Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களுக்கு ஜூலை 17 அன்று பிரதமர் பயணம் மேற்கொள்கிறார்


பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 17 அன்று ஹரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களுக்குப் பயணம் மேற்கொள்கிறார். இந்தப் பயணத்தின் போது சுமார் 26,800 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு உள்கட்டமைப்புத் திட்டங்களைப் தொடங்கி வைப்பதுடன் புதிய திட்டங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டவுள்ளார். ஹரியானா மாநிலம் ஜிந்த்-ல் காலை 11 மணியளவில் நாட்டின் முதலாவது ஹைட்ரஜன் எரிபொருள் மூலம் இயங்கும் ரயில் சேவையை அவர் கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார். ஜிந்த் – சோனிபட் இடையே இயக்கப்படவுள்ள இந்த ரயில், உலகின் மிக நீளமான, அதிக திறன் கொண்ட ஹைட்ரஜன் ரயில் திட்டங்களில் ஒன்றாகும். முழுவதும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இந்த ஹைட்ரஜன் எரிபொருள் தொழில்நுட்பம், பூஜ்ஜிய கார்பன் உமிழ்வைக் கொண்டது. இதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதுடன், புதைபடிவ எரிபொருட்களின் இறக்குமதியும் குறையும்.

இதனைத் தொடர்ந்து, ஜிந்த் ஏகலவ்யா மைதானத்தில் நடைபெறும் விழாவில் சுமார் 14,700 கோடி ரூபாய் மதிப்பிலான தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை அவர் நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார். இதில் 9,680 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட 157.92 கிலோமீட்டர் நீளமுள்ள தில்லி – அமிர்தசரஸ் – கத்ரா விரைவுச்சாலையின் 1 முதல் 5 வரையிலான தொகுப்புகள் அடங்கும். இது தில்லி முதல் கத்ரா வரையிலான பயண நேரத்தை 14 மணி நேரத்திலிருந்து 6 மணி நேரமாகக் குறைக்கும். மேலும் அம்பாலா – கலா அம்ப் நெடுஞ்சாலை, ஜிந்த் – கோஹனா பசுமைவழிச் சாலைத் திட்டங்களும் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படவுள்ளன. குருக்ஷேத்ராவில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் உயர்மட்ட ரயில்வே மேம்பாலப் பாதையை தொடங்கி வைக்கும் பிரதமர், அங்கு சீக்கிய குருமார்களின் வரலாற்றைப் பறைசாற்றும் அதிநவீன சீக்கிய அருங்காட்சியகத்திற்கும் அடிக்கல் நாட்டுகிறார். பிவானி, நார்னால் ஆகிய இடங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளையும் அவர் திறந்து வைக்கிறார்.

அன்றைய தினம் பிற்பகல் சண்டிகர் செல்லும் பிரதமர், அங்கு சுகாதாரம், கல்வி, சாலை உள்கட்டமைப்பு சார்ந்த 6,600 கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார். சண்டிகர் முதுகலை மருத்துவக் கல்வி, ஆராய்ச்சி நிறுவனத்தில் அதிநவீன தாய் – சேய் நல மையம், நரம்பியல் அறிவியல் மையம் ஆகியவற்றை அவர் திறந்து வைக்கிறார். மொஹாலி தகவல் தொழில்நுட்ப நகரம் முதல் குராலி வரையிலான 6 வழிப் பசுமைச் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைத் திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார்.

இதன் பின்னர் ஜலந்தர் செல்லும் பிரதமர், 5,470 கோடி ரூபாய் மதிப்பிலான ரயில், சாலை உள்கட்டமைப்புத் திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார். அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் 1,570 கோடி ரூபாய் மதிப்பில் புதுப்பிக்கப்பட்ட ஜலந்தர் கண்டோன்மெண்ட் உள்ளிட்ட 20 மாநிலங்களைச் சேர்ந்த 75 ரயில் நிலையங்களை அவர் நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார். தௌலத்பூர் சௌக் – கர்தோலி இடையே புதிய ரயில் பாதையைத் திறந்து வைப்பதுடன், கர்தோலி – அம்பாலா ரயில் சேவை, அமிர்தசரஸ் – வாரணாசி ரயில் சேவைகளையும் அவர் கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார். 3,070 கோடி ரூபாய் மதிப்பிலான தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களின் கீழ் தில்லி – அமிர்தசரஸ் – கத்ரா விரைவுச்சாலையின் 6-வது தொகுதியையும் நாட்டிற்கு அர்ப்பணித்து, தெற்கு லூதியானா 6-வழி பசுமை புறவழிச் சாலைக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2285034&reg=3&lang=1

****

TV/PD/SH