Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

“இந்தியா மற்றும் ஈரான், இரண்டு மகத்தான கலாச்சாரங்கள்: கடந்த காலமும் வாய்ப்புகளும்” என்ற தலைப்பில் நடந்த மாநாட்டைத் துவக்கி வைத்தும் அரிய பாரசீக கையெழுத்துப் பிரதி வெளியிட்டும் பிரதமர் ஆற்றிய உரை

“இந்தியா மற்றும் ஈரான், இரண்டு மகத்தான கலாச்சாரங்கள்: கடந்த காலமும் வாய்ப்புகளும்” என்ற தலைப்பில் நடந்த மாநாட்டைத் துவக்கி வைத்தும் அரிய பாரசீக கையெழுத்துப் பிரதி வெளியிட்டும் பிரதமர் ஆற்றிய உரை

“இந்தியா மற்றும் ஈரான், இரண்டு மகத்தான கலாச்சாரங்கள்: கடந்த காலமும் வாய்ப்புகளும்” என்ற தலைப்பில் நடந்த மாநாட்டைத் துவக்கி வைத்தும் அரிய பாரசீக கையெழுத்துப் பிரதி வெளியிட்டும் பிரதமர் ஆற்றிய உரை


மேன்மை மிகு ஃபார்ஹிங்ஸ்டான் தலைவர் ஹடீட் ஆடல் அவர்களே,

ஈரான் கலாச்சார விவகாரத்துறை அமைச்சர் டாக்டர் ஜனாதி அவர்களே,

அறிஞர் பெருமக்களே,

பெரியோர்களே, தாய்மார்களே,

டாக்டர் ஏடெல் மற்றும் டாக்டர் ஜனாதி ஆகியோரின் அறிவார்ந்த சொற்கள்தான் இந்த மாநாட்டில் எனக்கு உந்து சக்தியாக விளங்குகிறது. பொருத்தமான நேரத்தில் இந்த மாநாட்டை நடத்துகிறீர்கள் பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த நமது உறவை புதுப்பித்துக் கொள்ளும் நிகழ்ச்சி இது. நமது சமுதாயங்களில் தீவிரவாதக் கருத்துக்களை பரப்புவோருக்கு பதிலடியாகவும் இந்த மாநாடு அமைந்துள்ளது. நமது கலாச்சார பாரம்பரியத்தின் செழுமை மற்றும் அழகில் நமது இளைய தலைமுறையினரை ஈடுபாடு கொள்ளச் செய்வதற்கான பொறுப்பை இந்த மாநாடு பூர்த்தி செய்கிறது. இந்தப் பணியை ஏற்று நடத்துவதற்கு இங்கு அமர்ந்துள்ள அறிஞர் பெருமக்களைத் தவிர மற்றவர்களுக்குத் தகுதி இல்லை. இதன் அவசியத்தை மற்றவர்களுக்கு முன்னதாகவே புரிந்து கொண்டுள்ள டாக்டர் ஏடெல் அவர்களை நான் பிரத்தியேகமாகப் பாராட்டுகிறேன். இந்திய துணைக் கண்டத்தில் பாரசீக மொழியில் கலைக்களஞ்சியம் வெளியிடும் அவரது திட்டம் ஆராய்ச்சியாளர்களுக்கும் அறிஞர்களுக்கும் மிகப் பெரிய சேவையாக அமையும். அத்தகைய அறிவார்ந்த பெருமக்கள், ஈரானின் சிந்தனையாளர்கள் இடையே உரையாற்றுவதை பெரும் கவுரவமாக கருதுகிறேன்.

நண்பர்களே, இன்றைய உலகில் உத்திரீதியான இணைப்பு குறித்து அரசியல் வல்லுநர்கள் பேசுகிறார்கள். ஆனால் இந்தியாவும் ஈரானும் இரண்டு மகத்தான நாகரீகங்களின் சந்திப்பாக இந்த விழாவை கொண்டாடுகின்றன.. தற்போது வெளியிடப்பட்ட கலிலேஹ-வா-திம்னே பாரசீக மொழி கையெழுத்துப் பிரதி இந்தியாவுக்கும் ஈரானுக்கும் இடையிலான வரலாற்று ரீதியான உறவை வெளிப்படுத்துகிறது. இந்தியாவின் பாரம்பரிய ஜாதக மற்றும் பஞ்சதந்திர கதைகளே பாரசீக மொழியில் மாற்றப்பட்டன. இரண்டு சமுதாயத்துக்கும் இடையே நடந்த பயணம் மற்றும் கலாச்சார சிந்தனைகளின் பரிமாற்றத்துக்கு அது உதாரணமாக விளங்குகிறது. நம் இரு நாடுகளின் கலாச்சாரம் எப்படி ஒரே மாதிரியாக உள்ளது என்பதை அது கண்கூடாக விளக்குகிறது. நமது தொன்மையான நாகரீகத்தின் வெளிப்பாடு அது. சுவையான உணவை விரும்புவோருக்கு இந்தியாவில் இருந்துதான் அது கிடைக்கிறது. பிரபல பாரசீகக் கவிஞர் ஹசீஃப் வரிகளில் சொல்வதென்றால் தெஹரானில் வாழும் ஈரானின் அனைத்து நைட்டிங்கேல்களுக்கும் இந்தியாவிலிருந்துதான் இனிப்புக் கிடைக்கிறது.

நண்பர்களே,

பல நூறு ஆண்டுகளாக நம்மிடையே பரிமாறப்படும் சிந்தனை மற்றும் பாரம்பரியம் கவிஞர்கள் மற்றும் கைவினைஞர்கள், கலை மற்றும் கட்டிடக்கலை, கலாச்சாரம் மற்றும் வர்த்தகம் முதலியவை நமது நாகரீகங்களை செழுமைப்படுத்தி உள்ளன. நமது பாரம்பரியமும் நம்மிரு நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு வலு சேர்த்துள்ளது. இந்திய சமுதாயத்தில் பாரசீக கலாச்சாரத்தின் செழுமை பின்னிப்பிணைந்து கிடக்கிறது. ஈரானிய கலாச்சாரம் இந்தியர்களின் இதயத்தில் ஒரு தொகுதியாக நிறைந்து நிற்கிறது. அதேபோல் இந்திய பாரம்பரியத்தின் பிரிவுகள் ஈரானிய சமுதாயத்திலும் ஊடுருவி உள்ளன. ஈரானிய சமுதாயத்தில் இந்திய நாகரீகத்தின் ஒரு பிரிவு பின்னப்பட்டுள்ளது. இரு நாடுகளிலும் ஒரே மாதிரியான இதிகாச வீரர்கள் போற்றப்படுகிறார்கள். அஜ்மீர் ஷரீப் மற்றும் ஹஸ்ரத் நிஜாமுதீன் தர்காக்கள் இந்தியாவில் போற்றப்படுவது போலவே ஈரானிலும் சமமாகப் போற்றப்படுகின்றன. மகாபாரதம் மற்றும் ஷனாமா, பீமா மற்றும் ருஸ்தும், அர்ஜுனா மற்றும் ஆர்ஷ் ஆகிய கதாபாத்திரங்கள் உலகப் பார்வையில் ஒரே மாதிரி மதிப்பீடுகளை பெற்றுள்ளன. ஜர்தோசி, குல்தோசி மற்றும் சந்தேரி ஆகியவை ஈரான் சமுதாயத்தின் அங்கமாக இருக்க கூடும். அவை இந்தியாவிலும் பிரபலமானவை. ஈரான் கலாச்சார செழுமையை பார்க்கும் போது அதன் கவிதைகளையும் அதைக் கொண்டுள்ள பாரசீக மொழியையும் யார்தான் மறக்க முடியும். இந்தியாவில் எங்கள் நாட்டை சேர்ந்ததாகவே அவற்றை நாங்கள் கருதுகிறோம். பாரசீக மொழியும் சமஸ்கிருதமும் சகோதரிகள் என்று மத்திய கால கவிஞர்கள் வர்ணித்தார்கள். பல மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ள இந்தியாவின் இதிகாசமான ராமாயணத்தில் 250 பாரசீக வார்த்தைகள் இடம்பெற்றுள்ளதாக அறியப்படுகிறது. மத்திய காலத்தில் இந்தியாவில் அது அரசு மொழியாகவும் இருந்திருக்கிறது. இந்தியர்கள் இதயத்தில் அது எழுதப்பட்டுள்ளதே அதற்கு காரணம். இந்தியாவில் சுமார் 40 பல்கலைக் கழகங்களில் பாரசீக மொழி கற்பிக்கப்படுகிறது. அகில இந்திய வானொலி கடந்த 75 ஆண்டுகளாக பாரசீக மொழிச் சேவையை நடத்தி வருகிறது. சுமார் 50 லட்சம் பாரசீக கையெழுத்து பிரதிகள் எங்கள் நாட்டின் அரசு மற்றும் தனியார்வசம் பாதுகாக்கப்படுகிறது. தேசிய மற்றும் மாநிலங்களின் ஆவணக் காப்பகத்தில் 20 மில்லியனுக்கும் மேற்பட்ட ஆவணங்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலனவை ஈரான் எழுத்து வல்லுனர்களால் எழுதப்பட்டு இந்திய கலைஞர்களால் வண்ணம் தீட்டப்பட்டுள்ளதால் பொதுவான பாரம்பரிய அம்சங்கள் அதில் காணப்படுகின்றன. ஐதராபாத் சலார் ஜங் அருங்காட்சியகத்தில் இந்த இருநாட்டு கை வண்ணத்தை பல கையெழுத்துப் பிரதிகளில் காண முடியும். பாரசீக கையெழுத்துப் பிரதிகள் உள்ளிட்ட அனைத்து கையெழுத்து பிரதிகளையும் டிஜிட்டல் மயமாக்கும் நடவடிக்கை தற்போது இந்தியாவில் மேற்கொள்ளப்படுகிறது. ஆண்டுதோறும் பாரசீக மொழி அறிஞர்களுக்கு குடியரசுத் தலைவர் விருதுகளை வழங்குகிறார்.

பெரியோர்களே, தாய்மார்களே,

இரண்டு தொன்மையான நாகரீகங்களைக் கொண்ட நாம் வெளிநாட்டு கலாச்சாரத்தையும் வரவேற்று கிரகித்துக் கொள்ளும் திறனை பெற்றிருக்கிறோம். நமது தொடர்புகள் நமது கலாச்சாரத்தை உயர்த்துவதுடன் நிற்காமல் உலக அளவில் சகிப்பு தன்மையையும் மிதமான கொள்கையும் கொண்ட சமுதாயத்தை வளர்ப்பதிலும் பங்காற்றியுள்ளன. மனிதகுலம் முழுவதும் ஏற்றுக் கொள்ளும் உண்மையான அன்பு, சகிப்புத் தன்மையை போதிக்கும் சுஃபிசம் நமது தொன்மையான செழுமைமிக்க பண்பாகும். உலகமே ஒரு குடும்பம் என்ற இந்திய தத்துவத்தின் உணர்வு அதில் பிரதிபலிக்கிறது.

நண்பர்களே,

இந்தியாவும் ஈரானும் எப்போதும் பங்காளிகளாகவும் நண்பர்களாகவும் இருந்து வருகின்றனர். வரலாற்று ரீதியான நமது உறவில் ஏற்ற இறக்கங்கள் இருக்கக்கூடும். ஆனால், நம் இரு நாடுகளும் ஒன்றுபட்டு நிற்பதால் மட்டற்ற பலம் நம் இரு நாடுகளுக்கும் கிட்டியுள்ளது. பாரம்பரிய உறவு மற்றும் இணைப்பு மூலம் நாம் பெற்றிருந்த கடந்த கால புகழை மீண்டும் பெறும் நேரம் வந்துவிட்டது. இருவரும் கைகோர்த்து அணிவகுக்க வேண்டிய நேரமும் வந்துவிட்டது. இந்த நிகழ்வில் நமது பங்களிப்பு எப்படி இருக்க வேண்டும் என்பதை அறிஞர்களாகிய நீங்கள் நிர்ணயிக்க வேண்டும்.

“இந்தியா மற்றும் ஈரான், இரண்டு மகத்தான கலாச்சாரங்கள்: கடந்த காலமும் வாய்ப்புகளும்” என்ற தலைப்பிலான இந்த மாநாட்டைத் துவக்கி வைப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்த மாநாடு வெற்றிபெற எனது வாழ்த்துகளை தெரிவிக்கும் அதே வேளையில் இங்கு நடக்கும் விவாதத்தில் வெளிப்படும் சிந்தனைகளை வரவேற்பதில் நான் ஆர்வமாக இருக்கிறேன். இந்த மாநாட்டை நடத்துவதில் இந்திய கலாச்சார ஆராய்ச்சி கவுன்சிலும் ஈரானின் ஃபர்ஹாங்கிஸ்தான் அமைப்பும் இணைந்து இந்த மாநாட்டை நடத்தியது கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் நடத்தும் விவாதம் நமது இலக்கியம், கல்வி மற்றும் மக்களுக்கிடையிலான உறவு முதலியவற்றை மேலும் வலுப்படுத்துவதாக அமையட்டும்.

என்னை அழைத்தமைக்காக மீண்டும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த மாநாடு வெற்றிபெற எனது வாழ்த்துகள்.

ஷூக்ரான், நன்றி.