Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பட்டய கணக்காளர் தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் பேச்சு

பட்டய கணக்காளர் தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் பேச்சு

பட்டய கணக்காளர் தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் பேச்சு


பட்டயக் கணக்காளர் தினத்தையொட்டி, புதுதில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கூடியிருந்த ஏராளமானோர் மத்தியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார்.

பிரதமரின் உரை, நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) அமல்படுத்தப்பட்ட முதலாவது நாளில் பேசிய பிரதமர் திரு.நரேந்திர மோடி, கணக்கு தணிக்கையாளர்கள் பொருளாதாரத்தின் ஆரோக்கியம் மற்றும் சமூகத்தின் நலனுக்கான மருத்துவர்கள் என்று குறிப்பிட்டார். மேலும், பட்டயக் கணக்காளர்களை பொருளாதார உலகின் துறவிகள் மற்றும் முனிவர்கள் என்று பிரதமர் வர்ணித்தார். இந்தியாவில் உள்ள பட்டயக் கணக்காளர்கள், தங்களது தலைசிறந்த நிதி செயல்பாட்டு திறன்கள் மூலம், உலகம் முழுவதும் அறியப்பட்டவர்கள் என்று பிரதமர் திரு.நரேந்திர மோடி தெரிவித்தார்.

எந்தவொரு நெருக்கடியிலிருந்தும் மீண்டுவரும் திறனை இந்தியா பெற்றிருந்தபோதிலும், மக்களில் சிறு பகுதியினர் ஊழல் நடவடிக்கைகளைத் தொடங்கினால், நாட்டின் வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்படும் என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி தெரிவித்தார்.

கறுப்புப் பணத்துக்கு எதிராகவும், ஊழல் செய்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவும், கடந்த மூன்று ஆண்டுகளில் பண மதிப்பு நீக்க நடவடிக்கை உள்ளிட்ட மத்திய அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளை அவர் நினைவுகூர்ந்தார்.

பண மதிப்பு நீக்க நடவடிக்கைகளுக்குப் பிறகு, தகவல் தொகுப்புகளை ஆய்வு செய்தபோது, 3 லட்சம் நிறுவனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதாக பிரதமர் தெரிவித்தார். சட்டங்களை மீறி ஒரு லட்சம் நிறுவனங்கள் செயல்பட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டு, அவை நிறுவனங்கள் பதிவு ஆவணங்களிலிருந்து நீக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். தேச நலன் கருதி உறுதியான முடிவுகளை மத்திய அரசு எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

பட்டய கணக்காளர்கள், தங்களுக்குள் சுயபரிசோதனை செய்துகொண்டு, ஊழல் நடவடிக்கைகளையும், அந்த செயல்களில் ஈடுபடுபவர்களையும், தங்களிடமிருந்து நீக்க வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார். கணக்குகளைத் தாக்கல் செய்யும்போது, மக்கள், தங்களது வருமானம் குறித்து தெரிவிக்கும் தகவல் விவரங்களை பிரதமர் வெளியிட்டார். அப்போது, பட்டய கணக்காளர்கள், தங்களது கட்சிக்காரர்களுக்கு ஆலோசனை வழங்கும்போது, நாட்டுநலனையே முக்கியமானதாக கருத வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொண்டார். சுதந்திரப் போராட்டத்தில் முக்கியப் பங்கு வகித்த வழக்கறிஞர்கள் உள்ளிட்ட தொழில்நிபுணர்கள் ஏராளமானோர் கூடியிருப்பதை பிரதமர் குறிப்பிட்டார். அவர்களது வழியை பட்டயக் கணக்காளர்கள் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்திய பிரதமர், சரக்கு மற்றும் சேவை வரியுடன் பொருளாதார ஒருங்கிணைப்புக்கான புதிய காலத்தை நோக்கி இந்தியா முன்னேறி வருவதால், தங்களது கட்சிக்காரர்களை நேர்மையான வழியில் செயல்படுமாறு அறிவுரை வழங்குமாறு பட்டயக் கணக்காளர்களைக் கேட்டுக் கொண்டார். பட்டயக் கணக்காளர்கள் அளிக்கும் சான்றிதழ் மீது ஒட்டுமொத்த உலகமும் முழு நம்பிக்கை வைத்திருப்பதாக பிரதமர் தெரிவித்தார். இந்த நம்பிக்கையும், நம்பகத்தன்மையும் சீர்குலைந்துவிடக் கூடாது என்று பிரதமர் வலியுறுத்தினார். சமூகத்தின் நலனுக்கும், நாட்டின் வளர்ச்சிக்கும், வரிசெலுத்துவோர் செலுத்தும் வரி, எவ்வாறு முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதை பிரதமர் விளக்கினார்.

இந்தியா சுதந்திரமடைந்ததன் 75-வது ஆண்டு விழா கொண்டாடும் 2022-ம் ஆண்டில் தங்களது துறை எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கான இலக்கு குறித்து சிந்துக்குமாறு பட்டயக் கணக்காளர்களை அவர் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டார். உலக அளவில் மிகப்பெரும் 4 தணிக்கை நிறுவனங்கள் குறித்து பேசிய பிரதமர், இந்தியாவின் பட்டயக் கணக்காளர்கள், அடுத்த உலக அளவிலான மிகப்பெரும் 4 தணிக்கை நிறுவனங்களாக உருவாவதற்கு பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

சாணக்கியரை குறிப்பிட்ட பிரதமர் திரு. நரேந்திர மோடி, இந்த வாய்ப்பை பட்டயக் கணக்காளர்கள் தவற விட்டுவிடக் கூடாது என்று கேட்டுக் கொண்டார். மேலும், நாட்டை கட்டமைக்கும் முக்கியப் பணியில் இணையுமாறு பட்டயக் கணக்காளர்களுக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார்.

*****