் பிராந்தியத்தைச் சேர்ந்த இளைஞர்கள், விளையாட்டு தொடர்பான அனைத்து வகையான பயிற்சிகளையும் எளிதில் பெற முடியும். மேலும், இந்தப் பல்கலைக் கழகம் அமைக்கப்பட்டதற்குப் பிறகு, இதன் வளாகங்களை நாடு முழுவதும் மட்டுமன்றி, மற்ற நாடுகளிலும் அமைக்க உள்ளோம். இதன்மூலம், இந்த பிராந்தியத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகள், மற்ற நாடுகளுக்கும் கூட பயணம் மேற்கொண்டு பயிற்சிகளைப் பெற முடியும்.

ஐஸ்வால் பகுதி வண்ணமயமாகவும், திருவிழாக் கோலத்திலும் இருப்பதை நான் பார்க்கிறேன். கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்கு முழுமையாக தயாராகியுள்ளது. மீண்டுமொருமுறை, உங்கள் அனைவருக்கும் மற்றும் மிசோராம் மக்களுக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி.

எய்ன் வயா சூங்கா கா-லோம் ஈய் மங்காச்சா

***