Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்தியாவுக்கும், பிரேசிலுக்கும் இடையேயான சமூகப் பாதுகாப்பு உடன்பாட்டுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்


இந்திய குடியரசுக்கும், பிரேசில் குடியரசுக்கும் இடையே சமூகப் பாதுகாப்பு உடன்பாடு கையெழுத்திடுவதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

பின்னணி:

            வெளிநாடுகளில் குறுகிய காலத்திற்கு பணியில் இருக்கும் இந்திய நிபுணர்கள் / பயிற்சி பெற்ற தொழிலாளர்கள் ஆகியோரின் நலன்களைப் பாதுகாக்க பல்வேறு நாடுகளுடன் இருதரப்பு சமூகப் பாதுகாப்பு உடன்பாடுகளை இந்தியா செய்துகொள்வது வழக்கம். இதனால், இந்திய கம்பெனிகளின் போட்டியிடும் திறனும் அதிகரிக்கிறது.

     சமூகப் பாதுகாப்பு உடன்பாடுகள் கீழ்கண்ட மூன்று பயன்களை அளிக்கின்றன.

  1. தொழிலாளர்கள் இரண்டு முறை சமூகப் பாதுகாப்புப் பங்களிப்புத் தொகை செலுத்துவதை தவிர்ப்பது:
  2. பெற்ற ரொக்கப் பயன்களை எளிதாக தாய்நாட்டுக்கு அனுப்புதல்,
  • பயன்கள் இழப்பை தவிர்ப்பதற்காக தொழிலாளர்கள் பங்களிப்பு காலத்தை தொகுத்து அமைத்தல் (இரண்டு நாடுகளிலும்). வெளிநாட்டில் பணிபுரியும் இந்திய நாட்டவர்களுக்கு மாற்றுத்திறன் காப்பீடை வழங்குவதற்கும் இந்த உடன்பாடு வகை செய்கிறது. இன்றைய தேதிவரை இந்தியா 18 நாடுகளுடன் சமூகப் பாதுகாப்பு உடன்பாடுகளைச் செய்து கொண்டுள்ளது.

ஜெனிவாவில் 2016 ஜுன் 9-ஆம் தேதியும் மற்றும் புதுதில்லியில் 2016 செப்டம்பர் 27, 28 தேதிகளிலும் நடைபெற்ற பிரிக்ஸ் தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர்களின் கூட்டங்களில் பிரிக்ஸ் நாடுகளின் சமூகப்  பாதுகாப்பு திட்டங்கள் விவாதிக்கப்பட்டு, அதற்கான ஒப்பந்தங்களும் கையெழுத்திடப்பட்டன.  பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையே சமூகப் பாதுகாப்பு ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்படும் சாத்தியக்கூறுகள், கோவா 8-வது பிரிக்ஸ் தலைவர்கள் உச்சிமாநாட்டு பிரகடனத்தில், குறிப்பிடப்பட்டுள்ளன. கோவா பிரகடன உணர்வை முன்னெடுத்துச் செல்லும் வகையில் இந்தியாவும், பிரேசிலும், பிரேசிலியாவில் 2017 மார்ச் 13 முதல் 16 வரை நடைபெற்ற பேச்சுக்களின்போது, சமூக பாதுகாப்பு உடன்பாடுகள் குறித்தும் பேசப்பட்டது. பேச்சுவார்த்தைகளின் இறுதியில் இருதரப்பினரும், சமூகப் பாதுகாப்பு உடன்பாட்டின் இறுதி வாசகத்தில், சிற்றொப்பம் இட்டனர்.

     கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம் அமைச்சகத்தின் இணையதளத்திலும் மற்றும் ஊழியர் வருங்கால வைப்புநிதி அமைப்பின் இணையதளத்திலும் வெளியிடப்படும். இதன்மூலம் சம்பந்தப்பட்டவர்கள் திட்டம் குறித்த சான்றிதழ்களைப் பெற்று, சமூகப் பாதுகாப்பு பங்களிப்பை இருமுறை செலுத்துவதைத் தவிர்க்கலாம்.

     தற்போது இந்தியாவில் சுமார் 1000 பிரேசில் நாட்டவர்கள் வசித்து வருகிறார்கள். பிரேசிலில் 4,700 இந்தியர்கள் உள்ளனர். பல்வேறு பணியிடங்களில் பணியாற்றுவோர், தனியாக வேலைசெய்யும் தொழிலாளர்கள், சுயவேலைவாய்ப்பு மேற்கொண்டுள்ள நபர்கள் ஆகியோர் எவ்வித பாகுபாடும் இன்றி இத்திட்டத்தால் பயன்பெறுவார்கள். இவ்வாறு, இத்திட்டம், சமத்துவத்தையும் உள்ளடக்கிய நிலையையும் மேம்படுத்தும். இத்தகைய இந்தியப் பணியாளர்கள் பிரேசிலிலில் இருந்து வெளியேறியபின், சமூகப் பாதுகாப்புப் பயன்களை கொண்டு  செல்வதற்கான வசதி இதனால் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, சமூக பாதுகாப்புப் பயன்களில் இழப்பு ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது. மேலும், ஒட்டுமொத்தக் கட்டணக் குறைவு காரணமாக இந்திய கம்பெனிகளின் போட்டியிடும் தன்மை அதிகரிக்கிறது.

     இந்த சமூகப் பாதுகாப்பு உடன்பாடு, இந்திய குடியரசு மற்றும் பிரேசில் குடியரசு ஆகியவற்றின், அனைத்துப் பகுதிகளிலும் நடைமுறைப்படுத்தக்கூடியது.