பி.எம்.இந்தியா
டிஜிட்டல் கட்டமைப்பு, கிராமப்புற கட்டமைப்பு மற்றும் தொலைத்தொடர்பு போன்ற பிரிவுகளில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி குறித்து பிரதமர் திரு. நரேந்திர மோடி திங்கட்கிழமை அன்று ஆய்வு செய்தார்.
சுதந்திரத் தினத்தன்று ஆயிரம் நாட்களில் மின் இணைப்பு இல்லாத எல்லா கிராமங்களுக்கும் மின் இணைப்பு அளிக்கப்படும் என்ற தனது உறுதிமொழி குறித்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது பற்றி அப்போது பிரதமர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இது சம்பந்தமான துறைகள் அனைத்தும் இந்த இலக்கை அடைய தேவையான வளர்ச்சிப் பணிகளை கண்காணிக்க வேண்டும் என்று பிரதமர் ஆணையிட்டார்.
நாட்டின் அலைபேசி தொடர்பு குறித்த தற்போதைய நிலையும் அவருக்கு கூறப்பட்டது. ரயில்வே மற்றும் தொலைத்தொடர்பு கட்டமைப்பு போன்ற தற்போதைய வசதிகளை பயன்படுத்தி, தொலைதூர கிராமங்களுக்கும், தொடர்புகள் அற்ற பகுதிகளுக்கும் அலைபேசி தொடர்பு வசதிகளை அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். டிஜிட்டல் கட்டமைப்பு வசதிகளின் இலக்குகள் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் வசதிகளோடு ஒன்றிணைக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
அலைபேசியில் பேசிக்கொண்டிருக்கும்போதே இணைப்பு தானாக துண்டிக்கப்படுவது குறித்து பிரதமர் ஆழ்ந்த கவலை தெரிவித்தார். இதனை தவிர்க்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று அதிகாரிகளை அவர் கேட்டறிந்தார். இந்தப் பிரச்சினை சாதாரண மக்களை நேரடியாக பாதிப்பதாக பிரதமர் அப்போது குறிப்பிட்டார். அலைபேசியில் பேசும்போது ஏற்படும் பிரச்சினைகள் இணையதளத்தை பயன்படுத்தும் போதும் ஏற்படாமல் உறுதி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
சூரியஒளியின் மூலம் கிடைக்கும் மின்சாரம் பற்றி குறிப்பாக, ரயில் நிலையங்கள் மற்றும் விமான நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களின் முன்னேற்றம் பற்றி பிரதமர் ஆய்வு நடத்தினார். ரயில்வே பல்கலைக்கழகம் அமைப்பது பற்றிய பணிகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். நேப்பாள், பூட்டான், வங்காளதேசம் ஆகிய மூன்று நாடுகளையும் இணைக்கும் சாலை இணைப்பிற்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என்றும் பிரதமர் அப்போது வலியுறுத்தினார்.
கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதற்காக தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று கூறிய பிரதமர், இப்பிரிவை கவனிக்கும் அமைச்சகங்கள் இந்த நிதியை சரியான முறையில் பயன்படுத்தி பணிகள் விரைவாக முடிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
நித்தி ஆயோக்கின் துணைத் தலைவர் திரு. அரவிந்த் பனகாரியா, பிரதமர் அலுவலகம், நித்தி ஆயோக் அலுவலகம் மற்றும் அமைச்சகங்களின் உயர் அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.
Reviewed progress of digital infrastructure, rural infrastructure & connectivity sectors at a high level meeting. http://t.co/hfeRfnAU2N
— Narendra Modi (@narendramodi) August 25, 2015