Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிலிப்பைன்ஸ் புறப்படுவதற்கு முன் பிரதமர் வெளியிட்ட அறிக்கை


பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் பிலிப்பைன்ஸ் புறப்படுவதற்கு முன்பு வெளியிட்ட அறிக்கை வருமாறு.

 

“நவம்பர் 12 முதல் மூன்று நாட்கள் பயணமாக மணிலாவில் நான் இருப்பேன். இது பிலிப்பைன்சிற்கு நான் செல்லும் முதல் இருதரப்பு பயணமாகும். நான் அங்கு ஆசியான்-இந்தியா மற்றும் கிழக்கு ஆசியா மாநாடுகளில் பங்கேற்க உள்ளேன். இவற்றில் நான் பங்கேற்பது, குறிப்பாக, ஆசியான் உறுப்பு நாடுகளுடனும், பொதுவாக இந்தோ-பசிபிக் பகுதியுடனும் நமது உறவை ஆழப்படுவதில் இந்தியாவின் உறுதிப்பாட்டை குறிப்பதாக அமையும்.

 

இம்மாநாடுகள் தவிர, ஆசியான் அமைப்பின் 50வது ஆண்டையொட்டி நடைபெறும் சிறப்பு கொண்டாட்டங்களிலும், பிராந்திய விரிவான பொருளாதார கூட்டு (ஆர்.சி.இ.பி.) தலைவர்களின் கூட்டம் மற்றும் ஆசியான் வணிக மற்றும் முதலீட்டு மாநாடு ஆகியவற்றில் நான் பங்கேற்கிறேன்.

 

ஆசியான் வணிக மற்றும் முதலீட்டு மாநாடு, ஒட்டுமொத்த வணிகத்தில் 10.85%-ஆக இருக்கும் ஆசியான் உறுப்பினர் நாடுகளுடனான வணிக உறவுகளில் உள்ள நமது நெருங்கிய கூட்டை  மேலும் மேம்படுத்தும்.

 

பிலிப்பைன்சிற்கு நான் முதன்முறையாக செல்லும்போது, பிலிப்பைன்ஸ் அதிபர் மேன்மைமிகு திரு.ரோட்ரிகோ ட்யூட்ரேட் அவர்களுடனான இருதரப்பு சந்திப்பை எதிர்நோக்கியுள்ளேன். மேலும், பிற ஆசியான் மற்றும் கிழக்கு ஆசியா மாநாட்டு தலைவர்களுடனும் கலந்துரையாட உள்ளேன்.

 

மேலும், பிலிப்பைன்சில் உள்ள இந்திய சமூகத்தினருடன் தொடர்பு கொள்ளவிருப்பதை நான் எதிர்நோக்கியுள்ளேன். மணிலாவில் நான் தங்கியிருக்கும்போது, சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனம் (ஐ.ஆர்.ஆர்.ஐ.) மற்றும் மகாவீர் பிலிப்பைன்ஸ் பவுண்டேஷன் நிறுவனம் (எம்.பி.எப்.ஐ.) ஆகியவற்றிற்கும் நான் செல்லவிருக்கிறேன்.

 

சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனம் (ஐ.ஆர்.ஆர்.ஐ.), அறிவியல் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மூலம் அரிசி விதை சிறந்த தரத்துடன் உருவாக்கியுள்ளதுடன், உணவு பற்றாக்குறை பிரச்சினைகளுக்கு தீர்வு காண சர்வதேச சமூகத்திற்கு உதவுகிறது. இந்திய அறிவியலாளர்கள் பலர் ஐ.ஆர்.ஆர்.ஐ.-ல் பணியாற்றி வருவதுடன், இத்துறையில் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கு பங்காற்றி வருகின்றனர்.  2017, ஜூலை, 12 அன்று எனது அமைச்சரவை, வாரணாசியில் தெற்காசிய பிராந்திய மையம் அமைப்பதற்கான ஐ.ஆர்.ஆர்.ஐ.-ன் முன்மொழிவிற்கு ஒப்புதல் அளித்தது.  இதுவே பிலிப்பைன்ஸ் உள்ள தலைமையிடத்தை விட்டு வெளியிடத்தில் ஐ.ஆர்.ஆர்.ஐ.-யால் அமைக்கப்படும் முதல் ஆராய்ச்சி மையமாகும். வாரணாசி மையம், அரிசி உற்பத்தியை அதிகரிக்க உதவுதல், உற்பத்தி செலவினை குறைத்தல், மதிப்பை கூட்டுதல், விவசாயிகளின் திறன்களை பரவலாக்குதல் மற்றும் மேம்படுத்துதல் மூலம் விவசாயிகளின் வருவாயை அதிகரிக்க உதவும்.

 

மகாவீர் பிலிப்பைன்ஸ் பவுண்டேஷன் நிறுவனத்திற்கான (எம்.பி.எப்.ஐ.) எனது விஜயம், கால் இழந்தவர்களுக்கு இலவசமாக  செயற்கை “ஜெய்ப்பூர் கால்”களை வழங்கும் அதன் நடவடிக்கைளுக்கு இந்தியாவின் ஆதரவை வெளிப்படுத்தும். 1989-ல் துவங்கப்பட்ட நாள் முதல் எம்.பி.எப்.ஐ., பிலிப்பைன்ஸில் ஏறக்குறைய 15,000 கால் இழந்தவர்களுக்கு ஜெய்ப்பூர் கால்களை பொருத்தி, அவர்கள் புதிய வாழ்க்கை வாழ உதவியுள்ளது. இந்த அறக்கட்டளையின் உன்னதமான மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு உதவும் வண்ணம் இந்தியா பொதுவான பங்களிப்பை அளித்து வருகிறது.

மணிலாவிற்கான எனது பயணம், பிலிப்பைன்ஸ் உடனான இந்தியாவின் உறவிற்கு புதிய உத்வேகம் அளிப்பதுடன், ஆசியான் அமைப்புடனான நமது அரசியல்-பாதுகாப்பு, பொருளாதார மற்றும் சமூக-கலாச்சார தூண்களை மேலும் வலுப்படுத்தும் என நான் நம்புகிறேன். ”