பி.எம்.இந்தியா
இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபை மற்றும் பிரான்ஸின் ஐஎன்எஸ்இஆர்எம் நிறுவனங்களுக்கு இடையே 2018 மார்ச் மாதம் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
முக்கிய அம்சங்கள்:
மருத்துவ, உயிரி அறிவியல், மருத்துவ ஆராய்ச்சித் துறைகளில் பொது அக்கறையுள்ள விஷயங்கள் தொடர்பாக ஒத்துழைப்புக்கு இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வகை செய்கிறது. இருதரப்பினரின் அறிவியல் தேர்ச்சித் திறன் அடிப்படையில் கீழ்கண்ட துறைகளுக்கு முக்கிய கவனம் செலுத்த ஒப்புக்கொள்ளப்பட்டது.
i. நீரிழிவு நோய் மற்றும் வளர்சிதை மாற்றக் குறைபாடுகள்
ii. நன்னெறிகள் அடிப்படையிலான உயிரி நன்னெறிகள் மற்றும் மரபணு மாற்றியமைத்தல் தொழில்நுட்பம் சார்ந்த கட்டுப்பாட்டு பிரச்னைகள்
iii. அபூர்வ நோய்கள்
iv. இருதரப்பினரின் பேச்சுக்களுக்கு பிறகு, இதர பரஸ்பர அக்கறையுள்ள விஷயங்கள் கருத்தில் கொள்ளப்படும்.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஐசிஎம்ஆர் மற்றும் ஐஎன்எஸ்இஆர்எம் ஆகியவற்றுக்கு இடையே உறவுகளை மேலும் வலுப்படுத்தும். இது சர்வதேச அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு அடிப்படையில் பரஸ்பரம் அக்கறையுள்ள விஷயங்கள் சார்ந்ததாக அமையும். இருதரப்பினரின் அறிவியல் சிறப்புத் தன்மை மருத்துவ ஆராய்ச்சித்துறையின் குறிப்பிட்ட பகுதிகள் சார்ந்த பணிகளை வெற்றிகரமாக நிறைவேற்ற உதவும்.