Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

நாட்டின் 70-வது சுதந்திர தினம்- செங்கோட்டை கொத்தளத்திலிருந்து பிரதமர் ஆற்றிய உரை

நாட்டின் 70-வது சுதந்திர தினம்- செங்கோட்டை கொத்தளத்திலிருந்து பிரதமர் ஆற்றிய உரை


நாட்டின் 70-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தில்லி செங்கோட்டை கொத்தளத்திலிருந்து பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று உரையாற்றினார்.

நாட்டின் சுதந்திரத்துக்காக தங்களது உயிரை தியாகம் செய்த மகாத்மா காந்தி, சர்தார் பட்டேல், பண்டித ஜவஹர்லால் நேரு மற்றும் எண்ணிலடங்கா தியாகிகளுக்கு திரு.நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார்.

மேலும் அவர், சுயாட்சியிலிருந்து நல்லாட்சி என்ற இலக்கை நோக்கிய பயணத்தை நிறைவுசெய்ய 125 கோடி இந்தியர்கள் தற்போது உறுதிபூண்டுள்ளதாக தெரிவித்தார். நல்லாட்சி இலக்கை அடைய, தியாகம், கடுமையான உழைப்பு, ஒழுங்கு, அர்ப்பணிப்பு, ஊக்கம் ஆகியவை தேவை என்று அவர் தெரிவித்தார். மேலும், இந்த இலக்கை எட்ட பஞ்சாயத்து முதல் நாடாளுமன்றம் வரை அனைத்து அமைப்புகளும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டியது அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.

அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்த நேரம் உண்டு. ஆனால், அதற்கு மாறாக இந்த அரசு மீது எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. நம்பிக்கை எதிர்பார்ப்புகளாக மாறும்போது, அது நல்லாட்சி என்ற பாதையை நோக்கி வேகமாக பயணிக்க நமக்கு சக்தியை வழங்குகிறது என்று அவர் தெரிவித்தார்.

அரசு பணிகளை செய்வதில் கவனம் செலுத்துவதை விட, அதன் பணிமுறையின் மீது கவனம் செலுத்துவதையே தான் விரும்புவதாக பிரதமர் தெரிவித்தார்.

நல்லாட்சியை உறுதிப்படுத்த கூருணர்வு, பொறுப்பு, நம்பகத்தன்மை, வெளிப்படைத்தன்மை, திறன் மற்றும் சிறந்த ஆளுமை தேவை என்று பிரதமர் வரையறுத்தார். இவை அனைத்தும் மத்திய அரசின் செயல்பாடுகளில் வெளிப்படுவதாக அவர் குறிப்பிட்டார். அதாவது, மிகப்பெரும் மருத்துவமனைகளில் இணையதளம் மூலம் பதிவுசெய்வது, வருமானவரிகளை விரைந்து திரும்பப்பெறுவது, பாஸ்போர்ட் விநியோகம் செய்வதை விரைவுபடுத்துவது, நிறுவனங்களின் பதிவை வேகப்படுத்துவது, அரசில் குரூப் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களை நேர்காணல் இல்லாமல் தேர்ந்தெடுப்பது ஆகியவற்றின் மூலம் இதனை காணலாம் என்று அவர் தெரிவித்தார்.

முக்கியமான துறைகளில் ஆளுமை எவ்வாறு வேகமாக செயல்படுகிறது என்பதையும் பிரதமர் குறிப்பிட்டார். இதற்கு உதாரணங்களாக, கிராமப்புற சாலை கட்டுமானம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி திறன், மின்பகிர்மான வழித்தடங்களை அமைத்தல், சமையல் எரிவாயு இணைப்புகளை வழங்குதல் ஆகியவற்றை பிரதமர் குறிப்பிட்டார்.

குறிப்பிட்ட பகுதிகளில் எந்த வேகத்தில் பணிகள் நடைபெற்றது என்பது குறித்தும் பிரதமர் பேசினார். அதாவது, மக்கள் நிதி திட்டத்தின் கீழ், 21 கோடி வங்கிக்கணக்குகள் தொடங்கப்பட்டது, கிராமப்புறங்களில் 2 கோடி கழிவறைகள் கட்டப்பட்டது, மின்விநியோகம் இல்லாத 10 ஆயிரம் கிராமங்களுக்கு மிகவும் குறுகிய காலத்தில் மின் விநியோகம் வழங்கியது ஆகியவற்றை பிரதமர் எடுத்துரைத்தார்.

எல்.இ.டி பல்புகள் விவகாரத்தில், சாதாரண மக்கள் எளிதில் வாங்கும் வகையில், அதன் விலை போதுமான அளவுக்கு குறைந்துள்ளதை பிரதமர் குறிப்பிட்டார். எல்.இ.டி பல்புகளை பல்வேறு தரப்பினரும் பயன்படுத்தும்போது, அதிக அளவில் மின்சாரத்தை சேமிக்க முடியும் என்று அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் வறட்சி நிலவியபோதும், போதிய அளவில் உணவுதானியங்கள் உற்பத்திசெய்யப்படுவதை உறுதிப்படுத்திய விவசாயிகளை பிரதமர் பாராட்டினார். இந்த ஆண்டில் பருப்பு விளைவிக்கும் பகுதி அதிகரித்திருப்பதாக அவர் தெரிவித்தார். வேளாண்மைத் துறையில் ஒருங்கிணைந்த அணுகுமுறையை மத்திய அரசு மேற்கொண்டு வருவதாக அவர் விளக்கினார். அதாவது, மண் சுகாதார அட்டைகள், சூரிய மின்சார பம்ப்கள், விதைகள், உரங்கள் மற்றும் பயிர்க் காப்பீடு ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படுவதை அவர் குறிப்பிட்டார்.

தேசிய அடையாளத்தை உருவாக்குவதில் அரசு கவனம் செலுத்திவருவதாக திரு. நரேந்திர மோடி தெரிவித்தார். சீர்திருத்தம், செயல்பாடு, மாற்றம் ஆகியவற்றை மத்திய அரசு இலக்காக கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார். அரசு வெறுமனே செயல்படுவதை விட, மாற்றத்தை ஏற்படுத்துவதில் அதிக கவனம் செலுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார். குறிப்பிட்ட பகுதிகளில் வளர்ச்சி ஏற்படுவதைவிட, ஒருங்கிணைந்த வளர்ச்சியை விரும்புகிறது. உரிமைகோருவதைவிட, வளர்ச்சியையே அரசு விரும்புகிறது என்று அவர் தெரிவித்தார்.

நிறுத்தப்பட்ட அல்லது நீண்டகாலமாக நிலுவையில் உள்ள திட்டங்களை முடிக்க தனது அரசு எவ்வாறு பணியாற்றுகிறது என்பதையும், முக்கியமான துறைகளில் திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்குவதற்கான காலஅவகாசத்தை குறைத்திருப்பதையும் பிரதமர் விளக்கினார்.

அரசு விரைந்து செயல்படுவது குறித்து விளக்கம் அளித்த பிரதமர், கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத் தொகைகளை வழங்கியது, புதிய சமையல் எரிவாயு இணைப்பு வழங்கியது, ஏர் இந்தியா மற்றும் பிஎஸ்என்எல் போன்ற பொதுத்துறை நிறுவனங்களை லாபமடையச் செய்தது ஆகியவற்றை குறிப்பிட்டார்.

வெளிப்படைத்தன்மையின் அவசியத்தை குறிப்பிட்ட பிரதமர், மானியங்களை தேவையானவர்களுக்கு வழங்க வேண்டும் என்று தெரிவித்தார். முக்கிய துறைகளில் ஆளுமையின் வளர்ச்சியை சர்வதேச தர மதிப்பீட்டு அமைப்புகள் பாராட்டியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மகளிர் நலனில் ஒருங்கிணைந்த, முழுமையான செயல்பாடுகளை அரசு மேற்கொண்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார். அதாவது, பெண்களை உடலளவிலும், கல்வி அளவிலும், நிதியளவிலும் மேம்பாடு அடையச் செய்ய, பெண் குழந்தையை பாதுகாப்போம், பெண் குழந்தைக்கு கற்பிப்போம் (Beti-Bachao, Beti Padhao), செல்வமகள் சேமிப்புத்திட்டம் (Sukanya Samriddhi Yojana), இலவச எரிவாயு இணைப்பு திட்டம் (Ujjwala Yojana) போன்ற திட்டங்களை அரசு செயல்படுத்தி வருவதாக பிரதமர் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் அரசு செயல்படுத்திவரும் மற்ற சில திட்டங்களையும் பிரதமர் விவரித்தார்.

சமூக பிணைப்பின் அவசியத்தை வலிமையாக பிரதமர் வலியுறுத்தினார். ராமானுஜர், மகாத்மா காந்தி, பாபாசாகேப் அம்பேத்கர் போன்ற துறவிகள், தத்துவவாதிகள் மற்றும் சிந்தனையாளர்கள் வழங்கிய அமைதி, ஒருங்கிணைப்பு, சகோதரத்துவம் ஆகியவற்றிற்கான செய்திகளை ஒவ்வொரு இந்தியரும் கடைபிடித்து நடக்க வேண்டும் என்று பிரதமர் அறிவுறுத்தினார்.

அரசின் பல்வேறு திட்டங்களும், முயற்சிகளும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கியுள்ளதாக பிரதமர் தெரிவித்தார். மாதிரி கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தின் மூலம், அனைத்து நாட்களிலும் கடைகளை திறந்துவைக்க வாய்ப்பு ஏற்படும் என்று அவர் தெரிவித்தார்.

முக்கிய முடிவுகளை எடுப்பதில் மத்திய அரசுக்கு எந்தவித தயக்கமும் இல்லை என்று பிரதமர் தெரிவித்தார். இதன்படி, ஒரு பதவிநிலை, ஒரே ஓய்வூதியம் திட்டத்துக்கு அனுமதி அளித்தது, நேதாஜி தொடர்பான ஆவணங்களை வெளியிட்டது, வங்காளதேசத்துடன் நில எல்லை ஒப்பந்தம் ஆகியவற்றை மேற்கொண்டதை அவர் குறிப்பிட்டார்.

தீவிரவாதிகளை தியாகிகளாக வர்ணிக்க முயற்சி மேற்கொள்பவர்களுக்கு பிரதமர் கடுமையான கண்டனத்தை தெரிவித்தார். இந்தியாவின் மனிதநேய நடவடிக்கைகளையும், அனைத்து தீவிரவாத நடவடிக்கைகளையும் கண்டிக்கும் ஒருங்கிணைந்த முயற்சிகளையும் உலகம் ஏற்றுக் கொள்ளும் என்று அவர் தெரிவித்தார்.

நாட்டை முன்னேற்றப் பாதைக்கு கொண்டுசெல்ல வேண்டும் என்ற பொதுவான நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு பொதுமக்கள் பணியாற்ற வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார்.

சில புதிய அறிவிப்புகளையும் பிரதமர் வெளியிட்டார். சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கான மாத ஓய்வூதியம், ரூ.25,000-லிருந்து, ரூ.30,000-மாக அதிகரிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். ஆதிவாசி சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்காக நாடு முழுவதும் அருங்காட்சியகங்கள் மற்றும் நினைவகங்களை உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்று அவர் தெரிவித்தார். உடல்நலப் பாதிப்புகளால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் ஏழைகளுக்கு மருத்துவ செலவில், ஒரு லட்சம் ரூபாய் வரை அரசே ஏற்றுக் கொள்ளும்.

===================