பி.எம்.இந்தியா
பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டம், யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர்களின் ஊதியம் மற்றும் படிகளை மாற்றியமைக்க ஒப்புதல் வழங்கியுள்ளது. மத்திய அரசின் செயலருக்கு இணையான ஊதியம் மற்றும் படிகளைத் துணைநிலை ஆளுநர்களுக்கு வழங்க இது வகை செய்யும்.
விவரங்கள் :
2016 ஜனவரி 1-ஆம் தேதி முதல், யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர்களின் ஊதியம் மற்றும் படிகளை உயர்த்துவதற்கான முன்மொழிவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலம், துணைநிலை ஆளுநர்களின் மாதாந்திர ஊதியம் ரூ.80,000/- மற்றும் அகவிலைப்படி, மாதத்திற்கு ரூ.4,000/- வீதம் தினச்செலவுப்படி மற்றும் உள்ளூர் படிகள் ஆகும். இனி ரூ.2,25,000/- மற்றும் அகவிலைப்படி, மாதத்திற்கு ரூ.4,000/-வீதம் தினச்செலவுப்படி மற்றும் உள்ளூர் படிகள் என மத்திய அரசின் செயலர் அந்தஸ்தில் உள்ள அதிகாரிகளுக்கு வழங்கப்படும் அதே விகிதத்தில் உயர்த்தி வழங்க இந்த ஒப்புதல் வழிவகுக்கும். இதன் மூலம் கிடைக்கும் மொத்த ஊதியம் (தினச் செலவுப்படி மற்றும் உள்ளூர் படிகள் தவிர) மாநிலங்களின் ஆளுநர்கள் பெறும் மொத்த ஊதியத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் என்ற நிபந்தனைக்கு ஏற்ப இது வழங்கப்படும்.
பின்புலம் :
யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர்களுக்கான ஊதியம் மற்றும் படிகள் மத்திய அரசின் செயலர் அந்தஸ்தில் உள்ள அதிகாரிகளின் ஊதியத்திற்கு இணையாக இருக்கும். யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநர்களுக்கான ஊதியம் மற்றும் படிகள் இதற்கு முன்பு மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுடன் 2006 ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் உயர்த்தப்பட்டது. அப்போது மாத ஊதியம் ரூ.26,000-த்திலிருந்து ரூ.80,000-ஆக உயர்த்தப்பட்டது. அத்துடன் அகவிலைப்படி, மாதம் ரூ.4,000/- வீதம் தினச்செலவுப்படி, உள்ளூர்படிகளும் வழங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
மத்திய அரசின் செயலர் அந்தஸ்திலான அதிகாரிகளின் ஊதியம் 1.1.2016 முதல் மாதத்திற்கு ரூ.80,000/–த்திலிருந்து ரூ.2,25,000/–ஆக 2016 திருத்தப்பட்ட ஊதிய விதிமுறைகளின்படி மாற்றியமைக்கப்பட்டது.
—-