பி.எம்.இந்தியா

மேதகு பிரதமர் பிரயுத் சான் ஓ சா அவர்களே, பெருமதிப்பிற்குரியோரே, மாட்சிமை மிக்க மன்னர் அவர்களே,
இந்திய-ஆசியான் உச்சிமாநாடு என்ற வகையில் உங்கள் அனைவரையும் மீண்டும் சந்திப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். மிக உயரிய வகையில் வரவேற்பு ஏற்பாடுகளை மிகச் சிறப்பான வகையில் செய்திருந்த தாய்லாந்து நாட்டிற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்த ஆண்டில் ஆசியான் அமைப்பிற்கும், கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டிற்கும் தலைமை தாங்கவிருக்கின்ற வியட்நாமிற்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பெருமதிப்பிற்குரியோரே,
இந்தியாவிற்கும் ஆசியான் அமைப்பிற்கும் இடையே இந்திய-பசிபிக் கண்ணோட்டம் குறித்த பரஸ்பர ஒருங்கிணைப்பு ஏற்பாட்டையும் நான் வரவேற்கிறேன். இந்தியாவின் கிழக்கு நோக்கிய செயல்பாடு என்ற கொள்கை எமது நாட்டின் இந்திய-பசிபிக் தொலைநோக்கின் மிக முக்கியமான ஒரு பகுதியாகும். கிழக்கு நோக்கிய செயல்பாடு என்ற எங்களது கொள்கையின் இதயப் பகுதியாக எப்போதுமே ஆசியான் பகுதிதான் இருந்து வந்துள்ளது. ஒருங்கிணைந்த, ஒழுங்கமைக்கப்பட்ட, பொருளாதார ரீதியாக வளர்ச்சி பெறும் ஆசியான் பகுதி என்பது இந்தியாவின் அடிப்படையான நலனுக்கு உகந்ததாகும். தரைவழி, கடல்வழி, வான்வழி தொடர்புகளின் மூலமும், டிஜிட்டல் வகைப்பட்ட தொடர்பின் மூலமும் நமது கூட்டணியை மேலும் வலுப்படுத்தவும் நாங்கள் உறுதி பூணுகிறோம். நேரடியாகவும், டிஜிட்டல் முறையிலும் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கான கடன்வசதி என்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கல்வி, ஆராய்ச்சி, வர்த்தகம், சுற்றுலா ஆகியவற்றுக்காக மக்களின் இயக்கத்தை பெருமளவிற்கு அதிகரிக்க வேண்டும் என்பதே எங்களது நோக்கமாகும்.
இந்த இலக்கை அடைய, பரஸ்பர நலன்களுக்கான துறைகளில் ஆசியான் அமைப்பினோடு கூட்டணியை அதிகரித்துக் கொள்ள இந்தியா தயாராக உள்ளது. கடந்த ஆண்டு சிங்கப்பூரில் நடைபெற்ற கொண்டாட்ட உச்சிமாநாடு, முறைப்படியல்லாத உச்சிமாநாடு ஆகியவற்றின் முடிவுகள் நிறைவேற்றப்பட்டதானது நமது உறவை மேலும் நெருக்கமானதாக ஆக்கியிருக்கிறது. விவசாயம், அறிவியல், ஆராய்ச்சி, தகவல் பரிமாற்ற தொழில்நுட்பம், பொறியியல் போன்ற துறைகளில் மேலும் அதிகமான அளவில் திறன் அளவை வளர்த்துக் கொள்ளவும் கூட்டணி ஏற்படுத்திக் கொள்ளவும் நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆசியான் அமைப்பிற்கும், இந்தியாவிற்கும் இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை பரிசீலிப்பது என்ற சமீபத்திய முடிவை நான் வரவேற்கிறேன். இது நமது பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்பதோடு, நமது வர்த்தகமும் சமநிலைக்குக் கொண்டுவரப்படும். கடல்வழிப் பாதுகாப்பு, கடல்சார் பொருளாதாரம், மனிதநேய உதவிகள் ஆகிய துறைகளிலும் நமது கூட்டணியை மேலும் வலுப்படுத்தவும் நாங்கள் விரும்புகின்றோம். மேதகு பிரமுகர்கள் தங்கள் கருத்துக்களை எடுத்துவைத்த பிறகு, அவர்களின் உரைகளைக் கேட்டபிறகு, வேறு சில அம்சங்கள் குறித்து நான் விரிவாகப் பேச விரும்புகிறேன். தாய்லாந்து நாட்டிற்கு எனது ஆழ்ந்த நன்றியை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
அறிவிப்பு: பிரதமர் தனது உரையை இந்தி மொழியில் ஆற்றினார். இது அதன் ஓரளவிற்கு நெருக்கமான மொழிபெயர்ப்பே ஆகும்.
***
Addressing the India-ASEAN Summit in Bangkok. Watch. #ASEAN2019 https://t.co/meyETAd067
— Narendra Modi (@narendramodi) November 3, 2019