Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

2017 ஆம் ஆண்டு உலக தொழில்முனைவோர் உச்சி மாநாட்டில் பிரதமரின் உரை


அமெரிக்க அரசாங்கத்துடன் இணைந்து நாங்கள் 2017ஆம் ஆண்டுக்கான உலக தொழில்முனைவோர் உச்சி மாநாட்டுக்கு ஏற்பாடு செய்வதற்கு பெரும் மகிழ்ச்சி அடைகிறோம்.

இத்தகைய உச்சி மாநாடு தெற்காசிய நாட்டில் நடைபெறுவது இதுவே முதல் முறை. இந்த உச்சி மாநாடு உலகளாவிய தொழில்முனைவுச் சூழலை முடுக்கிவிடும் வகையில் உலகின் முன்னணி முதலீட்டாளர்கள், தொழில்முனைவோர், கல்வியாளர்கள், அறிஞர்கள், பயனாளிகள் அனைவரையும் ஒன்றிணைக்கிறது.

இந்த நிகழ்வு அமெரிக்காவின் சிலிக்கான் பள்ளத்தாக்குடன் (Silicon Valley) இந்தியாவின் ஐதராபாத் நகரை மட்டும் இணைக்கவில்லை. அமெரிக்காவையும் இந்தியாவையுமே இணைக்கிறது. இது தொழில்முனைவையும் புதுமையாக்கத்தையும் நோக்கிய நமது அர்ப்பணிப்பு உணர்வைப் பகிர்ந்து கொள்வதையும் சுட்டிக் காட்டுகிறது.

இந்த ஆண்டு உச்சி மாநாட்டுக்கான கருத்தியல் உடல்நலம் மற்றும் உயிர் அறிவியல்; டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் நிதித் தொழில்நுட்பம்; எரிசக்தி மற்றும் கட்டுமானம்; ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு ஆகியவற்றையும் உள்ளடக்கியதாக இருக்கிறது. இவையெல்லாம் மனித குலத்தின் நல்வாழ்வுக்கும் வளத்துக்கும் பொருந்தும் வகையில் மிக முக்கியமானவை என்ற அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

மகளிர்க்கு முதலிடம், எல்லோருக்கும் வளம் என்ற இந்தப் பொருள் இந்த உச்சி மாநாட்டைத் தனிச்சிறப்பு கொண்டதாக ஆக்கியிருக்கிறது. இந்தியப் புராணத்தில் பெண் என்பவள் சக்தியின் மறுவடிவமாகவே போற்றப்படுகிறாள். பெண்களுக்கு அதிகாரமளிப்பது நாட்டின் மேம்பாட்டுக்கு மிக முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம்.

நமது வரலாற்றில் பெண்களின் மகத்தான திறமை, உறுதிப்பாடு குறித்து பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. கார்கி என்ற கி.மு. 7ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பண்டைய தத்துவஞானி ஒரு வேதாந்த தர்க்க விவாதத்தில் ஒரு முனிவரையை எதிர்த்து வாதிட்டு வென்றிருக்கிறார். இதெல்லாம் அந்தக் காலத்தில் கேள்விப்பட்டிருக்க மாட்டோம். அது மட்டுமின்றி ராணி அஹில்யாபாய் ஹோல்கர், ராணி லக்ஷ்மிபாய் போன்றோர் தங்களது ஆட்சியைக் காப்பாற்றுவதற்காகத் தீரத்துடன் களத்தில் போரிட்டனர். நமது விடுதலைப் போராட்டமும் இதைப் போல் பல தீரம் நிறைந்த, உற்சாகமூட்டும் சம்பவங்களைக் கொண்டது.

இந்திய மகளிர் பல்வேறு துறைகளில் தலைமை பெற்றிருந்தனர். செவ்வாய்க் கிரகத்தை நோக்கிய விண்வெளிப் பயணம் உள்பட நமது விண்வெளி ஆய்வுத் திட்டங்களில் பல பெண் விஞ்ஞானிகள் பங்கேற்றுள்ளனர். அமெரிக்க விண்வெளி ஆய்வுப் பணிகளில் ஈடுபட்ட கல்பனா சாவ்லா, சுனிதா வில்லியம்ஸ் ஆகியோர் இந்தியா அளித்த கொடையாவர்.

இந்தியாவில் உள்ள நான்கு மிகப் பழைய உயர் நீதிமன்றங்களில் மூன்று நீதிமன்றங்களுக்கு பெண்களே தலைமை நீதிபதிகளாக இருக்கின்றனர். நமது விளையாட்டு வீராங்கனைகள் நாட்டுக்குப் பெருமை தேடித் தந்துள்ளனர். இதே ஐதராபாத் நகரைச் சேர்ந்த சய்னா நெஹ்வால், பி.வி. சிந்து, சானியா மிஸ்ரா ஆகியோர் இந்தியாவுக்குப் புகழ் சேர்த்துள்ளனர்.

இந்தியாவில், அடித்தளத்தில் முடிவெடுக்கும் அதிகாரம் கொண்டவர்களாக மகளிர் தங்களது பங்களிப்பைச் செலுத்து விதத்தில நகர்ப்புற, கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மூன்றில் ஒரு பங்குக்குக் குறையாமல் பெண்களே இடம்பெறச் செய்துள்ளோம்.

நமது வேளாண் மற்றும் அது தொடர்பான தொழில்களில் 60 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் பெண்கள்தான். குஜராத்தில் உள்ள பால் கூட்டுறவு சங்கங்கள், ஸ்ரீ மகிளா கிரஹ உத்யோக் லிஜ்ஜத் பப்பட் (Shri Mahila Griha Udyog Lijjat Papad) ஆகிய அமைப்புகள் மகளிரே தலைமை வகித்து வெற்றிகரமாக நடத்தும் இயக்கங்களாக உலக அளவில் போற்றப்படுகின்றன.

நண்பர்களே,

இந்த உச்சி மாநாட்டில், 50 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் பெண்களே. அடுத்த இரு தினங்களில் தங்களது வாழ்க்கையில் வித்தியாசமாகச் செயல்படும் துணிச்சல் மிக்க பெண்களை நீங்கள் சந்திக்கப் போகிறீர்கள். அவர்கள் பெண்களின் புதிய தலைமுறை பெண் தொழில்முனைவோருக்கு உத்வேகம் அளிப்பவர்களாகத் திகழ்கிறார்கள். இந்த உச்சி மாநாட்டின் விவாதங்கள் பெண் தொழில்முனைவோர்களின் செயல்பாடுகளுக்கு எப்படி ஆதரவு அளிக்கலாம் என்று அமையும் என்று நம்புகிறேன்.

பெரியோர்களே, தாய்மார்களே,

இந்தியா பல ஆண்டுகளாகவே புதுமையாக்கத்திற்கும், தொழில்முனைவுக்கும் பிறப்பிடமாகத் திகழ்ந்து வருகிறது. சரகா சம்ஹிதை (Charaka Samhita) ஆயுர்வேதத்தை உலகுக்கு அளித்தது. இந்தியாவின் இன்னொரு பண்டைக்கால படைப்பாக யோகா திகழ்கிறது. இப்போது உலகம் முழுவதும் ஆண்டுதோறும் ஜூன் மாதம் 21ஆம் தேதியை யோகா தினமாக இணைந்து கொண்டாடி வருகிறது. பல தொழில்முனைவோர் யோகா, ஆன்மிகம், பாரம்பரிய ஆயுர்வேதப் பொருட்களின் பயன்பாட்டை மேம்படுத்துவதில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று  நாம் வாழும் டிஜிட்டல் உலகம் பைனரி முறையை (binary system) கொண்டது. பூஜ்யத்தைக் கண்டுபிடித்தது, பைனரி எனப்படும் இருகூற்று முறை உருவாக்கியது ஆகியவற்றுக்கு இந்தியாவின் ஆர்யபட்டாவின் பணியே காரணம்.

நவீனகால பொருளாதாரக் கோட்பாடுகளின் நுணுக்கங்கள், வரி விதிப்பு முறை, பொது நிதிக் கொள்கை ஆகியவற்றை கவுடில்யரின் அர்த்த சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.

உலோகவியலில் பண்டைய இந்தியாவின் நிபுணத்துவத்தை எல்லோரும் அறிவர். நமது பண்டைக்காலத் துறைமுகங்கள், கடல்தளங்கள் லோத்தலில் இருக்கும் உலகின் மிகப் பழைய கடற்படைத் தளம் ஆகியவை நமது வணிகத் தொடர்புகளுக்கு ஆதரங்களாகத் திகழ்கின்றன.

ஒருவரைத் தொழில்முனைவோர் என்று அடையாளம் காட்டுவதற்கான தகுதிகள் என்னென்ன?

ஒரு தொழில்முனைவோர் தனது திறமையையும் அறிவையும் தன் குறிக்கோளை நிறைவேற்றுவதற்குப் பயன்படுத்துவார். ஒரு தொழில்முனைவோர் சோதனையிலும் சாதனை நிகழ்த்துபவராக இருப்பார். வாடிக்கையாளர் அல்லது நுகர்வோர் விரும்பும் தேவைகளை நிறைவேற்ற அவருக்கு வசதியாகவும் சாதகமாகவும் இருக்கும் வகையில் அமையப்  பாடுபடுவார். அவர்கள் பொறுமையாகவும்  குறிக்கோளுடனும் செயல்படுவார்கள். ஒவ்வொரு தொழில்முனைவோரும் மூன்று நிலைகளைக் கடந்து செல்வார். முதலில் கேலிக்கு ஆளாவார், பிறகு எதிர்ப்புக்கு ஆளாவார். இறுதியில் ஏற்கப்படுவார். காலத்தைக் கடந்து சிந்திப்போர் எப்போதும் நிச்சயமாக தவறாகவே புரிந்துகொள்ளப்படுவர். இவற்றையெல்லாம் கொண்டு பெரு்பாலான தொழில்முனைவோர் புகழ் பெறுவர்.

வித்தியாசமாகச் சிந்திக்கும் ஆற்றல் கொண்டிருப்பதும், மனித குலம் மேம்பாடு அடைவதற்கு காலத்தைக் கடந்து செல்வதும்தான் ஒரு தொழில்முனைவோரை உருவாக்குகின்றன இந்தியாவில் இளமை தலைமுறையினரிடம் இத்தகைய  ஆற்றல் இருப்பதைக் காண்கிறேன். உலகைச் சிறந்ததாக உருவாக்குவதற்கு உழைக்கும்  80 கோடி ஆற்றல் மிக்க தொழில்முனைவோர்களைப் பார்க்கிறேன்.

இந்தியாவில் ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 20189ம் ஆண்டில் 50 கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது இலக்கை எட்டுவது, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவது ஆகியவற்றைப் பொறுத்தவரையில் அபிவிருத்திக்கு மிகப் பெரிய துணையாக விளங்கும்..

நமது “இந்தியாவில் தொடங்கு” (Start-Up India) திட்டம் தொழில்முனைவோரை முடுக்கிவிடுவதற்கும் புதுமையாக்கத்திற்குமான செயல் திட்டமாகும். ஒழுங்குமுறை என்ற சுமையைக் குறைப்பதைக் குறிக்கோளாகக் கொண்டு இந்தியாவில் தொடங்கு  திட்டத்திற்கு உறுதுணையாகவும் உள்ளது. தேவையில்லாத 1200 சட்ட விதிகள் நீக்கப்பட்டுள்ளன.  21 தொழில் துறைகளில்   அந்நிய நேரடி முதலீட்டுக்கான 87 விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன. பல அரசு நடைமுறைகள் இணையம் மூலம் நிகழ்நிலையாக (online) மேற்கொள்ள வகை செய்யப்பட்டுள்ளன.

வணிகச் சூழலை மேம்படுத்துவதற்கு எங்களது அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் விளைவாக இந்தியா கடந்த மூன்று ஆண்டுகளில் 142  ஆவது இடத்திலிருந்து 100ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது என வணிகத்தை எளிதாகச் செய்வது குறித்த உலக வங்கியின் அறிக்கையில்  (World Bank’s Ease of Doing Business Report) தெரிவிக்கிறது.

கட்டுமானப் பணிகளைக் கையாள்வது, கடனுதவி பெறுவது, சிறுபான்மை முதலீட்டாளர்களைக் பாதுகாப்பது, வரிகளைச் செலுத்துவது, ஒப்பந்தங்களைச் செயல்படுத்துவது, திவால் பிரச்சினையைத் தீர்ப்பது ஆகிய பல செயல்பாடுகளில் நல்ல மேம்பாட்டை அடைந்திருக்கிறோம்.

இத்தகைய நடைமுறைகள் எல்லாம் இன்னும் நிறைவடைய வேண்டியிருக்கிறது. 100ஆவது இடத்தை எட்டிவிட்டாலும் திருப்தியடையாத நிலை இதுதான். இன்னும், 50ஆவது இடத்தைப் பிடிப்பதற்குப் பாடுபட்டுவருகிறோம்.

தொழில்முனைவோர்களுக்காக ரூ. 10 லட்சம் அளவுக்கு எளிய கடனுதவி அளிப்பதற்காக  “முத்ரா” (MUDRA) திட்டத்தைத் தொடங்கியிருக்கிறோம். இத்திட்டம் 2015ஆம் ஆண்டு தொடங்கியதிலிருந்து மொத்தம் ரூ. ஒரு லட்சம் கோடி மதிப்பிற்கு 9 கோடி கடனுதவிகள் அனுமதிக்கப்பட்டுள்ளன. இதில், 7 கோடிக்கும் மேல் பெண்களுக்கு அளிக்கப்படும் கடனுதவிகள் ஆகும்.

“அடல் புதுமையாக்க இயக்கம்” (Atal Innovation Mission) என்ற திட்டத்தை எனது  அரசு கொண்டு வந்திருக்கிறது. குழந்தைகளிடம் புதுமையாக்கம், தொழில்முனைவுக் கலாசாரத்தை வளர்ப்பதற்காக 900 பள்ளிக் கூடங்களில் பழுதுநீக்க ஆய்வகங்களை (Tinkering Labs) அமைத்துள்ளோம். “வழிகாட்டும் இந்தியா” (Mentor  India) என்ற எங்களது முன் முயற்சியின் கீழ் இந்த ஆய்வகங்களின் மூலம் மாணவர்களுக்கு தலைவர்கள் வழிகாட்டி ஊக்கமளிக்க வகை செய்யப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு பல்கலைக்கழகங்கள், ஆய்வு நிறுவனங்களில் 19 அறிவூட்டு மையங்கள் (incubation centers) அமைக்கப்பட்டுள்ளன.  இது புதுமையாகத் தொடங்கும் வணிகம் தக்க வகையில் அமையவும் நிலையான இடத்தை அடைவதை ஊக்குவிக்கும்.

உலகின் மிகப் பெரிய “பயோமெட்ரிக்” தகவல் தளத்தின் அடிப்படையில் “ஆதார்” உருவாக்கியிருக்கிறோம். இதுவரை தற்போது 115 கோடி பேருக்கு அளிக்கப்பட்டுவிட்டது. இதன் கீழ் தினந்தோறும் 4 கோடி பரிவர்த்தனைக்கு டிஜிட்டல் வழியாக மெய்ப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது, பல்வேறு அரசுத் திட்டங்களின் கீழ் பயனடைவோருக்கு ஆதாரைப் பயன்படுத்தி நேரடிப் பலன் பட்டுவாடா  (Direct Benefit Transfer) மூலம் டிஜிட்டல் வழியாக பணப் பலன்கள் சென்றடைய ஏற்பாடு செய்துள்ளோம்.

ஜன் தன் திட்டத்தின் (Jan Dhan Yojana) கீழ் மொத்தம் ரூ. 68,500 கோடி அளவுக்குச் சேமிப்பு கொண்ட ஏறத்தாழ 30 கோடி வங்கிக் கணக்குள் அதாவது, 1000 கோடி டாலர் அளவுக்கு சேமிப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. இது சமுதாயத்தில் வங்கியல்லாத பணப் பரிமாற்றத்தை முறையான நிதி நடைமுறைக்கு மாற்றுகிறது. இந்தக் கணக்குகளில் 53 சதவீதம் பேர் பெண்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

குறைவான பணப் பொருளாதாரத்தை எட்டுவதற்காக நிதானமாகவும் சீராகவும் அடியெடுத்து வைக்கிறோம். “பீம்”  (BHIM) எனப்படும் சீரான பணப்பட்டுவாடா செயலியை (Unified Payment Interface App) அறிமுகப்படுத்தியுள்ளோம். ஓராண்டுக்கும் குறைவான காலத்தில், தினந்தோறும் 28 லட்சம் பரிவர்த்தனைகள் அளவை எட்டியிருக்கிறோம்.

நாட்டில் எல்லா கிராமங்களுக்கும் மின்இணைப்பு அளிப்பது என்ற நிலையை அநேகமாகப் பூர்த்தி செய்துவிட்ட நிலையில், “சவுபாக்கியா திட்டத்தை” (Saubhagya scheme) தொடங்கியிருக்கிறோம். இதன் கீழ் நாடு முழுவதும் 2018ஆம் ஆண்டு  டிசம்பருக்குள் நாட்டில் அனைத்து குடும்பங்களுக்கும் மின் இணைப்பு கிடைத்துவிடும்.

அதிவேக அகன்ற அலைவரிசை இணைய வசதியை (high-speed broadband internet) 2019ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் அனைத்து கிராமங்களும் பெறுவதற்கு திட்டம் தொடங்கியுள்ளோம்.

தூய்மையான மின்சக்தி இந்தியா (clean energy programme) என்ற திட்டத்தின் கீழ் 30 ஆயிரம் மெகாவாட்ஸ் ஆக இருந்த  புதுப்பிக்கத் தக்க மின்சக்தித் திறனை மூன்றே ஆண்டுகளில் 60 ஆயிரம் மெகாவாட்ஸ் ஆக அதிகரித்துள்ளோம். சூரிய மின்சக்தி உற்பத்தி அளவு கடந்த ஆண்டை விட 80 சதவீதம் அதிகரித்துள்ளது. தேசிய எரிவாயு இணைப்பு (national gas grid) ஏற்படுத்துவதற்குத் தற்போது செயல்பட்டு வருகிறோம். ஒருங்கிணைந்த தேசிய மின்சக்திக் கொள்கை குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

நகர்ப்புறங்களிலும், கிராமப்புறங்களிலும் தூய்மைப்படுத்துவதற்கும், சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கான  எங்களது தூய்மை இந்தியா இயக்கம் (national gas grid) கண்ணியமான வாழ்க்கையை எட்ட மேற்கொள்ளப்படும் அர்ப்பணிப்பைக் காட்டுகிறது.

எங்களது கட்டுமானம் மற்றும் சாகர்மாலா மற்றும் பாரத் மாலா ஆகிய இணைப்புத் திட்டங்கள் தொழில்முனைவோர்கள் முதலீடு செய்வதற்காகவும் பல வணிக வாய்ப்புகளைப் பெறுவதற்கும் வழியமைக்கின்றன.

தொழில்முனைவோர்களை உணவுப் பதனீட்டுத் தொழிலிலும், வேளாண் கழிவுகளைப் பயன்படும் தொழிலிலும் ஈடுபடுத்துவதற்கு அண்மையில் கொண்டுவந்த எங்களது உலக உணவு முனைப்புத் திட்டம் பெரிதும் உதவுகிறது.

எனது அரசு வெளிப்படையான கொள்கையுள்ள சூழல்  மற்றும் சட்ட விதிகள் ஆகியவை தொழில்முனைவுத் திறன் வளமாக அமையப் பெரிதும் அவசியமாகின்றன.

சரக்கு மற்றும் சேவைகள் வரியை நாடு முழுவதும் அமல்படுத்தியதன் மூலம் வரிவிதிப்பு முறையையே முற்றிலும் மாற்றி அமைக்கப்பட்டது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. நமது திவால் மற்றும் நொடித்துப் போதல் குறித்த விதி முறை 2016ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்டது. இது அழுத்தத்தில் சிக்கித் தவிக்கும் தொழில் உரிய நேரத்தில் மீண்டு வருவதை உறுதி செய்கிறது. இதை மேலும் மேம்படுத்தி, திட்டமிட்டு கடன் திருப்பிச் செலுத்த மறுப்போரைத் தவிர்க்க  வகை செய்யப்பட்டுள்ளது.

வரி ஏய்ப்பு, கறுப்புப் பணத்தை வைத்திருப்பது போன்றவற்றின் மூலம் நிழல் பொருளாதாரத்தை நடத்துவதைத் தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அண்மையில் அரசாங்கக் கடன் பத்திரங்களை மேம்படுத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளுக்கு நல்ல அங்கீகாரம் கிடைத்துள்ளது. இந்த மேம்பாடு 14 ஆண்டுகள் கழித்து ஏற்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.

உலகப் பொருள்போக்குவரத்துச் செயல்பாட்டு அட்டவணையில் (World Bank’s Logistics Performance Index) 2014 ஆம் ஆண்டு 54 ஆவது இடத்தில் இருந்த இந்தியா 2016 ஆம் ஆண்டில் 35 ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. பொருட்கள் நாட்டில் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு திறமையாகவும் எளிதாகவும் எடுத்துச் செல்வதில் குறிப்பிடத் தக்க முன்னேற்றம் கண்டுள்ளதை இது காட்டுகிறது.

மிகப் பெரிய பொருளாதாரத்தில் முதலீட்டுக்கு உகந்த சூழல் ஸ்திரமாக  அமையவேண்டும். நிதி மற்றும் நடப்புக் கணக்கில் பற்றாக்குறையையும் பணவீக்கத்தையும் வெற்றிகரமாகக் கட்டுப்படுத்திவிட்டோம். எங்களது அந்நியச் செலாவணி இருப்பு 40 ஆயிரம் கோடி டாலரை மிஞ்சிவிட்டது. தொடர்ந்து வெளிநாட்டு முதலீடுகள் வருவதை ஈர்ப்பதும் தொடர்ந்து நடைபெறுகிறது.

எனது இந்திய இளம் தொழில்முனைவோர் நண்பர்களுக்கு  ஒன்றைக் கூறிக்கொள்கிறேன். “2022ஆம் ஆண்டில் புதிய இந்தியாவைப் படைப்பதில் நீங்கள் ஒவ்வொருவரும் மதிப்புள்ள பங்களிப்பைச் செலுத்த வேண்டியிருக்கிறது. நீங்கள்தான் நாட்டின் மாற்றத்திற்குக் கருவி. ஏற்றத்திற்கு ஏணியாக இருக்கிறீர்கள்.

உலகம் முழுதுமிருந்து வந்துள்ள எனது அருமை தொழில்முனைவோர் நண்பர்களுக்கு வேண்டுகோள்:  (இந்தியாவுக்கு) வாருங்கள்! இந்தியாவுக்கும் உலகத்துக்கும் இந்தியாவில் உற்பத்தி செய்வீர், இந்தியாவில் முதலீடு செய்வீர். இந்தியாவின் வளர்ச்சி வரலாற்றில் கூட்டாளியாக இருக்கும்படி உங்கள் ஒவ்வொருவரையும் அழைக்கிறேன். முழுமனத்தோடு உங்களுக்கு ஆதரவு தருவோம் என்று உறுதியாகக் கூறிக்கொள்கிறேன்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நடப்பு 2017ம் ஆண்டு நவம்பர் மாதத்தை தேசிய தொழில்முனைவு மாதமாக அறிவித்துள்ளதாக அறிகிறேன். அமெரிக்கா நவம்பர் 21ஆம் தேதியை தேசிய தொழில்முனைவோர் நாளாக அனுசரித்துள்ளது. இந்தக் கருத்துகளை இந்த உச்சி மாநாடு  நிச்சயம் ரீங்காரம் இட்டுக் கொண்டிருக்கும்.  இந்த உச்சி மாநாடு பலனுள்ள, ஈடுபாடு கொண்ட, சாதகமான அமர்வுகளை நடத்த வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

நன்றி.