Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான தொழில்நுட்ப சீர்திருத்தங்கள் மற்றும் நிதி குறித்த பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழிக் கருத்தரங்கில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்

வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான தொழில்நுட்ப சீர்திருத்தங்கள் மற்றும் நிதி குறித்த பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழிக் கருத்தரங்கில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்


2026-27 பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழிக் கருத்தரங்கத் தொடரில் “வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான தொழில்நுட்ப சீர்திருத்தங்கள் மற்றும் நிதி” குறித்த முதலாவது கருத்தரங்கில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். தேசிய பட்ஜெட் என்பது குறுகிய கால வணிக ஆவணம் என்பதை விட கொள்கைத் திட்டம் என்பதை வலியுறுத்திய திரு மோடி, வளர்ச்சியடைந்த இந்தியா 2047-ன் இலக்கை நனவாக்குவதற்கான கூட்டு முயற்சி என்றார்.

இந்தக் கருத்தரங்கில் உரையாற்றிய பிரதமர், உள்கட்டமைப்பு விரிவாக்கம், கடன் வழங்குவதை எளிதாக்குதல், எளிதாக வணிகம் செய்வதை மேம்படுத்துதல், நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை அதிகரித்தல் போன்ற உறுதியான அளவீடுகள் மூலமும், குடிமக்களின் வாழ்க்கையை எளிதாக்குதல், அவர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றின் மூலமும், பட்ஜெட்டின் பயன்பாடு மதிப்பிடப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினார். இந்த அம்சங்கள் தொடர்பான பட்ஜெட் முடிவுகள் பொருளாதாரத்திற்கு நிரந்தர வலிமையை அளிப்பதாக அவர் கூறினார்.

தேசக் கட்டுமானம் என்பது தொடர்ச்சியான நடவடிக்கை என்பதால் பட்ஜெட் மீதான ஆய்வை தனித்த ஒன்றாக பார்க்கக் கூடாது என்பது மிக முக்கியமானது என்று பிரதமர் குறிப்பிட்டார். ஒவ்வொரு பட்ஜெட்டும் மிகப்பெரிய இலக்கை நோக்கிய முன்னேற்றத்தின் ஒரு பகுதியாகும். அந்த இலக்கு 2047-க்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவது, எனவே ஒவ்வொரு சீர்திருத்தமும், ஒவ்வொரு ஒதுக்கீடும், ஒவ்வொரு மாற்றமும் இந்த நீண்ட பயணத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக பார்க்கப்பட வேண்டும் என்று திரு மோடி கூறினார்.  

வருடாந்திர பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழிக் கருத்தரங்குகள் மிகவும் முக்கியமானவை என்று குறிப்பிட்ட பிரதமர், இந்த அமர்வுகள் வெறுமனே கருத்துப் பரிமாற்றம் என்ற அளவோடு, நின்று விடாமல், பயனுள்ள சிந்தனையைத் தூண்டும் செயல்பாடாக இருக்க வேண்டும் என்ற தமது எதிர்பார்ப்பை வெளிப்படுத்தினார். அனுபவம் மற்றும் பங்கேற்பாளர்களின் நடைமுறை சவால்கள் அடிப்படையிலான ஆலோசனைகள் என்பவை பொருளாதார உத்திகளை மேலும் மெருகூட்டவும், தீர்வுகள் காணவும் நிச்சயம் உதவும் என்று திரு மோடி கூறினார். தொழில்துறையினர், கல்வியாளர்கள், பகுப்பாய்வாளர்கள், திட்டம் வகுப்போர் ஒன்று கூடி சிந்திக்கும் போது திட்டங்களின் அமலாக்கம் மேம்படுவதுடன், விளைவுகளும் கூடுதல் துல்லியத்தோடு இருக்கும் என்று அவர் தெரிவித்தார். இதுவே இந்த இணையவழிக் கருத்தரங்கத் தொடரின் பின்னுள்ள உணர்வாகும் என்று அவர் கூறினார்.

நீண்டகால உற்பத்தித் திறன் சார்ந்த சொத்துகளை உருவாக்கும் அரசின் உறுதிபாட்டை எடுத்துரைத்த பிரதமர், பொது மூலதன செலவினத்தில் கணிசமான உயர்வு ஏற்பட்டிருப்பதை சுட்டிக்காட்டினார். கடந்த 11 ஆண்டுகளில் இந்த செலவினத்திற்கான ஒதுக்கீடு சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் என்பதிலிருந்து இந்த பட்ஜெட்டில் 12 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக உள்ளது. இந்த மூலதனம் என்பது அடிப்படைக் கட்டமைப்பு மற்றும் புதிய கண்டுபிடிப்பில் தனியார் துறை பங்கேற்பின் அதிகரிப்புக்கு தெளிவான சமிக்ஞை ஆகும் என்று அவர் கூறினார்.

நிதி நிறுவனங்கள், சந்தைகள், தொழில்துறை, தொழில்முறையாளர்கள், புதிய கண்டுபிடிப்பாளர்கள் உள்ளிட்ட பங்குதாரர்கள் அனைவரும் இந்தப் பட்ஜெட்டின் புதிய வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். நடைமுறைகளை எளிதாக்குவதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பதை வலியுறுத்திய பிரதமர், பட்ஜெட்டுக்கு முந்தைய கலந்துரையாடல்கள் அதனை மறுவரையறை செய்வதற்கு பயன்படும் நிலையில் பட்ஜெட்டுக்குப் பிந்தைய கருத்தரங்குகள், எளிமையான வழிகள் மூலம் இயன்ற வரை வேகமாக களத்திற்கு பட்ஜெட்டை கொண்டு செல்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன என்பதை தெளிவுபடுத்தினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2233449&reg=3&lang=1

***

AD/SMB/RJ/KR