Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மோகாமாவில் உட்கட்டமைப்பு திட்டங்களுக்கான அடிக்கல்லை பிரதமர் நாட்டினார், பொதுக் கூட்டத்தில் உரையாற்றினார்


பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் இன்று பீகாரில் உள்ள மோகாமாவில், நமாமி கங்கைத் திட்டத்தின் கீழ் நான்கு கழிவுநீர் திட்டங்கள் மற்றும் நான்கு தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கான அடிக்கல்லை நாட்டினார். இத்திட்டங்களின் மொத்த ஒதுக்கீடு ரூ.3700 கோடிக்கும் அதிகமாகும்.

பெருந்திரளாக மக்கள் கூடியிருந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், மிகப் பெரிய கவிஞர் ராம்தார் சிங் தினகர் அவர்களுடன் மிகவும் நெருங்கிய தொடர்புடைய நிலத்திற்கு தாம் வருகை புரிந்ததில் பெரும் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்தார். பீகாரின் வளர்ச்சிக்காக மத்திய அரசு மற்றும் மாநில அரசு இயன்ற அனைத்தையும் மேற்கொள்ளும் என ஒவ்வொருவருக்கும் அவர் உறுதியளித்தார்.

மக்களின் உணர்வுகளை பூர்த்தி செய்யும் வகையில் அரசு களைப்பின்றி உழைத்து வருவதாக பிரதமர் கூறினார். இன்று அடிக்கல் நாட்டப்பட்ட திட்டங்கள் பீகாரின் வளர்ச்சிக்கு பெரும் முக்கியத்துவம் அளிக்கும் என அவர் தெரிவித்தார்.

மேலும், சாலை போடும் பணியை விரைவாக மேற்கொள்வதில் அரசு கவனம் செலுத்தி வருவதாக அவர் கூறினார். நமாமி கங்கையுடன் தொடர்பான திட்டங்கள் கங்கை ஆற்றை பாதுகாப்பதற்கு உதவும் என அவர் தெரிவித்தார்.

சமீபத்தில் துவங்கப்பட்ட அந்த்யோதயா விரைவு ரயில் வண்டிகளை குறிப்பிட்ட அவர், இவை பீகார், கிழக்கு இந்தியா மற்றும் நாட்டின் பிற பகுதிகளுடனான இணைப்பை மேம்படுத்தும் என்றார். நல்ல இணைப்பு, பெரும் வளர்ச்சிக்கு அழைத்துச் செல்லும் என உறுதியாக கூறிய பிரதமர், சாலைகள், ரயில்வே மற்றும் நீர்வழி போக்குவரத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

அடிக்கல் நாட்டப்பட்ட நான்கு தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள்:

• தேசிய நெடுஞ்சாலை 31-ல் அவுண்டா-சிமாரியா பகுதியை 4 வழிச்சாலையாக்கல் மற்றும் 6 வழித்தடங்கள் கொண்ட கங்கா சேது கட்டுதல்

• தேசிய நெடுஞ்சாலை 31-ல் பக்தியார்பூர்-மோகாமா பகுதியை 4 வழிச்சாலையாக்கல்

• தேசிய நெடுஞ்சாலை 107-ல் மகேஷ்குந்த்-சஹார்ஸா-பூர்னியா பகுதியில் 2 வழிச் சாலை கட்டுதல்

• தேசிய நெடுஞ்சாலை 82-ல் பீகார்ஷரீப்-பார்பீகா-மோகாமா பகுதியில் 2 வழிச் சாலை கட்டுதல்

நான்கு கழிவுநீர் திட்டங்களில், பீயூரில் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை, பீயூரில் கழிவுநீர் அமைப்பு மற்றும் கழிவுநீர் பாதை இணைப்பு, கர்மாலிசாக்கில் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை மற்றும் சயீத்பூரில் கழிவுநீர் அமைப்பு மற்றும் கழிவுநீர் பாதை இணைப்பு ஆகிய திட்டங்கள் அடங்கும். இத்திட்டங்கள் ஒட்டுமொத்தமாக புதிதாக 120 எம்.எல்.டீ. திறன் கொண்ட கழிநீர் சுத்திகரிப்பு ஆலையை உருவாக்குவதுடன், பீயூரில் தற்போதைய 20 எம்.எல்.டீ-யின் தரத்தினை உயர்த்தும்.

***